Skip to main content

”சிவகார்த்திகேயனிடம் இரண்டு முறை கேட்டும் அவர் உதவவில்லை” - ’காதல்’ கண்ணன் ஆதங்கம்

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Kaadhal Kannan

 

காதல், கோ உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகர் கண்ணனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து சிறு பகுதி பின்வருமாறு... 

 

சினிமாவில் நான் அறிமுகமாகிய காதல் படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. அந்த நேரத்தில் சுனாமி மாதிரியான பிரச்சனைகள் இருந்தன. அதையும் தாண்டி அந்தப் படம் வெற்றிபெற்றது. அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் வந்தன. சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. 

 

இயக்குநராக வேண்டும் என்ற ஆசையோடுதான் சினிமாவுக்கு வந்தேன். இயக்குநர் சங்கர் என்னுடைய தூரத்துச் சொந்தம் என்பதால் அவரிடம் உதவி இயக்குநராகச் சேரலாம் என நினைத்தேன். அந்த உறவை வைத்து சினிமாவுக்குள் நுழைந்துவிடலாம் என்று நினைத்ததுதான் நான் செய்த முதல் தவறு. அவர் உறவுகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார். திறமை இருக்குறவன் எப்படி வேண்டுமானாலும் முன்னுக்கு வருவான் என்று நினைக்கக்கூடியவர் அவர். அவருடைய அலுவலகத்தில் இருந்த ஒரு துணை இயக்குநர்தான் என்னை நடிக்க அறிவுறுத்தினார். அதன் பிறகுதான் நடிக்க ஆரம்பித்தேன். நடித்த படங்களும் அடுத்தடுத்து வெற்றி பெற்று புகழ் கிடைத்ததால் நடிப்பிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

 

சிபாரிசு என்பது நல்ல விஷயம்தான். திறமையுள்ள ஒருவருக்கு சிபாரிசு செய்யலாம். நானும் சிவகார்த்திகேயனும் உறவினர்கள் என்பதால் நியூஇயர் மீட்டில் நாங்கள் சந்திப்போம். ரெமோ படத்தை முடித்துவிட்டு ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியிருந்தார். எனக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் என்று அவரிடம் கேட்டேன். போன் பண்ணியும் கேட்டிருக்கிறேன். இரண்டு முறை கேட்டும் செய்யவில்லை. மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கேட்டால் நன்றாக இருக்காது என்பதால் நானும் அப்படியே விட்டுவிட்டேன். 

 

சிலர், ஒரு வெற்றியைத் தொட்ட பிறகு நம்மை அழைப்பார்கள். சினிமா துறையில் அப்படி ஒரு நிலைமை இருக்கிறது. கடவுள் புண்ணியத்தில் துணை நடிகராகச் சின்ன புகழ் கிடைத்துள்ளது. நான் இன்னும் நிறைய தூரங்கள் கடக்க வேண்டியுள்ளது. அந்த தூரத்தைக் கடந்து செல்லும்போது நான் அவருக்கு நினைவுக்கு வரலாம். அப்போது அவர் கூப்பிடலாம். இதைத் தவறு என்று நான் சொல்லவில்லை. 

 

டாக்டர் சீட்டுக்காக ஒரு பொண்ணுக்கு உதவி செய்கிறார், உங்களுக்குச் செய்யமாட்டாரா என்று நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள். இதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்வேன். அவர் நினைத்தால் செய்ய முடியும் என்பதெல்லாம் அவருடைய மனசைப் பொறுத்தது. அதை நாம் குறை சொல்ல முடியாது. அவருடைய மனதிற்குள் நான் இன்னும் செல்லவில்லை என்று நினைக்கிறேன். என்றைக்கு அவர் மனதிற்குள் செல்கிறேனோ, அன்றைக்கு அவருடன் நான் இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது. 

Next Story

‘குரங்கு பெடல்’ - சிவகார்த்திகேயன் பட அப்டேட்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
sivakarthikeyan produced Kurangu Pedal movie update

சிவகார்த்திகேயன் தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். சென்னையில் முழு வீச்சில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 

இதனிடையே சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் சார்பில், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் டீசருடன் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ‘குரங்கு பெடல்’ என்ற தலைப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தது மட்டுமல்லாமல் அதை வெளியிடவும் செய்கிறார். கமல்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

ஃபர்ஸ்ட் லுக் டீசரில், ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் மட்டும் நடந்தே போகும் நிலையில் அக்குடும்பத்தில் இருக்கும் சிறுவனுக்கு சைக்கிள் மீது ஆர்வமும் ஆசையும் வருகிறது. பின்பு அச்சிறுவன் சைக்கிள் வாங்கினானா? வாங்கிய பிறகு அவனுடைய வாழ்க்கை எப்படி மாறியது? ஏன் அவனின் குடும்பம் மட்டும் நடந்து போகும் சூழல் ஏற்பட்டது? போன்ற கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.