Skip to main content

மோகன்லாலுடன் மீண்டும் கைகோர்க்கும் ‘த்ரிஷ்யம்’ பட இயக்குநர்!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

mohanlal

 

ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அப்படத்தைத் தொடர்ந்து, மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி 'ராம்' படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் நிறைய இருந்தன. கரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படத்தின் பணிகளைத் தொடர்வதில் சிக்கல் எழுந்ததால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

 

அதன் பிறகு, ஜீத்து ஜோசஃப் - மோகன்லால் கூட்டணி ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்தது. மிகக் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட இப்படம் சில மாதங்களுக்கு முன் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. முதல் பாகத்தைப்போல இரண்டாம் பாகமும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 

 

இந்த நிலையில், மோகன்லால் - ஜீத்து ஜோசஃப் கூட்டணி மீண்டும் ஒருமுறை இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதிய த்ரில்லர் வகை படமாக இப்படம் உருவாகவுள்ளது. '12th Man' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கவுள்ளார். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட முதற்கட்ட பணிகளைத் தற்போது முடுக்கிவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

“நேர்மையான அரசியல்வாதி” - விஜயகாந்த் குறித்து மோகன்லால்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
mohanlal about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் மம்மூட்டி, “விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பு திரையுலகினர், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிக வருத்தமான ஒன்று. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மோகன்லால், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.