jayam ravi applied divorce from his wife aarthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இதில் ஒரு குழந்தையான ஆரவ், ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும் என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜெயம் ரவியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.

இந்த சூழலில் ஜெயம் ரவி தரப்பில் மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.இன்று ஜெயம் ரவியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.