Skip to main content

வேலை நிறுத்தம் எதிரொலி - தள்ளிப்போகும் 'ஜெயிலர்'!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

jailer movie shoot postponed

 

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார்.

 

இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்களான நிலையில் படப்பிடிப்பை படக்குழு தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பீஸ்ட் படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் நெல்சன் அதீத கவனம் செலுத்தி வருவதால் படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் நெல்சன் ஜெயிலர் படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்து, ரஜினியின் கதாபாத்திரத்தை கூடுதல் மெருகேற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனிடையே ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறவிருந்தது. அதற்காக அங்கு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓடிடி வெளியீடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி தெலுங்கு திரையுலகினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு  பணிகள் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.