Skip to main content

“எனக்காக வடிவேலையே வேணாம்னு சொல்லிட்டாங்க” -  இமான் அண்ணாச்சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் 

Published on 22/09/2022 | Edited on 28/09/2022

 

imman annachi share personal experience

 

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர், நிகழ்ச்சி போன்றவற்றில்  அருமையான நெல்லை தமிழ் உடன் நகைச்சுவையாக பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இமான் அண்ணாச்சியை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் அவர் நம்முடன் பகிர்ந்துக்கொண்டவை பின்வருமாறு... 

 

“முதன் முதலில் நான் சென்னைக்கு வந்த பிறகு இயக்குநர் கௌதமன் ஆட்டோ சங்கர் என்ற தொடரில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதில் நல்லா நடித்ததன் காரணமாக வீரப்பன் தொடரான சந்தனக்காடு தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் தொடர்ச்சியாக எனக்கு ஆதித்யா சேனலிலிருந்து அழைப்பு வந்தது.அங்கு சொல்லுங்கண்ணே...சொல்லுங்க என்ற ஒரு நிகழ்ச்சி பண்ணேண். தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு சென்று நடத்திய இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றது. 

 

அந்த மாதிரி நேரத்தில் ஒரு நாள் சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் சாருக்கு அவரது நண்பர் ஒருவர் போன் பண்ணி, ‘சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க நிகழ்ச்சியில் நெல்லை தமிழ்ல காமெடி பண்ணிட்டு இருக்குறாரே நீ பாத்தியா என்று கேட்க, அவரு இன்னும் இல்லப்பா, அது என்னன்னு பார்க்கிறேன்’ என்று கூறிவிட்டு, என்னுடைய நிகழ்ச்சியை பார்த்துள்ளார். அதன் பிறகு சன் டிவிக்கு ஒரு  நிகழ்ச்சி பண்ணிக் கொடுக்கச் சொல்லி அழைப்பு வந்தது. நானும் அதனையேற்று சன் டிவிக்கு போனேன், அண்ணாச்சி இது குழந்தைகளை வைத்து பண்ற ஷோ செம்மையா உங்க பாணியில் பண்ணிக்கொடுத்துடுங்கன்னு சொன்னாங்க. ஆனால் ‘இது என்னால் முடியாது, பெரியவங்க கிட்ட பேசவே பெரும்பாடுபட்டு இருக்கேன், இதுல குழந்தைகள் கிட்ட எல்லாம் என்னால் பேச முடியாது ஆளா விடுப்பா சாமின்னு’ சொன்னேன். ஆனால் அந்த ப்ரோக்ராம் ஹெட், ’இல்ல சார் இந்த நிகழ்ச்சியை வடிவேலு சார்தான் பண்ணப்போறாங்க, அதற்கான பேச்சு வார்த்தை நடந்துட்டு இருக்கு. அதுக்கு  ட்ரையல்  ஷோ மட்டும் நீங்க பண்ணி கொடுங்கன்னு’ சென்னார். சரி நானும் ட்ரையல்  தானே என்று நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டேன். ஷூட்டுக்கு எல்லாரும் ரெடியாகி வந்தாங்க, ஷூட்டிங்கும் ஆரம்பிச்சாங்க, என்கிட்ட வந்து சொன்னங்க, ‘எப்படி இருக்கீங்க, எங்க இருந்து வரீங்கன்னு’ அமைதியா கேளுங்கன்னு சொன்னாங்க, நமக்குத்தான் அதெல்லாம் வராதே. நான் எடுத்தவுடனேயே, 'ஏலேய் உன் பேரு என்ன... ஏலேய் உன்னைத்தான், என்ன பேந்த பேந்தன்னு முழிக்கிறன்னு’ கேட்டேன். எல்லாம் என்ன ஒரு மாதிரி பார்த்தங்க, குழந்தைகள் கிட்ட இப்படி எல்லாம் பேசலாமான்னு. அப்படியே அந்த ஷூட்ங்க முடித்துவிட்டு வீட்டுக்கு போயிட்டேன்.   

 

அடுத்தநாளே எனக்கு சன் டிவியிலிருந்து கால் வந்துச்சு. இந்த நிகழ்ச்சியை நீங்க மட்டும் தான் பண்ணனும்னு மேல இருந்து சொல்லிட்டாங்க நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது, நீங்கதான் பண்ணனும்ன்னு சொல்லிட்டாங்க. குழந்தைகளை வச்சு என்னையா பண்ணமுடியும், அப்படி இப்படின்னாலும் மூணு எப்பிஸோட தாண்ட முடியாதுன்னு சொன்னேன். ஆனால் அவங்க விடவே இல்லை பண்ணா நீங்கதான் பண்ணனும்னு பிடிவாதமாக இருந்தாங்க. அப்படி பண்ணதுதான் இந்த குட்டி சுட்டீஸ் ஷோ. கடைசியில பார்த்த இது பயங்கரமாக ஹிட்டாயிடுச்சு".  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன்...” - அனுபவம் பகிர்ந்த வடிவேலு 

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vadivelu about maamanna in  ciff

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்த்தொழில், ராவணக் கோட்டம், சாயவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், உடன்பால் மற்றும் விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. மேடையில் பேசிய அவர், “அழுகிற சீனெல்லாம் இப்போது ஒர்க்கவுட்டாகாது. அப்படி இருந்தும் மாமன்னன் படத்தை நீங்க பார்த்து ரசிச்சிருக்கீங்க. அதை எப்படி ஏத்துக்கிட்டீங்கன்னு புரியல. அழுததுக்கு விருது கொடுத்திருக்கீங்க. அதுதான் என்னுடைய வாழ்க்கையும் கூட. அது படம் அல்ல என்னுடைய வாழ்வியல். இந்த வெற்றி, மாரி செல்வராஜுக்கு சேர வேண்டும். அவர் வெற்றிமாறன் மாதிரி. இந்த வயசில் அவருடைய அனுபவம், நம்ம பட்ட கஷ்டத்தையெல்லாம் சொல்றாரு. 

மாமன்னன் படத்தில் இருக்கிற எல்லா சீனையும் புரட்டி போட்டு பார்த்தா, எல்லாமே காமெடி சீனாத்தான் இருக்கும். இதை மாரி செல்வராஜே என்னிடம் சொன்னார். இப்போ இருக்கிற டைரக்டர் எல்லாம், நடிகர்கள் சத்தமா பேசுனா, நம்ம உடல் மொழியில் கத்தாம மெல்ல ஆக்ட் பண்ணு எனச் சொல்கின்றனர். எல்லா ஷூட்டிங் ஸ்பாட்டிலும் நம்ம உடல் மொழிதான் ஓடிக்கிட்டு இருக்கு. நம்ம கலவை இல்லாத இடமே இல்லை என்கிறபோது ரொம்ப சந்தோசமா இருக்கு.  

ஒரே ஒரு மாமன்னன் படம்தான் பண்ணேன். வர கதையெல்லாம் சோக கதையா இருக்கு. ஒரே அழுகை. அதனால் ஒரு 5 வருஷம் கழிச்சு இது மாதிரி கதையை பார்ப்போம் என முடிவெடுத்துள்ளேன். மாமன்னன் படத்தில் டைரக்டர் அவருடைய வலியையும் சொல்லியிருந்தார். ஏழை மக்களின் வலியையும் சொல்லியிருந்தார். அந்த கதைக்கு விருது வாங்கினது ரொம்ப பெருமை” என்றார்.  

Next Story

சென்னை சர்வதேச திரைப்பட விழா; விருதுகளும் பரிசுகளும்!

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
 21st Chennai international film festival

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறது. 

இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தோழில், விக்ரம் சுகுமாரனின் ராவண கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டு படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக உடன்பால் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது.

மாமன்னன் படத்துக்காக வடிவேலுவுக்கு சிறந்த நடிகர் விருது கொடுக்கப்பட்டது. அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்த்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்த்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.