Skip to main content

“அப்போ மங்காத்தாவா? என உடனே கேட்பார்கள்” - ‘துணிவு’ படம் குறித்து ஹெச்.வினோத்

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

h.vinoth about ajith in thunivu

 

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம், பாங்காக் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தது. 

 

மேலும், இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சஷன் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தில் அனிருத் 'சில்லா சில்லா' என்ற பாடலையும் மஞ்சுவாரியர் ஒரு பாடலையும் பாடியுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதால் விரைவில் டீசர், ட்ரைலர், இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட அப்டேட்டுகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. 

 

இந்நிலையில், 'துணிவு' படம் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு ஹெச்.வினோத் பல நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், "இப்படம் பணம் சம்பந்தமான படம். பணம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்று. ஆனால், பணம் என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? என்று கேட்டால், யாருக்கும் ஒரு யோசனை இருக்காது. அதுதான் இப்படத்தின் அடிப்படைக் கரு. இது பணத்தை பத்தின ஒரு படம். மல்டி ஜானர் படம், ஒரு ஜானருக்குள் அடக்க முடியாது. சுருக்கமா சொல்லணும்னா இது ஒரு அயோக்கியர்களின் ஆட்டம்" எனக் கூறினார்.

 

மேலும், நெகட்டிவ் ரோலில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டது தொடர்பாக அவர் பதிலளித்தது, "இதற்கு ஆமாம் எனச் சொன்னால். உடனே ‘அப்போ மங்காத்தாவா?’ எனக் கேட்பார்கள். அவங்க சொந்தக் கற்பனையைச் சொல்றதுதான் இங்க பிரச்சனை. இப்படத்தில் மக்களுக்குப் பிடித்த அனைத்து விஷயங்களும் இருக்கும். அஜித் சாரிடம் நான் அரசியல் பற்றி பேசியதில்லை. தனிப்பட்ட விஷயங்களையோ அல்லது அரசியல் தொடர்பான பேச்சுகளோ நாங்கள் இதுவரை பேசியதில்லை. அப்படியே யாராவது அரசியல் குறித்துப் பேசினால், அந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று மரியாதையுடன் கூறுவார்" எனப் பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார் கவிழ்ப்பு - பதறவைக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு வீடியோ

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajithkumar vidaamuyarchi shooting spot video

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின், திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அப்போது கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இதையடுத்து படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தினார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஜனவரி மாதம் அஜர்பைஜானில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிப்பு வெளியானது. அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு கடந்த மாதம், அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சிகைச்சை பெற்று வீடு திரும்பினார். பின்பு தான் நடத்தி வரும் பைக் கம்பெனியின் பணிகளை மேற்கொண்டார். மீண்டும் பைக் பயணத்தில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு காரில் அஜித்தும் ஆரவ்வும் பயணிக்கின்றனர். அப்போது கார் கவிழ்ந்து விழுகிறது. இந்த காட்சி கடந்த நவம்பரில் படமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் - புகைப்படங்கள் வைரல்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
ajith kumar in cricketer natarajan birthday party

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். ஐபிஎல் தொடரில்,  சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவருடைய பந்துவீச்சு, பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக “யார்க்கர் கிங்” என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடினார். அப்போது இந்திய அணி வெற்றி பெற அவருடைய பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனிடையே தனது சொந்த ஊரில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது பயோ-பிக் உருவாகுவதாகவும் அதில் சிவகார்த்திகேயன் நடராஜனாக நடிக்கவுள்ளதாகவும் 2022ஆம் ஆண்டு தகவல் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் அதுகுறித்து வெளியாகவில்லை. 

ajith kumar in cricketer natarajan birthday party

இந்த நிலையில், இன்று நடராஜன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். மேலும் நடராஜனுக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த விழா நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட், பேட், அக்லி படத்தில் நடிக்கவுள்ளார்.