Skip to main content

“தீபக் ராஜா கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது” - ஹிப் ஹாப் ஆதி

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Hip Hop Adhi said I know nothing about Deepak Raja case

திருச்சி மாரிஸ் எல்.ஏ.  திரையரங்கில் நேற்று(26.5.2024) ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பி.டி. சார் திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்படத்தின் இடைவேளையில் தோன்றிய படத்தின் கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி, ரசிகர்களிடம் இந்த திரைப்படத்தை வெற்றி அடையச் செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திரையரங்கில் ஹிப் ஹாப் பாடலை ஆதி பாட, ரசிகர்களும் அவருடன் இணைந்து பாடினர்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஹிப் ஹாப் ஆதி, “படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி. இரவு காட்சி திருச்சியில் 800 இருக்கைகளுக்கு மேல் கொண்ட இந்த திரையரங்கில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் கூட்டமாக வந்து படத்தை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இங்கு வந்தபோது ரசிகர்கள் எங்களை வரவேற்ற விதம் எங்களது களைப்பை போக்கிவிட்டது. இத்தகைய ரசிகர்கள் எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. நான் கொடுத்து வைத்தவன். சில யூடியூப்களில் இத்திரைப்படத்தை பற்றி நெகட்டிவ் கமெண்ட்ஸ் வருவதை பற்றி எனக்கு கவலை இல்லை. அது அவர்களின் கருத்து. திரையரங்குகளில் இந்த படத்தின்  வெற்றியை நீங்களே பார்க்கின்றீர்கள். அப்படி எதுவும் குறை இருந்தால் அதை அடுத்தடுத்த படங்களில் நிவர்த்தி செய்வேன். தொடர்ந்து நல்ல படைப்புகளை தருவேன் நடிகர்,  இசையமைப்பாளர், ஹிப் ஹாப் பாடகர் என என்னை அனைத்து பரிமாணங்களிலும் பார்க்கலாம். நான் கலைஞனாக சமுதாய கருத்துள்ள படைப்புகளை கொடுக்கவே விருப்பப்படுவேன்” என்றார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த ஆதியிடம், நெல்லையில் தீபக் ராஜா கொல்லப்பட்டதற்கு பா.ரஞ்சித்தின் கருத்து குறித்து நீங்கள் என்னை நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பபட்டது. அதற்கு,  ஆணவக் கொலையா? என்று கேட்ட ஆதி, எனக்கு இந்த கொலையைப் பற்றி எதுவும் தெரியாது; முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்கிறேன். தெரியாததைப் பற்றி எப்படி கருத்துசொல்ல முடியும். ஆணவக் கொலைக்கு என்றைக்கும் நான் எதிரானவன்; நான் மட்டுமல்ல இங்க இருக்க எல்லாரும் ஆணவக் கொலைக்கு எதிரானவர்கள்தான் என பதிலளித்தார்.

மேலும், “ஆணவக் கொலைக்கு எதிராக நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஹிப் ஹாப் பாடல் எழுதியுள்ளேன்” என கூறி அப்பாடலில் சில வரிகளை பாடிக் காட்டினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியபோக்கே காரணம்” - பா.ரஞ்சித் காட்டம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Pa. Ranjith condemned the Tamil Nadu government in the illegal liquor

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 36 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பா.ரஞ்சித்திற்கு எதிராக பரமக்குடியில் புகார்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
complaint against pa ranjith

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் ராஜா (வயது 35). இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி மதியம் 02:00 மணியளவில், தான் திருமணம் செய்து கொள்ளும் பெண் மற்றும் அவரது தோழிகளுடன் சேர்ந்து கே.டி.சி நகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். பின்பு தனது வாகனத்தை எடுப்பதற்காக வெளியே வந்த போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் தீபக் ராஜாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதில் சம்பவ இடத்திலேயே தீபக் ராஜா துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாகத் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் கொலை வழக்குடன் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்த பிறகே தீபக் ராஜ் உடலை வாங்குவோம் எனக் கூறி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம், அவர்களது எக்ஸ் பக்கத்தில், “திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை, நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால்  படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா, பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம். சக மனிதனைப் படுகொலை செய்யும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் பா.ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார் எனக் கூறி ராமநாதபுரம் பரமக்குடி டி.எஸ்.பி சபரிநாதனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெயரைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.