Skip to main content

"என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டீங்க... அதை நீக்கிருங்கனு விஜய் சொன்னார்" - 'ப்ரியமானவளே' பட நினைவுகளை பகிர்ந்த செல்வபாரதி! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Director Selvabharathi

 

வசனகார்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'நினைத்தேன் வந்தாய்' மற்றும் 'ப்ரியமானவளே' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"நான் தனியாக படம் பண்ணலாம் என்று நினைத்து சுந்தர் சி-யிடம் இருந்து தனியாக வந்திருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் தாணு சார் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது விஸ்வநாதன் என்ற மேனேஜர் வந்து செல்வபாரதி நீங்கதானே என்றார். நான் ஆம் என்றவுடன் உங்களை இயக்குநர் ராகவேந்திரா சார் அழைத்துவரச் சொன்னார் என்றார். உடனே அவர் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு ராகவேந்திரா சார், அல்லு அரவிந்த் சார் என பெரிய பெரிய ஆட்களாக இருந்தனர். இங்கு எதற்கு நம்மை அழைத்தார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ரைட்டர் நீங்கதான... நான் படம் பார்த்தேன்... நல்லா இருந்தது என்றார். மேலும், நான் பெல்லி சந்தடி என்று தெலுங்கில் ஒரு படம் பண்ணிருக்கேன். அதை நீங்கள் தமிழில் பண்ணனும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் டயலாக் எழுத கேட்கிறார் என்று நினைத்து எழுதிறலாம் சார் என்றேன். அவர் உடனே இடைமறித்து, நீங்கள் டைரக்ட் பண்ணனும் என்றார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.

 

முதல் படமே ரீமேக் பண்ண வேண்டாம். உன்னை ரீமேக் டைரக்டர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று என் நண்பர்கள் எச்சரித்தனர். எனக்கும் ரொம்ப குழப்பமாகிவிட்டது. இருந்தாலும், அவ்வளவு பெரிய ஆளிடம் சரி பண்ணுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டோம். இனி போய் நான் பண்ணலனு சொன்னால் நல்லா இருக்காது என்று நினைத்து அந்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன். பின், கார்த்திக் சாரிடம் சென்று அந்தக் கதையை கூறினேன். அவர் ஒரு சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர் அதைவிட குறைவாகக் கூறினார். இதற்கிடையே பிரபு சாரை வைத்து படம் பண்ணவும் வாய்ப்பு வந்தது. சம்பள விவகாரம் காரணமாக படம் இழுத்துக்கொண்டே சென்றது. வேறொரு வேலை காரணமாக சாலிகிராமம் வழியாக நானும் என் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது எஸ்.ஏ.சி. சார் அலுவலகத்தை கடக்கையில், விஜய் சாரை கேட்டுப் பார்ப்போமா என்று என் நண்பனிடம் கேட்டேன். அவரும் கேட்டுத்தான் பார்ப்போமே என்றார். 

 

ad

 

நான் மணிவண்ணன் சாரோட இணை இயக்குநர், சுந்தர் சி-யோட இந்த இந்த படத்தில் எல்லாம் ரைட்டரா வொர்க் பண்ணிருக்கேன். இப்போ தனியா படம் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று எஸ்.ஏ.சியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவர், என்ன படம்... யார் தயாரிப்பாளர் என்று கேட்டார். பெல்லி சந்தடி தமிழ் ரீமேக்... ராகவேந்திரா சார் தயாரிப்பு என்று கூறியவுடன் அவருக்கு ஆச்சர்யம். நான் படம் பார்க்க வேண்டும் என்றார். உடனே அவர் படம் பார்க்க ஏற்பாடு செய்தோம். எஸ்.ஏ.சி, விஜய், அவருடைய அம்மா என மூன்று பேரும் படம் பார்த்தார்கள். அவர்களுக்கு படம் பிடித்திருந்ததால், விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அந்த சமயத்தில்தான் பூவே உனக்காக படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. விஜய் என்னுடைய படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. 

 

அப்படியே படத்தின் வேலைகள் தொடங்கின. நான் அவரை தம்பி என்றுதான் அழைப்பேன். ஒரு இயக்குநர் அவரை தம்பி என்று அழைப்பது அதுதான் முதல்முறையாம். முதல்முறை கூப்பிட்டதும் ரொம்ப ஷாக் ஆகிட்டார். அதன் பிறகு, அவரும் அண்ணன் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார். மாண்டலின் வச்சு ஒரு போட்டோஷூட் எடுத்தோம். அந்த ஸ்டில் பல வருடங்களுக்கு ரொம்ப பிரபலமாக இருந்தது. வண்ணநிலவே பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு தினமும் அவரை நடிக்கச் சொல்லி படமாக்கினேன். எதுக்குணே இதை தினமும் எடுக்குறீங்க என்று அவரே ஒருநாள் கேட்டுவிட்டார். நான் இதை கொஞ்சம் வித்தியாசமாக எடிட் செய்யலாம் என்று நினைத்துள்ளேன் என அவருக்கு சொல்ல, அவரும் தொடர்ந்து நடித்துக்கொடுத்தார். படம் வெளியானபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 

பின், ப்ரியமானவளே படத்தில் மீண்டும் இணைந்தோம். அதுவும் தெலுங்கு ரீமேக் படம்தான். அந்தப் படத்தின் கதையை நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எங்கள் இருவருக்குமே குழப்பம் இருந்தது. அதையெல்லாம் சரி செய்ய படத்தில் வசனத்தை மாற்றி எழுதினோம். படத்தில் சிம்ரனுக்கு லாங்குவேஜ் பிரச்சனை இருந்தது. சில காட்சிகள் 30 டேக் வரைக்கும் போனது. ஆனால், ரொம்ப பொறுமையாக இருந்து நடித்துக்கொடுத்தார் விஜய். பிரியமானவளே படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் டெலிவரிக்காக விஜய்யின் மனைவி லண்டன் சென்றிருந்தார். விஜய்யும் உடன் சென்றார். குழந்தை பிறந்ததும் நான் வந்துவிடுவேன். அதன் பிறகு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவிட்டுதான் விஜய் சென்றார். ஆனால், குழந்தை பிறக்க தாமதமாகியது. விஜய் என்னிடம் விஷயத்தை கூற, நான் ஷூட்டிங்கை தொடங்கி மற்றவர்கள் காட்சியை எடுக்கிறேன். நீங்கள் குழந்தை பிறக்கவும் வாருங்கள் என்றேன். அவர் சரி என்றுவிட்டார். ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் குழந்தை பிறக்கும் நாள் தள்ளிப்போனது. நான் அப்போதும் எந்த பிரச்சனையுமில்லை... குழந்தை பிறக்கவுமே வாருங்கள் என்றேன். மூன்றாவது முறையாகவும் குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனவுடன் என்னிடம் சொல்லாமலேயே விஜய் கிளம்பிவந்துவிட்டார். இங்கு அவர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக லண்டனில் இருந்து செய்தி வந்தது. வேறெந்த நடிகராக இருந்தாலும் நிச்சயம் இப்படி வந்திருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் படத்தில் நடித்தார் விஜய்.  

 

படத்தில் ஒரு காட்சிக்காக பெண் வேடமணிய வேண்டும் என்று விஜய்யிடம் தொடக்கத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால், ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று கூறி அவர் மறுத்துக்கொண்டே இருந்தார். பையன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தவரிடம் சென்று கேட்டதும் எப்படியெல்லாம் வேணுமோ எடுத்துக்கோங்க என்றுவிட்டார். நான் இதுதான் சமயம் என்று நினைத்து லேடி கெட்டப்பில் அவர் வரும் காட்சியை எடுத்துவிட்டேன். மறுநாள், என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டிங்க... இதுலாம் வேண்டாம்ணே... நீக்கிருங்க என்றார். பின், அவரிடம் எடுத்துச் சொல்லி மனதை மாற்றினேன்". 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது.