Skip to main content

'சச்சின் கெட்டப்பில் விஜய்...'  ரகசியம் பகிரும் வசீகரா இயக்குநர் செல்வபாரதி!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Director Selvabharathi

 

வசனகர்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய வசீகரா திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

முந்தைய பகுதி....

 

வசீகரா படம் கமிட் ஆனவுடன் முதல் சந்திப்பிலேயே நடிகர் விஜய்யிடம் ஒரு விஷயத்தைக் கூறினேன். விஜய்யின் முந்தைய 5 படங்களில் இருந்து ஒவ்வொரு பாடலை பதிவு செய்து அதை விஜய்யிடம் கொடுத்து பார்க்க சொன்னேன். அவர் எதற்கு எனக் கேட்க, நீங்கள் பாருங்க தம்பி சொல்றேன் என்றேன். அவர் 5 பாடல்களை பார்த்து முடித்ததும் எதுக்குணே இதை பார்க்கச் சொன்னீங்க என்றார். 5 பாடல்களிலும் ஹீரோயின்தான் மாறி இருக்கு... நீங்க அப்படியே இருக்கீங்க... ஹேர் ஸ்டைல், மீசை, காஸ்டியூம் எல்லாம் அப்படியே இருக்கு என்றேன். உடனே விஜய் இப்ப என்ன சொல்ல வர்றீங்க என்றார். இந்தப் படத்துல கெட்டப்ப மாத்தணும்... பாடி லாங்குவேஜூம் மொத்தமா வேற மாதிரி இருக்கணும்... உதடே அசையாம டயலாக் பேசுறதையும் மாற்றவேண்டும் என்றேன். அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார். 

 

விஜய்யை வித்தியாசமாக எப்படி காட்டலாம் என்று நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். பல நாட்கள் யோசித்தும் எனக்கு எந்த ஐடியாவும் வரவில்லை. அந்த சமயத்தில் சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருந்தார். அது விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது. மறுநாள் விஜய்யிடம் சென்று சொன்னேன். முதலில் யோசித்த அவர், பின் சரியெனக் கூறிவிட்டார். அந்த ஹேர்ஸ்டைல் வைத்துவிட்டு மறுநாள் என்னை அழைத்தார். நேரில் பார்த்ததும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. விஜய்க்கும் பொருத்தமாக இருந்தது. அவருடைய கெட்டப்பை மாற்றியது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸாக அமைந்தது. 

 

படத்தில் விஜய் சாரின் செயல்கள் எம்.ஜி.ஆர்போல இருக்கிறது என்று சொன்னார்கள். அதற்கு பின்னால் ஒரு கதை உள்ளது. ரயிலில் தூங்கிக்கொண்டு வருவதுதான் படத்தின் அறிமுகக்காட்சியாக எழுதியிருந்தேன். நினைத்தேன் வந்தாய் படத்திலும் அதுபோன்றுதான் அறிமுகக்காட்சி இருக்கும். சென்டிமெண்டாக இதையே வைத்துக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றினாலும், வசீகரா பண்ணும்போது விஜய்க்கு பெரிய மாஸ் இருந்ததால் அதற்கேற்ற மாதிரி அறிமுகக்காட்சியை மாற்றினோம். விஜய்யை எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற தலைவராக காட்டியது எல்லாம் பின்னால் எடுத்த முடிவுதான்.  

 

சுந்தர் சி இயக்கிய வின்னர் படம் விஜய் நடிக்க வேண்டியதுதான். அந்தக் கதையை சுந்தர் சி விஜய்யிடம் கூறியபோது நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். படம் வெளியான பிறகு, நான் இந்தப் படத்தை மிஸ் பண்ணிட்டேன் அண்ணா என்று விஜய் சொன்னார். விஜய்யை பொறுத்தவரை எந்த ஜானரில் படம் நடித்தாலும் அதற்கேற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொள்வார். இன்றைக்கும் அவரால் ப்ரெண்ட்ஸ், காதலுக்கு மரியாதை மாதிரியான படங்களில் நடிக்க முடியும். பெரிய மாஸ் வந்துவிட்டது, நூறு கோடியைத் தாண்டிய பிசினஸ் வேல்யூ ஆகிய காரணங்களால்தான் ஆக்ஷன் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.  

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.