Skip to main content

"என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டீங்க... அதை நீக்கிருங்கனு விஜய் சொன்னார்" - 'ப்ரியமானவளே' பட நினைவுகளை பகிர்ந்த செல்வபாரதி! 

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Director Selvabharathi

 

வசனகார்த்தாவும் இயக்குநருமான செல்வபாரதி, நக்கீரனுடனான முந்தைய சந்திப்பில் தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அந்த சந்திப்பில் விஜய்யை வைத்து அவர் இயக்கிய 'நினைத்தேன் வந்தாய்' மற்றும் 'ப்ரியமானவளே' திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

"நான் தனியாக படம் பண்ணலாம் என்று நினைத்து சுந்தர் சி-யிடம் இருந்து தனியாக வந்திருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் தாணு சார் அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது விஸ்வநாதன் என்ற மேனேஜர் வந்து செல்வபாரதி நீங்கதானே என்றார். நான் ஆம் என்றவுடன் உங்களை இயக்குநர் ராகவேந்திரா சார் அழைத்துவரச் சொன்னார் என்றார். உடனே அவர் அலுவலகத்திற்கு சென்றேன். அங்கு ராகவேந்திரா சார், அல்லு அரவிந்த் சார் என பெரிய பெரிய ஆட்களாக இருந்தனர். இங்கு எதற்கு நம்மை அழைத்தார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ரைட்டர் நீங்கதான... நான் படம் பார்த்தேன்... நல்லா இருந்தது என்றார். மேலும், நான் பெல்லி சந்தடி என்று தெலுங்கில் ஒரு படம் பண்ணிருக்கேன். அதை நீங்கள் தமிழில் பண்ணனும் என்றும் கேட்டுக்கொண்டார். நான் டயலாக் எழுத கேட்கிறார் என்று நினைத்து எழுதிறலாம் சார் என்றேன். அவர் உடனே இடைமறித்து, நீங்கள் டைரக்ட் பண்ணனும் என்றார். நானும் சரி என்று கூறிவிட்டேன்.

 

முதல் படமே ரீமேக் பண்ண வேண்டாம். உன்னை ரீமேக் டைரக்டர் என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்று என் நண்பர்கள் எச்சரித்தனர். எனக்கும் ரொம்ப குழப்பமாகிவிட்டது. இருந்தாலும், அவ்வளவு பெரிய ஆளிடம் சரி பண்ணுகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டோம். இனி போய் நான் பண்ணலனு சொன்னால் நல்லா இருக்காது என்று நினைத்து அந்த முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன். பின், கார்த்திக் சாரிடம் சென்று அந்தக் கதையை கூறினேன். அவர் ஒரு சம்பளம் கேட்டார். தயாரிப்பாளர் அதைவிட குறைவாகக் கூறினார். இதற்கிடையே பிரபு சாரை வைத்து படம் பண்ணவும் வாய்ப்பு வந்தது. சம்பள விவகாரம் காரணமாக படம் இழுத்துக்கொண்டே சென்றது. வேறொரு வேலை காரணமாக சாலிகிராமம் வழியாக நானும் என் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது எஸ்.ஏ.சி. சார் அலுவலகத்தை கடக்கையில், விஜய் சாரை கேட்டுப் பார்ப்போமா என்று என் நண்பனிடம் கேட்டேன். அவரும் கேட்டுத்தான் பார்ப்போமே என்றார். 

 

ad

 

நான் மணிவண்ணன் சாரோட இணை இயக்குநர், சுந்தர் சி-யோட இந்த இந்த படத்தில் எல்லாம் ரைட்டரா வொர்க் பண்ணிருக்கேன். இப்போ தனியா படம் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று எஸ்.ஏ.சியிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன். அவர், என்ன படம்... யார் தயாரிப்பாளர் என்று கேட்டார். பெல்லி சந்தடி தமிழ் ரீமேக்... ராகவேந்திரா சார் தயாரிப்பு என்று கூறியவுடன் அவருக்கு ஆச்சர்யம். நான் படம் பார்க்க வேண்டும் என்றார். உடனே அவர் படம் பார்க்க ஏற்பாடு செய்தோம். எஸ்.ஏ.சி, விஜய், அவருடைய அம்மா என மூன்று பேரும் படம் பார்த்தார்கள். அவர்களுக்கு படம் பிடித்திருந்ததால், விஜய் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அந்த சமயத்தில்தான் பூவே உனக்காக படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றிருந்தது. விஜய் என்னுடைய படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. 

 

அப்படியே படத்தின் வேலைகள் தொடங்கின. நான் அவரை தம்பி என்றுதான் அழைப்பேன். ஒரு இயக்குநர் அவரை தம்பி என்று அழைப்பது அதுதான் முதல்முறையாம். முதல்முறை கூப்பிட்டதும் ரொம்ப ஷாக் ஆகிட்டார். அதன் பிறகு, அவரும் அண்ணன் என்று என்னை அழைக்க ஆரம்பித்தார். மாண்டலின் வச்சு ஒரு போட்டோஷூட் எடுத்தோம். அந்த ஸ்டில் பல வருடங்களுக்கு ரொம்ப பிரபலமாக இருந்தது. வண்ணநிலவே பாடலின் முதல் இரண்டு வரிகளுக்கு தினமும் அவரை நடிக்கச் சொல்லி படமாக்கினேன். எதுக்குணே இதை தினமும் எடுக்குறீங்க என்று அவரே ஒருநாள் கேட்டுவிட்டார். நான் இதை கொஞ்சம் வித்தியாசமாக எடிட் செய்யலாம் என்று நினைத்துள்ளேன் என அவருக்கு சொல்ல, அவரும் தொடர்ந்து நடித்துக்கொடுத்தார். படம் வெளியானபோது நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 

பின், ப்ரியமானவளே படத்தில் மீண்டும் இணைந்தோம். அதுவும் தெலுங்கு ரீமேக் படம்தான். அந்தப் படத்தின் கதையை நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று எங்கள் இருவருக்குமே குழப்பம் இருந்தது. அதையெல்லாம் சரி செய்ய படத்தில் வசனத்தை மாற்றி எழுதினோம். படத்தில் சிம்ரனுக்கு லாங்குவேஜ் பிரச்சனை இருந்தது. சில காட்சிகள் 30 டேக் வரைக்கும் போனது. ஆனால், ரொம்ப பொறுமையாக இருந்து நடித்துக்கொடுத்தார் விஜய். பிரியமானவளே படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த நேரத்தில் டெலிவரிக்காக விஜய்யின் மனைவி லண்டன் சென்றிருந்தார். விஜய்யும் உடன் சென்றார். குழந்தை பிறந்ததும் நான் வந்துவிடுவேன். அதன் பிறகு, திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்கலாம் என்று கூறிவிட்டுதான் விஜய் சென்றார். ஆனால், குழந்தை பிறக்க தாமதமாகியது. விஜய் என்னிடம் விஷயத்தை கூற, நான் ஷூட்டிங்கை தொடங்கி மற்றவர்கள் காட்சியை எடுக்கிறேன். நீங்கள் குழந்தை பிறக்கவும் வாருங்கள் என்றேன். அவர் சரி என்றுவிட்டார். ஷூட்டிங்கும் தொடங்கிவிட்டது. இரண்டாவது முறையாக மீண்டும் குழந்தை பிறக்கும் நாள் தள்ளிப்போனது. நான் அப்போதும் எந்த பிரச்சனையுமில்லை... குழந்தை பிறக்கவுமே வாருங்கள் என்றேன். மூன்றாவது முறையாகவும் குழந்தை பிறக்கும் தேதி தள்ளிப்போனவுடன் என்னிடம் சொல்லாமலேயே விஜய் கிளம்பிவந்துவிட்டார். இங்கு அவர் படப்பிடிப்பில் இருந்த நேரத்தில்தான் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக லண்டனில் இருந்து செய்தி வந்தது. வேறெந்த நடிகராக இருந்தாலும் நிச்சயம் இப்படி வந்திருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் படத்தில் நடித்தார் விஜய்.  

 

படத்தில் ஒரு காட்சிக்காக பெண் வேடமணிய வேண்டும் என்று விஜய்யிடம் தொடக்கத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு இருந்தேன். ஆனால், ரசிகர்கள் கிண்டல் செய்வார்கள் என்று கூறி அவர் மறுத்துக்கொண்டே இருந்தார். பையன் பிறந்த மகிழ்ச்சியில் இருந்தவரிடம் சென்று கேட்டதும் எப்படியெல்லாம் வேணுமோ எடுத்துக்கோங்க என்றுவிட்டார். நான் இதுதான் சமயம் என்று நினைத்து லேடி கெட்டப்பில் அவர் வரும் காட்சியை எடுத்துவிட்டேன். மறுநாள், என்னணே லேடி கெட்டப்ல எடுத்துட்டிங்க... இதுலாம் வேண்டாம்ணே... நீக்கிருங்க என்றார். பின், அவரிடம் எடுத்துச் சொல்லி மனதை மாற்றினேன்". 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.