கிராம பின்புலம் கொண்ட கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடைசியாக வெளியான 'புலிக்குத்தி பாண்டி' திரைப்படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் முயற்சியில் இருந்த முத்தையா, கடந்த சில மாதங்களாக அப்படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ‘கொம்பன்’ கூட்டணியான கார்த்தி - முத்தையா கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு ‘விருமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபல இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சூர்யா, இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகும் அதிதி ஷங்கருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.