Skip to main content

“இதெல்லாம் ‘பி.எஸ் 2’ வில் இருந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும்” - படக்குழுவுக்கு கௌதமன் எச்சரிக்கை

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

director gowthaman talk about ponniyin selvan movie

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் பொன்னியின் செல்வன் படம் குறித்து கலவையான விமர்சனத்தை வைத்து வருகின்றனர். 

 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கௌதமன், "பொன்னியின் செல்வன் படம் வெற்றி பெறுவது, வசூலை வாரி குவிப்பது எல்லாம் மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால், 50 ஆயிரம் ஆண்டு பழமையான தமிழ் இனத்தின் வரலாற்றை கூறும் போது சரியாக சொல்ல வேண்டும். உலகத்தில் எத்தனையே பேரரசு இருந்திருக்கிறது. ஆனால் சோழ பேரரசு மட்டும் தான் 350 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மன்னர்  வழிவந்தவர்கள் ஆண்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பேரரசை சொல்லும் பொழுது நீங்கள் தமிழ் உணர்வுடன் சொல்வது என்பது மிகவும் முக்கியமானது. சோழர்களுடைய கொடி புலிக்கொடி என்று உலகத்துக்கே தெரியும். அப்படிப்பட்ட புலிக்கொடியை உங்களால் படத்தில் காட்ட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக படம் எடுக்க வேண்டும். அப்போ உங்களுடைய நோக்கம் என்ன? 

 

பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதிய ஜெயமோகன், விஜயால சோழனுக்கு முந்தைய தலைமுறை தெலுங்கர் என்று சொல்கிறார். உங்களுக்கு எல்லாம் என்ன வரலாற்று ஆய்வு இருக்கிறது. தஞ்சையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவனை நீங்கள் எப்படி தெலுங்கர் என்று சொல்கிறீர்கள். கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக வைத்து உலகத்தில் உள்ள முக்கால்வாசி நாட்டை ஆட்சி செய்த அவனை ஒரு தமிழன் என்று ஏன் சொல்ல முடியவில்லை. அப்புறம் எதற்கு நீங்கள் இந்த படத்தை கையில் எடுத்தீர்கள். 

 

வெற்றிமாறன் ராஜராஜ சோழனை இந்து இல்லை என்று சொன்னதற்கு மட்டும் குதிக்கிறீங்க. ஆயிரம் வருடத்திற்கு முன்பு எங்கே இருந்தது இந்து மதம். சைவம், வைணவம் மட்டும் தானே இருந்தது. இந்து என்ற சொல்லை வெள்ளைக்காரர்கள்தான் கொண்டுவந்தார்கள். இந்து என்ற சொல் வெள்ளைக்காரன் கொண்டுவந்தது என்று இன்றைக்கு இந்துக்களின் அடையாளமாக சொல்லப்படக்கூடிய சங்கராச்சாரியார் எதிர்த்திருக்கிறார். அதையே வெற்றிமாறன் சொன்னால் மட்டும் கசப்பாக இருக்கிறதா. ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழர்களுக்கு வைணவம், சைவம் என்று சமயம் இருந்திருக்கிறது. ஆனால் இந்து மதம் இல்லை. அப்படி இருக்கையில் நீங்கள் எதை மறைக்க பார்க்கிறீர்கள். 

 

'பொன்னியின் செல்வன்' படம் பான் இந்தியா படமாக வெளியாக வேண்டும்  என்பதால் இந்துத்துவாவை பற்றி பேச வேண்டும் என்பதுதான் உங்களின் நோக்கம். இதற்கு ஏன் எங்கள் வரலாற்றை மறைக்க பார்க்கிறீர்கள். ஆதித்த கரிகாலனை யார் கொன்றது, பாண்டியர்களா கொன்றார்கள். வட தமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் ஏன் சண்டை மூட்டி விட பார்க்கிறீர்கள். கல்கி வேண்டுமென்றால் மாற்றி எழுதியிருக்கலாம். ஆனால் தமிழனை தமிழனே கொன்றான் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. தைரியம் இருந்தால் யார் கொன்றார்கள் என்ற உண்மையை சொல்லுங்கள். ஆளுமையுடன் படம் எடுங்கள். தமிழன் தன்னுடைய வரலாற்றை சொல்லவில்லை என்றால், தமிழன் அல்லாதவர்கள் தங்களுடைய வரலாறாக மாற்றுவார்கள் என்பது 'பொன்னியின் செல்வன்' படத்தின் மூலம் வெளியே தெரிகிறது. 

 


இந்த மாதிரி வேலையெல்லாம் இரண்டாம் பாகத்தில் இருந்தால், மிகவும் கடுமையான எதிர் விளைவுகளை படக்குழு சந்திக்க வேண்டியிருக்கும்” என காட்டமாக தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிய திரைப்பட விருது; 4 பிரிவுகளில் 'பாரடைஸ்'!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
 Asian Film Award; 'Paradise' in 4 sections!

நியூட்டன் சினிமா தயாரிப்பில் வெளியான பாரடைஸ் படம் ஆசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

நியூட்டன் சினிமாவின் பாரடைஸ் படம் மிகவும் மதிப்புமிக்க 17வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைகளுடன் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் பிரசன்ன விதானகே, சிறந்த திரைக்கதை பிரசன்னா விதானகே மற்றும் அனுஷ்கா சேனநாயக்க மற்றும் சிறந்த எடிட்டிங் ஏ. ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் திறமைகளை சிறப்பித்துக் காட்டும் வகையில் புகழ்பெற்ற ஆசிய திரைப்பட விருதுகள் அகாடமியால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆசிய திரைப்பட விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது ஒரு படத்தின் வெற்றி மற்றும் தரத்தின் முக்கிய குறிகாட்டியாக கருதப்படுகிறது. முக்கிய பிரிவுகளில் பாரடைஸ் படம் பல விருதுகளுக்கு ஆசிய திரைப்பட விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டது படத்தின் தரம் மற்றும் தகுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நான்கு பரிந்துரைகளும் பாரடைஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை, இது சர்வதேசத் திரைப்பட சமூகத்தில் படத்தின் தாக்கத்தையும் அதிர்வலையையும் நிரூபிக்கிறது. பாரடைஸ் படம் அக்டோபர் 2023ல் பூசன் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் (கிம் ஜிசோக்) விருதை வென்றது. நியூட்டன் சினிமா தயாரிப்பு நிறுவனத்திற்கு, சிறந்த திரைப்படத்திற்கான பரிந்துரை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நியமனம், உலகளாவிய பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் சினிமாவை ஆதரிப்பதற்கும் தயாரிப்பதற்கும் நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் பிரசன்ன விதானகே தனது அதீத திறமைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஐந்து NETPAC விருதுகள் உட்பட 30க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். இது அவரது அசாத்திய திறமைக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகும்.

பிரசன்ன விதானகே மற்றும் அனுஷ்கா சேனாநாயக்க ஆகியோருக்கான சிறந்த திரைக்கதைக்கான பரிந்துரையானது, பாரடைஸ் திரைப்படத்தின் திரைக்கதைக்கு ஒரு சான்றாகும். இது படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.  பொன்னியின் செல்வன் மற்றும் RRR போன்ற குறிப்பிடத்தக்க படங்கள் உட்பட 600 படங்களுக்கு மேல் அனுபவம் வாய்ந்த எடிட்டரான A. ஸ்ரீகர் பிரசாத்தின் சிறந்த எடிட்டிங்கிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவரது பங்களிப்பு அதன் கதை மற்றும் காட்சி கதைச்சொல்லலை வடிவமைப்பு முக்கியமானது.

மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும், பாரடைஸ் படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் பெர்னாண்டோ மற்றும் மகேந்திர பெரேரா ஆகியோரின் சிறந்த நடிப்பைக் கொண்டுள்ளது. ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக்கின் ஒலி வடிவமைப்பு ஆகியவற்றால் படத்தின் கலை ஆழம் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது.   நியூட்டன் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆன்டோ சிட்டிலப்பில்லி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்: "இந்த பரிந்துரைகள் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சியின் தருணம். இது எங்கள் படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, எங்கள் குழுவின் கூட்டு மனப்பான்மை மற்றும் கடின உழைப்பின் கொண்டாட்டம்" என்று கூறினார். நியூட்டன் சினிமா, அதன் விநியோக பங்குதாரரான செஞ்சுரி ஃபிலிம்ஸுடன் இணைந்து, தயாரித்த இரண்டு படங்களை உலகளவில் திரையரங்குகளில் கொண்டு வருகிறது. பாரடைஸ் மார்ச் 2024ல் வெளியிடப்படும் மற்றும் பேமிலி பிப்ரவரி 2024ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

Next Story

பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் கமல் படம்

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

kamal nayagan re release update

 

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படம், இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கபட்டு வருகிறது. மேலும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் படங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்தது. இதில் கமலுக்கு ஜோடியாக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்க இளையராஜா இசையமைத்திருந்தார். முக்தா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் 3 தேசிய விருதுகளை வாங்கியது. மேலும் 60வது ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்திய சார்பில் அனுப்பப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகளை கடக்கிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி இப்படம் மீண்டும் திரையரங்கில் ரீ ரிலீசாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 120 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவிலும் கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான புதிய ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே கன்னடத்தில் மட்டும் டப் செய்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

சமீபத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படம் ரீ ரிலீசானது. கிட்டத்தட்ட 3 வாரங்கள் ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியாகவுள்ள நாயகன் படத்திற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆண்டுகள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் கமலின் 234வது படத்திற்கு கூட்டணி அமைத்துள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.