![dhanush captain miller crew in problem](http://image.nakkheeran.in/cdn/farfuture/clbweZA9JvJGMPPu3woTF7FdZLqjtQJ_jdSUNG-qwLY/1684746858/sites/default/files/inline-images/120_35.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 'சத்ய ஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கோக்கன், மூர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 1940களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பெரும்பாலும் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் மத்தளம்பாறையில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது எழுப்பிய சத்தம் மற்றும் புகை மூட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. அதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்பு மத்தளம்பாறை பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து படக்குழு ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் பழையபடி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதமும் மற்றும் டீசர் வருகிற ஜூலை மாதமும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதி பல்லுயிர் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அதிக ஒலி எழுப்பக்கூடிய வெடிகளை வைத்தும், துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகளையும் கேப்டன் மில்லர் படக்குழுவினர் படமாக்கியுள்ளனராம். இதனால் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள் கொண்டாடும் வேளையில், வன உயிரினங்களை அச்சுறுத்தி வருவதாகவும் இதற்கான அனுமதி முறையாக வாங்கவில்லை என்றும் அரிட்டாபட்டி பகுதியினர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கேப்டன் மில்லர் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை பார்க்கையில் தென்காசியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட அதே காரணத்திற்காக இம்முறையும் சிக்கல் ஏற்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.