தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள 'வாத்தி' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.
இதனிடையே தெலுங்கு திரையுலகில் தேசிய விருதை வென்ற இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் எனவும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தைப் பற்றி அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதோடு நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஜையின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.