![delhi high court orders YouTube to remove fake news on Daughter of Aishwarya Rai](http://image.nakkheeran.in/cdn/farfuture/3jh2WXg_Xn4aWC3MrbjyuJr1oHsZGqFn_AazJhPAUuU/1681993452/sites/default/files/inline-images/41_64.jpg)
நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 2011 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன் எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்போது 12 வயதாகும் ஆராத்யா பச்சன் நிறைய பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா விழாக்களுக்கு பெற்றோருடன் கலந்து கொண்டு வருகிறார். பொது வெளியில் முகம் காட்டத் தொடங்கியதிலிருந்தே அவருடைய ஹேர் ஸ்டைல், அவர் ஐஸ்வர்யா ராயின் கைகளைப் பிடித்துக்கொண்டு எப்படி நடக்கிறார் என சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்து வந்தனர்.
அந்த வகையில் சமீபத்தில் ஆராத்யா பச்சன் உடல்நலம் சரியில்லாதவர் என்று சில யூடியூப் சேனல்கள் வீடியோ வெளியிட்டு வந்தனர். இதனால், "தவறான உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்புகிறார்கள். அந்த வீடியோவை நீக்க வேண்டும். பச்சன் குடும்பத்திடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் நோக்கில் இதை செய்கிறார்கள். பச்சன் குடும்பத்தின் நற்பெயரை கலங்கடிக்கும் விதமாக இதுபோன்று வதந்தியை பரப்புகிறார்கள்" எனக் குறிப்பிட்டு 10 யூடியூப் சேனல்கள் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆராத்யா பச்சன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஹரிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆராத்யா பச்சன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல்களுக்கு அந்த வீடியோவை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். மேலும் ஒரு குழந்தையைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவது, குறிப்பாக உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசுவது சட்டத்தின் கீழ் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கூறினார்.