Skip to main content

கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர் மாரிமுத்து - முதல்வர் உருக்கம்

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

cm stalin about marimuthu

 

நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து (57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலில், டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 

அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ் பாஸ்கர், மாரி செல்வராஜ், பிரசன்னா, சசி, கதிர், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் பதிவினை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் இரங்கல் பதிவினை பகிர்ந்திருந்தனர். 

 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தற்போது இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும். பிரபல நடிகருமான மாரிமுத்துவின் மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து. 

 

ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும். திரைத்துறை நண்பர்களுக்கும். இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.