கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. இந்தத் தினக்கூலிப் பணியாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் உதவி வரும் நிலையில் பின்னணி பாடகி சின்மயி பாடல்களைப் பாடி நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது...
''ஊரடங்கு தொடங்கிய நேரத்தில் வீட்டில் இருக்கிறோமே எனச் சில பாடல்களைப் பாடி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடத் தொடங்கினேன். அதற்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன. ஒருகட்டத்தில் பலரும் தங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கூறி, அதைப் பாடுங்கள் என்று பதிவிடத்தொடங்கினர். அதற்கு நானோ, உங்களுக்குப் பிடித்த பாடல்களை நான் பாடுகிறேன். அதற்குப் பதிலாக இந்தப் பேரிடர் நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவி செய்ய நீங்கள் நிதி தரலாமே என பதிவிட்டேன். அதற்குப் பலரும் சம்மதித்தனர். அப்படித் தொடங்கிய பாடல் பயணம்தான் இது. இதுவரை 1,100-க்கும் மேலான ஏழைக் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. மக்களுக்கு நேரடியாகக் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம்வரை நிதி உதவி சென்றுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கே சிரமப்படும் குடும்பங்களைக் கண்டுபிடித்து என் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர்களது விவரங்களைப் பதிவிடுகிறேன். உதவ முன் வருபவர்கள் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குக்கு நிதியை அளித்துவிட்டு அந்த ரசீதை என் மின்னஞ்சல் பக்கத்துக்கு அனுப்பினால் போதுமானது. இந்தப் பணி மிகவும் திருப்தியாக இருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பால் சிரமப்பட்டு வரும் மீனவர்கள் குடும்பம், நாட்டுப்புறப் பாடகர்கள், மேடை நாடகக் கலைஞர்கள் குடும்பம் எனப் பலரும் இதன் வழியே பயன் பெற்று வருகின்றனர்'' எனக் கூறியுள்ளார்.