90 -களில் பிறந்து சிறுவர்களாக வளர்ந்தவர்களுக்கு 'சக்திமான்' தொடர் என்பது தற்போதைய 'மார்வெல் டிசி' சூப்பர் ஹீரோ படங்கள் போன்றது. பலருக்கும் பிடித்தமான 'சக்திமான்' ஏற்படுத்திய தாக்கம் எண்ணிலடங்காதவை. இந்நிலையில், சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கண்ணா பெண்கள் குறித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் ரீதியிலான பிரச்சனைகளை வெளியில் சொல்லி குற்றச்சாட்டு வைப்பதுதான் மீடூ இயக்கம். இது ஹாலிவுட்டில் தொடங்கி படிப்படியாக பாலிவுட், கோலிவுட் என்று கடந்த நான்கு ஆண்டுகளில் பெரும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் முகேஷ் கண்ணா இந்த இயக்கம் குறித்து பேசுகையில், “பெண்களின் வேலை வீட்டைப் பார்த்துக் கொள்வது. வேலை செய்ய ஆரம்பித்தவுடன்தான் இந்த மீடூ பிரச்சனை தொடங்கியது. ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்கவேண்டும் என இன்று பெண்கள் பேசி வருகின்றனர்” என்று கருத்துக் கூறியிருந்தார்.
இவரின் இந்த கருத்து சமூக வலைதளத்தில் மிகப்பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் அவருடைய கருத்துத் தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், முகேஷ் கண்ணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சின்மயி ட்வீட் செய்துள்ளார். அதில், “பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான், 'மீ டூ' பிரச்சினை வந்ததாக முகேஷ் கண்ணா கூறியிருக்கிறார். ஆண்கள் தங்கள் கைகளைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதால் வரவில்லையாம். இவரை போன்ற மனநிலை உடையவர்களால் எனக்குச் சோர்வு வருகிறது. இவர்கள் மாறப்போவதும் இல்லை, நச்சுக் கருத்தை தங்களுக்குள் வைத்துக் கொள்ளப்போவதும் இல்லை” என்றார்.