![Chief Minister condoles of Nasser father passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/vAc7cHQajm7koq255uzqkURyKruRmSjf4X65snVZ6Ws/1696945013/sites/default/files/inline-images/186_17.jpg)
தமிழ் சினிமாவில் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏற்றார்போல தன் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துபவர்களில் முக்கியமானவர் நாசர். இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 38 ஆண்டுகள் திரைத்துறையில் பயணித்து வரும் நாசர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத் தலைவர் நாசரின் தந்தை மாபுப் பாஷா இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 95. செங்கல்பட்டு தட்டான்மலை தெருவில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக் குறைவால் மாபுப் பாஷா மறைந்துள்ளார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகினர் உள்ளிட்ட பலரும் நாசருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் நாசர் தந்தையின் மறைவிற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மூத்த நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருமான நாசரின் தந்தை பாஷா, வயது மூப்பு காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து வருந்துகிறேன். தந்தையின் மறைவால் வாடும் நாசர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.