Skip to main content

“நீண்டநாள் ஆசை நிறைவேறியது” - சேரன் மகிழ்ச்சி

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
cheran debut in mollywood as actor

இயக்குநர் மற்றும் நடிகரான சேரன், கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். சத்ய ஜோதி தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கவுள்ளதாக முன்பு தகவல் வெளியானது. மேலும் ராமதாஸ் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்தத் தகவல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சேரன், தான் சரத்குமாரை வைத்து மற்றொரு படம் இயக்கவுள்ளதாகவும் இந்தப் படம் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு இல்லை எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர் இயக்கவுள்ள கிச்சா சுதீப் படம் கைவிடப்பட்டதாகவும், பிரபு தேவா மற்றும் கஜோல் இருவரையும் வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் வதந்தி உலா வந்தது. இதனை மறுத்த சேரன், “தவறான செய்தி. கிச்சா சுதீப்பின் 47வது படத்தில் பணியாற்றி வருகிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இந்த நிலையில் தான் நடிகராக நடிக்கும் புதுப் படம் குறித்த அப்டேட்டை தற்போது பகிர்ந்துள்ளார் சேரன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோதாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும் போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் சினிமா கம்பெனி தயாரிக்கும் இப்படம் ‘நரிவெட்டா’ என்ற தலைப்பில் உருவாகிறது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்