Skip to main content

"தயவு செய்து பொய்யான தகவலை பரப்பாதீங்க" - ஜான்வி கபூர் குறித்து போனி கபூர் விளக்கம்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

boney kapoor tweet about janhvi kapoor news

 

நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018 இல் இந்தியில் வெளியான 'தடக்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களில் 'குஞ்சன் சக்ஸேனா' மட்டும் தான் நல்ல வரவேற்பைப் பெற்றது.

 

கடைசியாக ஜான்வி நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் தென்னிந்தியப் படங்களின் இந்தி ரீமேக். 'கோலமாவு கோகிலா' படம் 'குட் லக் ஜெரி' என்றும், 'ஹெலன்' என்ற மலையாளப் படம் 'மிலி' என்ற தலைப்பிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதையடுத்து தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து ஜான்வி கபூர் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது. லிங்குசாமி ஆர்யாவை வைத்து 'பையா 2' படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகியாக நடிக்க ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த தகவல் குறித்து ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் வெளியிட்டுள்ள பதிவில், "ஜான்வி கபூர், தற்போது வரை எந்த ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை. தயவு செய்து பொய்யான தகவலை பரப்பாதீங்க." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அஜித் படத் தயாரிப்பாளரின் கோரிக்கை - நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா?

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே வேளையில், பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க., நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ajith movie producer boney kapoor request to first time voters to vote pm modi

இந்த நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து இந்திய மக்களும் முதல் முறை வாக்காளர்களும் பிரதமர் மோடிக்கு ஓட்டுப் போட வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவி கணவரான இவர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்திருந்தார். இதனிடையே உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களைத் தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் அவர், அரசியல் குறித்து கருத்து தெரிவித்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது கருத்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

Next Story

“தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன்” - ஸ்ரீதேவி மறைவு குறித்து போனி கபூர்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Boney Kapoor speaks about Sridevi passed away

 

திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். 

 

2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது. 

 

இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் போனி கபூர். அவர் பேசுகையில், "முதலில், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது விபத்தால் ஏற்பட்டது. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் ஏற்கனவே 24 முதல் 48 மணி நேரங்களுக்கு மேல் என்னிடம் நடந்த விசாரணையில் பேசிவிட்டேன். இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் செல்ல வேண்டியிருந்ததாக துபாய் போலீசார் என்னிடம் தெரிவித்தனர். நான் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அதை தவிர வேறெதுவும் சொல்வதற்கு இல்லை என அவர்களிடம் சொன்னேன். 

 

பின்பு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே வேளையில் அங்கு நான் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றும் திரையில் நல்ல உடல் நளினத்தோடு தோன்ற வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக 46 - 47 கிலோவாக உடல் எடையை குறைத்தார். அது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தால் தெரியும். 

 

இந்த சம்பவத்திற்கு முன்பு, அவருக்கு பல சந்தர்ப்பங்களில் சட்டென மயக்கமாகும் நிலைக்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்சனை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஒரு படத்திற்காக கடுமையான டயட்டில் இருந்தபோது, அப்போதும் குளியலறையில் ஒருமுறை விழுந்து பல் உடைந்ததாக ஸ்ரீதேவி இறந்த பின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்" எனப் பேசினார்.