தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்களைவிட அதிக இடங்களைத் திமுக கைப்பற்றியதையடுத்து, தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது. இதனையடுத்து, முதல்வராகப் பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
அந்த வகையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டாலினுக்கு வாழ்த்து ட்வீட் செய்துள்ளார். அதில்... "சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த ஸ்டாலின், "இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்" என ட்வீட் செய்தார்.
இதைக் கவனித்த ஏ.ஆர் ரஹ்மான் பதிலுக்கு, "கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.