பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்துவரும் நடிகை அமலா பால் நடிப்பில் வெளியான ‘பிட்ட கதலு’ தெலுங்கு இணைய தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து தற்போது, பிரபல கன்னட இயக்குநர் பவன் குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் வடிவில் உருவாகியிருக்கும் (Kudi Yedamaithe) 'குடி எடமைத்தே' தெலுங்கு இணைய தொடரில், குடிக்கு அடிமையான நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அமலா பால். இந்த இணைய தொடர் 'Aha' ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை 16 அன்று வெளியானது. இதில் அமலா பாலின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இப்படம் குறித்து அமலா பால் பேசும்போது....
"நான் திரைத்துறைக்கு வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டன. ஆரம்பத்தில் ஓய்வே இல்லாமல், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்திருக்கிறேன். எனது தனிவாழ்வில் நிறைய பிரச்சனைகளையும் கடந்து வந்திருக்கிறேன். சினிமா நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. இப்போது இந்த இடத்தில் இருப்பது மகிழ்ச்சியே. இனி எனக்கு சவால் தரும் பாத்திரங்களிலும், மிக நல்ல படைப்புகளிலும் நடிக்க விரும்புகிறேன். தற்போது என்னை நானே புதுப்பித்துக்கொண்டிருக்கிறேன். எனது நடிப்பிற்காக, தனித்த முறையில் பாராட்டுக்கள் கிடைத்துவருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த கவனத்துடன்தான், நான் நடிக்கும் படைப்புகளைத் தேர்வு செய்துவருகிறேன். இப்போது நிறைய நல்ல வாய்ப்புகள் என்னைத் தேடி வந்துகொண்டிருக்கின்றன.
‘பிட்ட கதலு’ தொடர் எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் இயக்குநர் நந்தினி மூலம்தான், இயக்குநர் பவன் குமார் அறிமுகமும், இந்த வாய்ப்பும் கிடைத்தது. சிக்கலில் சிக்கிக்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரி என்பதைத் தாண்டி, இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது எனக் கேட்டேன். இந்த துர்கா எனும் காவல் அதிகாரி பாத்திரம், குடிக்கு அடிமையாகி மீளத் துடிக்கும் பாத்திரம். அது எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக, சவால்கள் நிறைந்ததாக இருந்தது. பவன் குமார் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது எழுத்தும், அதை அவர் திரைக்கு மாற்றும் வித்தையும் அபாரமானதாக இருக்கிறது. முடிந்தவரை அனைத்தும் இயல்பாக, தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ரசிகர்களை வசப்படுத்தும் வித்தை அவருக்குத் தெரிந்திருக்கிறது.
இந்த தொடரில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இது டைம் லூப் சயின்ஸ் ஃபிக்சன், ரசிகர்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக இருக்கும். இதுவரையிலும் இந்த தொடரைப் பார்த்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தைக் கொண்டாடிவருவது மனதிற்கு பெரும் மகிழ்ச்சி. தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் தயாரிப்பில், 1970 காதல் கதை ஒன்றில் நடித்திருக்கிறேன். அந்த தொடர் விரைவில் வெளிவரவுள்ளது. எனது சொந்த தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் 'Cadaver' திரைப்படமும் விரைவில் நிறைவுபெறவுள்ளது. இனி என்னை, நிறைய புதுமையான பாத்திரங்களில் நீங்கள் ரசிக்க முடியும்" என்றார்.