![ajith mets chiranjeevi](http://image.nakkheeran.in/cdn/farfuture/dBTwDV8vMTmg1GNyM8maxxYHIkIDXg5x34tuSbdeSoQ/1716969686/sites/default/files/inline-images/158_32.jpg)
அஜித் குமார், தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கமிட்டான நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படம் குட், பேட், அக்லி என்ற தலைப்பில் உருவாகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் பொங்கல் 2025இல் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் அஜித்குமார் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். குட், பேட், அக்லி படத்தின் படப்பிடிப்பும், சிரஞ்சீவி நடிக்கும் 'விஷ்வாம்பரா' படப்பிடிப்பும் ஒரே இடத்தில் ஹைதராபாத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் சிரஞ்சீவி பட படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் சென்று அவரை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'விஷ்வாம்பரா' படத்தை இயக்குநர் வசிஷ்டா இயக்க சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் போலா சங்கர். அப்படம் அஜித்தின் வேதாளம் படத்தின் ரீமெக் என்பது குறிப்பிடதக்கது.