Skip to main content

"சும்மா வெட்டி பந்தாதானா?" விவேக் வாழ்க்கையை மாற்றிய ஆசிரியரின் கேள்வி!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

vivek

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத காமெடி நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். 'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

தமிழ் மக்களால் 'சின்ன கலைவாணர்' என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ஐந்துமுறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது, கலைவாணர் விருது, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது எனப் பல விருதுகளை வென்றுள்ள விவேக், முன்னர் நக்கீரனோடு நடந்த ஒரு கலந்துரையாடலில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...

 

இத்தனையாண்டு கால சினிமா வாழ்க்கை நிறைவைத் தருகிறதா?

 

"பல காமெடியன்களுக்குக் கிடைக்காத பல அங்கீகாரங்கள் எனக்குக் கிடைத்துள்ளன. இந்தியாவின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' வாங்கிய காமெடியன் நான். இந்திய நாட்டின் மிகப்பெரிய பொக்கிஷமும் இந்திய மக்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் நிறைந்திருக்கின்ற அப்துல்கலாம் அவர்களுடைய நட்பு, அவர் எனக்குக் கொடுத்த வேலை என இவையனைத்தையும் பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்".

 

காமெடியன் விவேக்கின் தொடக்கக்கால பயணம் எப்படியிருந்தது?

 

"இன்று மீம்ஸ் போடுகிறார்களே, அதையெல்லாம் நான் அன்று வாய் வழியாகச் செய்து கொண்டிருந்தேன். அனைவரையும் கிண்டல் செய்து கொண்டிருப்பேன். ஒரு முறை என் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அழைத்து, "எல்லாரையும் கிண்டல் செய்கிறாயே... நம் கல்லூரியில் ஒரு போட்டி நடைபெறுகிறது. அதற்கு ஏன் பெயர்ப் பதிவு செய்யவில்லை. நீங்க எல்லாம் சும்மா வாய் பேசவும், வெட்டி பந்தா செய்யவும்தானா என்றார். அங்கிருந்துதான் என்னுடைய காமெடியன் பயணம் தொடங்கியது".

 

'இந்தியா 2020-ல் வல்லரசாகி விடும்' எனும் அப்துல்கலாமின் கனவு குறித்து?

 

"ஐயா கூறும்போது சில விஷயங்களை மனதில் வைத்து இதைக் கூறியிருப்பார். இன்று அவர் இருந்திருந்தால் அந்த நிலைப்பாட்டை மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். அந்த இலக்கை 2030 என்று தள்ளிக்கூடப் போட்டிருப்பார். எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம், என்னென்ன இடர்பாடுகள் வந்துள்ளன என்பவை நமக்குத்தான் தெரியும். மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய மிகப்பெரிய பிம்பம் அப்துல்கலாம். அவர் கூறிய விஷயத்தில் கருத்துச் சொல்ல எனக்கு அருகதை இல்லை".

 

தமிழ்த் திரையுலகின் மாபெரும் ஆளுமைகளின் பண்புகள் குறித்து?

 

"இளம் வயதில் ஏ.ஆர்.ரஹ்மான் இரு ஆஸ்கார் விருது வாங்கியதற்காக நடந்த விழாவிற்கு இளையராஜா வருகை புரிந்தார். பின், இளையராஜா திரைத்துறையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி நடந்த விழாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வருகை தந்தார். இந்தப் பணிவைத்தான் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

'சிவாஜி' படத்தில் நடிக்கும்போது ரஜினி சார் எனக்கு அவ்வளவு இடம் கொடுத்தார். அந்தப் படத்தில் ரஜினிசார் 'பஞ்ச்' டயலாக் பேசமாட்டார். நான்தான் பேசுவேன். அது ஷங்கர் சார் சொல்லிச் செய்தாலும், சூப்பர் ஸ்டார் எனும் உயரத்தில் உள்ள ஒருவர் அதை வேண்டாம் என்று கூறியிருக்க முடியும். அது மிகப்பெரிய பண்பு.

 

cnc

 

அதே போல நடிகர் அஜித் அவர்களைக் கூற வேண்டும். என்ன 'டை'யெல்லாம் அடிக்க மாட்டியா என்று நான் கேட்டேன். அவர் அதை அனுமதிக்கிறார். அவரது ஆரம்பக்கால படமான 'மைனர் மாப்பிள்ளை' படத்தில் இருந்து அவரோடு பயணிக்கிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் என்னை நன்றாகத் தெரியும். இருவரையும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் மக்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். தெருவில் போகிற ஒருத்தன் அஜித்தைப் பார்த்து அப்படிக் கேட்க முடியுமா? எனக்குக்கூட 'விஸ்வாசம்' படத்தில் சில டயலாக் பேசத் தயக்கம் இருந்தது. 'அஜித், விவேக் என்பதை மறந்திருங்க.. நான் கிராமத்துல இருந்து வந்துருக்கேன்.. நீங்க நயன்தாரா மேனேஜர்... இப்படித்தான் பேசுவீங்க... பேசுங்க' என்றார் அஜித் சார்.

 

அதேபோல, விஜய், விவேக் இடையேயான உறவும் அப்படித்தான் உள்ளது. பழைய விவேக்தான், பழைய விஜய்தான். அன்று என்னை எப்படிப் பார்த்தாரோ அதே போலத்தான் இன்றும் என்னைப் பார்க்கிறார். வெற்றி ஒரு மனிதனுடைய இதயம் வரை செல்லலாம், தலை வரை செல்லக் கூடாது என்பார்கள். அதை விஜய் சரியாகப் பார்த்துக்கொள்கிறார். அந்த வகையில் அவர் சிறந்த மனிதர்".

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.