புதுச்சேரி மாநில அரசு அரசு சார்பில் வருடந்தோறும் நடத்தப்படும் இந்தியத் திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், சிறந்த திரைப்படமாக பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து, புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் வழங்கப்படும் விருதை, இயக்குனர் பார்த்திபனுக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி வழங்கினார்.
பின்னர் பேசிய பார்த்திபன், எதிர்காலத்தில் தான் அரசியலுக்கு வருவேன் என்றும் நடிகர் என்பதாலேயே ஒருவரை அரசியலில் இருந்து ஒதுக்கத் தேவையில்லை எனவும் கூறினார். மேலும் பேசிய அவர், தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் நல்ல ஆட்சியை வழங்குவார்கள் எனக் கூறினார்.