Skip to main content

“அவரு மட்டும் இல்லைன்னா குத்துப்பட்டு செத்திருப்பேன்” - நடிகர் கலையரசன்

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

actor kalaiyarasan share pettaikaalai shooting spot

 

இயக்குநர் வெற்றிமாறன், இயக்குவது மட்டுமல்லாமல் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரிக்கிறார். இதனிடையே 'பேட்டைக்காளி' என்ற வெப் தொடரை தயாரித்துள்ளார். இந்த தொடர் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த வெப் தொடர் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கலையரசன் பேட்டை காளி படப்பிடிப்பு நடந்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், "'பேட்டைக்காளி' படம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உண்மையான மாடுபிடி வீரர்கள் இருந்தார்கள். எங்க வீட்டு பக்கம் ஜல்லிக்கட்டு எல்லாம் கிடையாது. மாடு என்றால் பால் கறந்து டீ, காஃபி  போட்டு குடிப்பது, அதுதான் எங்களுக்கு தெரியும். மாட்டை பார்த்து இவ்வளவு பயம் வருமா என்பது எனக்கு இந்த 'பேட்டைக்காளி' நடிக்கும் போதுதான் தெரிந்தது. ஏனென்றால், களத்தில் இருப்பவர்கள் உயிரை பணயம் வைத்து மாடுகளை பிடிக்கின்றனர்.  ஜல்லிகட்டிலாவது, ஒரு பக்கம் தான் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் மஞ்சு விரட்டில் 360 டிகிரியில் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். 

 

களத்தில் இறங்கி மாடுகளை பிடிக்கும் காட்சிகளில் ஏதோ மாடுபிடி வீரர்கள் உதவியுடன் நடித்து முடித்துவிட்டேன். ஆனால் மறுநாள் க்ளோசப் காட்சிகளை படமாக்க உண்மையான ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்தனர். அப்போது அந்த காளையை அழைத்து வந்தவரிடம், ‘அண்ணா இந்த மாடு ஒன்னும் பண்ணாதுலா, பயமா இருக்குன்னு’ சொன்னேன். அதற்கு அவர், ‘தம்பி ஒன்னும் பண்ணாது நேத்து ஜல்லிக்கட்டில் கூட சும்மா அமைதியாகத்தான் போனது’ன்னு சொன்னார். சரி மனதை தைரியப்படுத்துக்கொண்டு நின்னேன். ஆனால் கடைசியில் பார்த்தால், அந்த மாட்டை யார் அழைத்து வந்தாரோ அவரையே அந்த மாடு ஒரே குத்தா குத்தி தூக்கி போட்டுவிட்டது. அதன்பிறகு அவருக்கு காலில் 11 தையல் போட்டாங்க. இதை பற்றி மாட்டுக்காரவங்ககிட்ட கேட்டா, எங்க வீட்டு 5 வயது குழந்தைகூட இந்த மாட்டைப்பிடித்து கட்டும். இன்னைக்குத்தான் அது இப்படி பண்ணுது சரியாகிடும்னு கூலா சொல்றாங்க. 

 

அதன்பிறகு வேறு ஒரு மாட்டை அழைத்து வந்தாங்க. அதுவும்கூட முதலில் சாந்தமாகத்தான் இருந்தது. ஆனால் அங்கிருந்த கூட்டத்தை பார்த்த மாடு வெடுக்குன்னு பாய ஆரம்பித்தது.  நல்ல வேலை நரி அண்ணன் இல்லை என்றால் அன்னைக்கே நான் குத்து பட்டு செத்திருப்பேன். மாடு பாயும் போது, சரியான நேரத்தில் அதன் கொம்பை திருப்பி என்னை காப்பாற்றினார். அவரை இல்லையென்றால் இன்னைக்கும் நான் இங்கு நின்னு பேசிட்டு இருக்க மாட்டேன். ரொம்ப நன்றி அண்ணா" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம்” - வெளிப்படையாகப் பேசிய வெற்றிமாறன்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vettrimaaran speech in kalvan audio launch

ஜி.வி பிரகாஷ், பாராதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி.ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை பணிகளையும் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது. மேலும் கடந்த வருட கோடையில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் ட்ரைலர் மற்றும் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறனும் கலந்து கொண்டார் . அவர் பேசுகையில், “இந்த படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் இருக்கு. விடுதலை படத்தில் பாராதிராஜா சார் நடிக்க வேண்டும் என அவருக்கு ஹேரெல்லாம் ஷார்ட்டா கட் பண்ணிட்டு லுக் டெஸ்ட் எடுத்தேன். அப்புறம் லொகேஷன் பார்த்துட்டு, அந்த இடம் ரொம்ப குளிரென்றதால அவருக்கு சரியா வராது என சொன்னேன். என்னடா விளையாடுறியா, முடியெல்லாம் இப்புடி வெட்டிவிட்டுட்டு ஒத்துக்கவே மாட்டேன் என சொல்லிவிட்டார். என்ன ஆனாலும் நான் பண்றேன் என்றார். அப்புறம் நான் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். 

கொஞ்ச நாள் கழிச்சு, டேய், என்ன வேணான்னு சொன்னில்ல, இப்ப இதே கெட்டப்புல என்னை வைச்சி ஒருத்தன் படமெடுக்க போறான் என சொன்னார். அது தான் இந்த படம். நாங்க விடுதலை படம் ஷூட் பண்ண இடத்துல தான் இதே படமும் ஷூட் பண்ணாங்க. பாராதிராஜா சார், ஸ்க்ரீனில் இருக்கும் ஒரு தருணம் கூட ஃபேக்கானதா இருக்காது. அந்த மாதிரி சின்சியரான நடிகர்கள் குறைவாகவே இருக்காங்க. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்குது. எந்த நொடியுமே நடிக்க முயற்சி பண்ணாமல், அந்த இடத்தில் அந்த கதாபாத்திரமாகவே இருப்பதால் தான் அந்த உணர்வை நம்முள் ஏற்படுத்த முடியுது.

இன்னொரு விஷயம். இது கொஞ்சம் சர்ச்சையானது. யானைய வைச்சு எடுத்தாலும் டைனோசரை வைச்சு எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும்” என்றார். 

Next Story

“என் அம்மாவின் அன்பு மாதிரி...” - இளையராஜா இசை குறித்து வெற்றிமாறன்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
vetrimaaran speech in ilaiyaraaja biopic event

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. கனெக்ட் மீடியா, பி.கே. ப்ரைம் புரடக்‌ஷன் மற்றும் மெர்குரி மூவிஸ் என மூன்று நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில், இளையராஜா கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இளையராஜா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அறிவிப்பு போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்த நிலையில், மேலும் தனுஷ், இளையராஜா, வெற்றிமாறன், அருண் மாதேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “எனக்கு ராஜா சார் இசையை எப்போது கேட்டாலும் ஒன்னுதான் தோணும். அது எங்க அம்மாவுடைய அன்பு மாதிரி. நிலையானது. எப்போதுமே மாறாது. வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாலும் அவரின் இசை ஏற்படுத்துகிற உணர்வு எப்போதுமே அப்படியே தான் இருந்துருக்கு. அவருடன் வேலை பார்ப்பது ரொம்ப இலகுவாக இருக்கும். சமமாக நம்மை நடத்துவார்.

அவர் முதல் படம் பண்ணும்போது எனக்கு ஒரு வயசு. ஆனால் என்னோடு அவர் பேசும்போது, படம் பார்த்துவிட்டு பரிந்துரை சொல்லலாமா எனக் கேட்டார். அவர் அப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது. ஆனால் கேட்டார். அப்படிப்பட்ட இடத்தில் தான் ஒரு இயக்குநரை அவர் வைத்து வேலை பார்ப்பார். அவர் இசையமைப்பதை பார்த்தால், இசையமைப்பது ரொம்ப ஈஸி என தோணும். சிரமமே இல்லாமல் வேலை பார்ப்பார். என்னுடைய பார்வையில் அவர் ஒரு மியூசிஷியன் என்பதை விட மெஜிசியன் தான். அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது நம் நாட்டினுடைய பெரிய ஆவணம்.

அவர் இப்போது வேலை பார்த்து வருகிற வாழ்க்கை, இந்த இடத்திற்கு வருவதற்கு முன்னால் இருக்கும் 40 வருட வாழ்க்கை, இவ்வளவு காலங்களையும் ஒரு நாட்டினுடைய வரலாற்று பதிவாக அவருடைய இசையில் நாம் சேர்க்க வேண்டும். எல்லாருடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட முறையில் அவருடைய இசை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு மனிதரின் வாழ்க்கை படமாக உருவாகும் போது தமிழ் இசை கேட்டு வளர்ந்தவர்கள் அத்தனை பேருடைய படமாக இப்படம் இருக்கும். இந்த படத்தில் ஏதாவது ஒரு விதத்தில் நான் பங்காற்ற வேண்டும் என விருப்பப்படுகிறேன். அருணுக்கு இப்படம் ஒரு கிஃப்ட். தனுஷிற்கு மற்றுமொரு சவால். எந்த சவாலை கொடுத்தாலும் அதை வெற்றிகரமாக தனுஷ் தாண்டி வருவார். இந்த படத்தில் ராஜா சாருடைய இசையை கேட்க ஆர்வமாக இருக்கேன்” என்றார்.