Skip to main content

அஜித், விஜய் ரசிகர்களுக்கு நடிகர் பார்த்திபன் வேண்டுகோள்! 

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான முயற்சிகளுக்குப் புகழ் பெற்றவர். ஏதேனும் ஒரு விழாவுக்கு விருந்தினராக அழைக்கப்படும்போதே அங்கு தனது பேச்சு புதுமையாக, வித்தியாசமாக, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கவேண்டுமென மெனக்கிடுபவர். அவர் பிறருக்கு அளிக்கும் பரிசுகளும் அப்படித்தான் மிகுந்த சிரத்தையெடுத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கும். இப்படி சிறிய விஷயங்கள் தொடங்கி, தான் இயக்கும் படங்கள் வரை தான் தனித்துவமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்து அதில் வெற்றி பெற்றவர் பார்த்திபன்.

 

parthiban



'புதியபாதை' தொடங்கி தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வரை தான் இயக்கிய படங்களில் அந்தந்த காலத்தில் புதுமையான பல விஷயங்களை முயன்ற பார்த்திபன், அந்த புதுமை முயற்சிகளாலேயே நல்ல வெற்றிகளையும் பேரையும் பெற்றவர். அதே நேரம், அதனாலேயே மிகப்பெரிய தோல்விகளை அடைந்து பொருளையும் இழந்திருக்கிறார். இடையிடையே பிறர் படங்களில் நடித்தாலும் மீண்டும் மனம் தளராமல் தனது முயற்சியை தொடர்வார். அவர் கடைசியாக இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' வெற்றி பெறவில்லை. அதற்கு முந்தைய படமான 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

தற்போது 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார் பார்த்திபன். உலகிலேயே முதல் முறையாக ஒரே ஒருவர் நடித்து அவரே இயக்கியுள்ள படமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளிவர இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெயிலரை வெளியிடும்போது அதனுடன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.


வீடியோவில் பார்த்திபன் பேசியது... "சூப்பர்ஸ்டாரின் தர்பார், உலகநாயகனின் இந்தியன் 2, மிஸ்டர் விஜய்யின் பிகில், மிஸ்டர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை... இப்படி பிரமாண்டமான படங்கள் தயார் நிலையில் இருக்கும்போது ஒரே ஒருத்தர் நடித்த 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற படமும் வெளிவர இருக்கிறது. படம் பார்த்துட்டு மூணாவது நாளாவது நாள் நல்லா இருக்கு என்று சொல்வதற்கு பதிலாக முதல் நாளே ரசிகர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். ஒரே ஆள் இயக்கி நடித்ததால் மட்டுமே இதை நான் விருதுகளுக்கு அனுப்புகிறேன். ஆனால், இது ஜனரஞ்சமான ஒரு படமாகத்தான் இருக்கும். உலகில் இதுவரை பனிரெண்டு படங்கள் மட்டுமே ஒருவர் நடித்த படங்கள். அவற்றை விட என் படத்தில் என்ன சிறப்பு என்றால் நானே இப்படத்தை இயக்கியிருப்பதுதான். படத்தைப் பார்த்த பெண்கள் இறுதியில் கண்ணீரை அடக்கமுடியவில்லை என்றார்கள். அந்த அளவுக்கு எமோஷனலான உங்களுடன் கனெக்ட் ஆகக்கூடிய ஒரு படமாக இது இருக்கும். என் படத்தை நானேதான் கூவி விற்க வேண்டும். அந்தக் கூவலின் ஒரு பகுதிதான் இந்த ட்ரெயிலர்."

பார்த்திபனின் இந்த முயற்சி திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. விரைவில் படம் மக்களின் பார்வைக்கு வெளிவர இருக்கிறது.

 

 

           

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.