Skip to main content

இந்திய ஒன்றிய அரசு' என குறிப்பிட்டு தமிழிசை பதவிப்பிரமாணம்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி  ஆட்சி அமைத்தது. 

கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக கடந்த மே மாதம் 07-ஆம் தேதிபதவியேற்றுக் கொண்டார்.  அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் பதவி பங்கீட்டில் என். ஆர் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இடையே இழுபறி நீடித்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு என ஒவ்வொரு நிகழ்வும் காலதாமதமாகவே நடைபெற்று வந்தன.

இதனிடையே அமைச்சர்கள் பங்கீடு இறுதி செய்யப்பட்டு  பா.ஜ.கவிற்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி  வழங்கவும், என்.ஆர் காங்கிரசுக்கு 3 மந்திரி பதவிகள் எனவும் உடன்பாடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 5 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் வழங்கினார். இந்த பட்டியலை தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அமைச்சர்களாக என்.ஆர் காங்கிரஸை சேர்ந்த லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திர.பிரியங்கா மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்டது.

அதையடுத்து நேற்று மதிம் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற எளிய விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லக்ஷ்மிநாராயணன்,  ஜெயக்குமார், சாய்.சரவணகுமார், சந்திர.பிரியங்கா ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.  இவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  

நிகழ்ச்சியில் முதலமைச்சர்  ரங்கசாமி, சட்டப் பேரவை தலைவர் செல்வம், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நியமன எம்.எல்.ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்,  காவல்துறை தலைவர் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அதேசமயம் இவ்விழாவை தி.மு.க எம்.எல்.ஏக்கள் புறக்கணித்தனர். அதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஆனாலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

விழாவையொட்டி கவர்னர் மாளிகை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியின்போது அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, "இந்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுச்சேரி ஆட்சிப் பரப்பு" என உறுதிமொழியை வாசித்தார்.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்து 'மத்திய அரசு' என்று அழைப்பதற்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியினர் 'இந்திய ஒன்றிய அரசு' என்று பயன்படுத்துகின்றனர்.  அதற்கு பா.ஜ.கவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க கூட்டணி அரசு அமையும் புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் "இந்திய ஒன்றியம்" என அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- சுந்தரபாண்டியன்   

இக்கட்டுரை, சிறப்பு உள்ளடக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்