Skip to main content

'சட்டி, பாத்திரத்தைத் தூக்கிட்டு எங்கயோ போய் சமைக்கிறானுகன்னு நினைச்சாங்க, ஆனா நாங்க செஞ்சது வேற' - வில்லேஜ் குக்கிங் | வென்றோர் சொல் #33

Published on 06/03/2021 | Edited on 06/03/2021

 

village cooking

 

உலகம் முழுவதும் உள்ள வெற்றிக்கனியை சுவைத்த சாதனையாளர்கள், அதை சுவைக்க எதிர்கொண்ட சவால்கள் குறித்த அவர்களது வார்த்தைகளை 'வென்றோர் சொல்'லாக அறிந்து வருகிறோம். அவர்கள் பகிரும் அனுபவங்கள், நம் கனவை நோக்கிய ஓட்டத்திற்கு உத்வேகமளிக்கக்கூடிய எனர்ஜி டானிக்காக உள்ளன. இதுவரை தனிநபர் சாதனைப்பயணம் குறித்து அறிந்துவந்த நாம், முதல்முறையாக ஒரு குடும்பத்தின் சாதனைப் பயணத்தைப் பார்க்கிறோம். 'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூ-டியூப் சேனல் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து வருகிறது புதுக்கோட்டை மாவட்டம், சின்ன வீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஆறுபேர் கொண்ட குழு.

 

இந்த ஆறு பேரில் முதியவர் தவிர அனைவரும் பட்டதாரிகள். உள்ளூரில் சரியான வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தால் வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட இவர்களுக்கு, குடும்பத்தினர் அனுமதி கிடைக்காததால், உள்ளூரில் சிறு வேலை செய்து வந்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரிடம் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு கைவசம் இருந்தது. ஜியோ நெட்ஒர்க் வருகைக்குப் பின், கன்னியாகுமரியையும் காஷ்மீரையும் இணைக்கக்கூடிய அளவிற்கு வலுவான இணைய வளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது. விளைவு, இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் அழையா விருந்தாளியாக இணையம் நுழைந்தது.

 

இதன் எதிர்காலப் போக்கை சரியாகக் கணித்த சுப்ரமணி, தன்னுடைய சகாக்களை ஒருங்கிணைத்து கைவசம் இருந்த தொழில்நுட்ப அறிவின் துணையோடு  யூ-டியூப் தளத்தினுள் கால் பதிக்கிறார். சுப்ரமணி கேமரா மற்றும் எடிட்டிங்கை கவனிப்பது, அவர் சகாக்கள் சமையல் வேலைகளைக் கவனிப்பது எனத் தங்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கின்றனர். உங்கள் ரசிகர் நெதர்லாந்தில் இருந்து... உங்கள் ரசிகர் கம்போடியாவில் இருந்து... என உலக வரைபடத்தில் எளிய பார்வைக்குத் தட்டுப்படாத பல நாடுகளில் இருந்துவரும் கமெண்ட்ஸ்கள் பார்வையாளர்களான நம்மையும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் உள்ளுக்குள் உருவானது குறித்தும் அவர்களது ஆரம்பக்காலம் குறித்தும் சுப்ரமணி நம்மிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

 

"நாங்கள் எல்லோரும் வேலைக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தோம். ஒரே நேரத்தில் ஐந்து பேரும் வெளிநாடு சென்றுவிட்டால் குடும்பமே வெறிச்சோடியது போல இருக்கும் என்று கூறி வீட்டில் அனுமதி மறுத்துவிட்டனர். அவர்களை கஷ்டப்படுத்திவிட்டு செல்ல வேண்டுமா என நினைத்து அந்த முடிவைக் கைவிட்டோம். ஐந்து பேர் சேர்ந்து இந்த ஊரிலேயே ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தோம். எங்கள் குடும்பம் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பம். காலையில் வேலைக்குச் சென்றால் இரவுதான் அம்மாவும் அப்பாவும் வீடு திரும்புவார்கள். வீட்டில் நாங்கள்தான் சமையல் செய்யவேண்டும். இதனால், சிறு வயதிலேயே எங்களுக்குச் சமையல் அறிமுகமாகிவிட்டது. எங்கள் குழுவில் உள்ள தாத்தாவும் 30 வருடமாக சமையல் அனுபவம் உள்ளவர் என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தோம்"

 

இன்று சிக்கன், மட்டன், மீன், ஈசல், நண்டு என விதவிதமான சமையல் மூலம் உலகம் முழுவதும் கலக்கி வரும் இவர்களை பின்தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்திற்கும் மேலாகும். இது, தமிழில் ஒரு யூ-டியூப் சேனல் கொண்டுள்ள அதிகபட்ச ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையாகும். பொதுவாக வெற்றி என்பது தேளி மீன் போன்றது. அவ்வளவு எளிதில் கைகளில் வசப்பட்டுவிடாது. அதை வசப்படுத்த சமயோஜிதமும் கூர்நோக்குப் பார்வையும் தேவை.

 

இவர்களுக்கு வெற்றிவசப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "எங்கள் பகுதியில் நெட் வசதி சரியாகக்  கிடையாது. ஒரு நிமிடத்திற்கு 1 எம்.பி. வேகத்தில்தான் கிடைக்கும். அதை வைத்து 3 ஜிபி அளவுள்ள வீடியோவைப் பதிவேற்ற வேண்டும். அவ்வளவு சிரமப்பட்டுச் செய்தும் முதல் எட்டுமாதம் எந்த வரவேற்பும் இல்லை. கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. நம் சமையல் முறையை மாற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து இயல்பாக சமைத்து வீடியோக்களை வெளியிட்டோம். அப்படி நாங்கள் சமைத்த 'ஈசல்' வீடியோவிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்துவிட்டோம். எங்களது ஒரு வீடியோவை முதல்முறையாக ஆயிரம் பேர் பார்த்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது இன்னும் நினைவில் இருக்கிறது" என்கிறார். 

 

cnc

 

வெளிநாடு சென்று சம்பாதித்தால் என்ன சம்பாதித்திருக்க முடியுமோ அதை விட பன்மடங்கு இன்று சம்பாதித்து வருகின்றனர், இக்குழுவினர். குறிப்பாக தேசிய அரசியல் பிரமுகரான ராகுல் காந்தி வருகைக்குப் பின்னர், இந்தியா முழுவதும் பரிட்சயமான முகமாகிவிட்டனர். இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், "எங்கள் சேனலுக்கு உலகம் முழுக்க ஃபாலோயர்ஸ் இருந்தாலும் எங்கள் ஊர்க்காரர்களுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்று முழுமையாகத் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை 'சட்டி, பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எங்கயோ போய் சமைக்கிறானுக' என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ராகுல்காந்தி அவர்களின் வருகைக்குப் பின்னர், 'நம் ஊர் பெயரை இந்தியா முழுக்க தெரிய வச்சுட்டிங்கடா' என்று அவர்களும் எங்களைப் பாராட்டுகிறார்கள். எங்களை வெறும் சமையல்காரரைப் போலப் பார்த்தார்கள். இன்று எல்லாம் மாறிவிட்டது" என்கிறார்.

 

எட்டு மாதங்களாக 'வியூஸ் போகவில்லை' எனத் தன்னம்பிக்கையை இழக்காமலும், இணைய வேகம் குறைவாக இருக்கிறதே எனச் சோர்வடையாமலும் நம்பிக்கை கொண்டு தொடர்ந்து உழைத்ததே இவர்களின் இன்றைய பெரும் பாய்ச்சலுக்கு முக்கியக் காரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்! 

 

சொந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்... அதன்பின் நடந்ததுதான் மாஸ்! ஸ்டீவ் ஜாப்ஸ் | வென்றோர் சொல் #32

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.