Skip to main content

அதிசயப்பிறவி -3 காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?

Published on 01/11/2019 | Edited on 01/11/2019
v

 

ந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்.  இந்துமத துறவிகளும், பக்தர்களும் காவி உடையினையே அணிந்து வருகிறார்கள்.  இதில், வள்ளலார் மட்டும் விதிவிலக்காக இருந்தார்.  காவி உடையினை தவிர்த்து அவர் வெள்ளாடைத்துறவியாக மாறியது ஏன்? 

 

இந்து மதத்தின் மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம் சாடியவர் வள்ளலார்.  மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து மக்களை மீட்கவும் போராடினார்.  பொதுவாகவே சாதி,மத பேதங்களால் மனித இனம் சிதறுண்டு கிடப்பதைக்கண்டு மனம் நொந்து,  சாதி,மத அரசியலை வேரறுக்க வேண்டும் என்று நினைத்து, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை துவக்கி,  ஒரு பெரிய புரட்சிக்கான வித்து போட்ட ஞானி ஆயிற்றே.  அவர் எப்படி  வழக்கமாக துறவிகள் உடுத்தும் காவி உடையை  உடுத்துவார்? ஆடை விசயத்தில் அவர் புதிய பாதையை போட்டுக்கொண்டார்.  

 

வள்ளலார் என்ன சொல்கிறார்?

 

காவியை விடுத்து எதற்காக வெள்ளை ஆடையை தேர்ந்தெடுத்தார் என்பதை வள்ளாலாரின் உபதேசத்தின் மூலமாகவே அறியலாம்.  திருவருட்பா உரைநடைப்பகுதியில்,

’’மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.  மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை.
சந்நியாசி காவிவேஷ்டி போடுவதற்கு ஞாயம்:
தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தை ஜெயித்து தயவை கடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி.  வெற்றியான பிறகு அடைவது தயவு.  ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.
தயவு வெள்ளை என்பதற்கு ஞாயம்:-
தயவென்பது சத்துவம்.  சத்துவ மென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மல மென்பது வெள்ளை வருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானம் என்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
நித்தியத் துறவென்பது:
அறம், பொருள், இன்பம், வீடு – இந்த நான்கையும் நித்தியம் நான்கு காலங்களிலும் செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்பதே நித்தியத்தை அடைவதற்கு ஏதுவாக இருக்கிறது.’’என்று அவர் உபதேசம் செய்திருக்கிறார்.

 

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை.  தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.


லாங்கிளாத்:


    எளிமையின் இலக்கணமாக இருந்த வள்ளலாரிடம் இரண்டே இரண்டு வெள்ளை ஆடைகளும், ஒரு ஜோடி  செருப்பு மட்டுமே இருந்தன. சில சமயங்களில் ஒரே ஒரு ஆடை மட்டுமே அவரிடம் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.  துறவிகள் மரத்தால் ஆன பாதக்குறடு அணிவது வழக்கம்.  வள்ளலார்  செருப்பு(ஜோடு) அணிந்தார்.  இது ஆற்காடு செருப்பு.  

 

 மலிவு விலையில் கிடைத்த லாங்கிளாத் வகை துணியைத்தான் அவர் அணிந்துவந்தார்.  சென்னையை விட்டு கடலூர் மாவட்டத்திற்கு சென்று தங்கிவிட்ட பின்னர், சென்னையில் இருந்த தன் நண்பர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு கடிதம் எழுதி, லாங்கிளாத் துணி வாங்கி அனுப்பும்படி கேட்டுள்ளார். அவரும் அத்துணியினை வாங்கி அனுப்பியுள்ளார்.  

இதனை, 
’அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தை பின்பு செலுத்திவிடலாம்.  இதற்கு பிரயாசம் வேண்டாம்’’
    
‘’வருத்தம் பாராது வரவிடுத்த ஒரு பீசும் ஒன்பது லட்சம் பீசுகளாக கொண்டேன்.  இதுவே அமையும்.  இனி வருத்தமெடுத்துக்கொள்ள வேண்டாம்.  பின்பு பார்த்துக்கொள்ளலாம். இதுவன்றி என் பொருட்டு வேறு வகைகளிலும் பிரயாச மெடுத்துக் கொள்ள வேண்டாம்’’

-என்று இறுக்கம் இரத்தின முதலியாருக்கு வள்ளலார் எழுதிய கடிதங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

 

அந்த லாங்கிளாத் வெள்ளை துணியைத்தான் முழங்காலுக்கு கீழே இருக்கும்படி இடுப்பில் சுற்றிக்கொண்டு, அதையே உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு, முக்காடும் போட்டுக்கொண்டார் வள்ளலார். முதலில் இரண்டு வெள்ளை ஆடைகளை அணிந்து வந்த வள்ளலார், பின்னாளில் ஒரே ஒரு நீளமான வெள்ளை ஆடையின் ஒரு பாதியை இடுப்பில் சுற்றியும், மறு பாதியை உடம்பின் மேலே போர்த்திக்கொண்டும், அதையே தலைக்கு முக்காடிட்டுக்கொண்டார் என்பதை காணக்கிடைக்கும் வள்ளலாரின் சித்திரங்கள் மூலம் அறியமுடிகிறது.


முந்தைய பகுதி:

வள்ளலார் எப்படி இருப்பார்? நேரில் பார்த்தவர்கள் சொன்னது என்ன? அதிசயப்பிறவி #2

 

Next Story

வள்ளலாரின் இறுதி நிமிடங்கள்...

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

ஆன்மீக உலகில் மறுமலர்ச்சி எண்ணங்களை விதைத்த புரட்சியாளராகத் திகழ்கிறார் வள்ளலார்.1823 அக்டோபர் 5-ல் பிறந்த வள்ளலார் ஏறத்தாழ 51 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தன் வாழ்வை அருளார்ந்த பொருள்கொண்டதாய் ஆக்கிக்கொண்டார்.


உலகியல் வாழ்விற்குத் தலையாயது அன்பும் இரக்கமும்தான். அதுவே உண்மையான பக்தி என்று மனம் கனிந்தவர் அவர். பால்மணம் மாறும் முன்பாகவே தன் மூத்த சகோதரரால் ஆன்மீக வாழ்க்கைக்குள் நுழைந்த வள்ளலார், இளமையிலேயே நிறைபுலமை வாய்க்கப் பெற்றவராகத் திகழ்ந்தது வியப்பிலும் வியப்பாகும். அப்போதே அவருடைய அருளுரையில் அன்பில் ஊறிய புலமை பெருகி வழிந்ததைக் கண்டவர்கள், அவர்பால் ஈர்க்கப்பட்டார்கள். காலப்போக்கில் அவர் பாடல்களையும் புனையத்தொடங்கினார். அவற்றில் இருந்த எளிமையும் இனிமையும் ’கேட்டார் பிணிக்கும் தகையவாய்’ அனைவரையும் வசியம் செய்யும் வகையில் இருந்தன. 

vallalar in vadalur

வள்ளலாருக்கு முன்புவரை நம் தமிழ்மொழி, செய்யுள் இலக்கியத்தை மட்டுமே கண்டிருந்தது. அதனால் மொழியில் ஓரளவாவது புலமை இருந்தால்தான் இலக்கியங்களைக் கற்க முடியும் என்ற நிலை அதுவரை  நிலவியது. அதனால் பாமர மக்கள், இலக்கியங்களில் இருந்து சற்றுத் தள்ளியே நின்றுகொண்டிருந்தனர். ஆனால் வள்ளலாரோ, தமிழின் செய்யுள் நடையை நெகிழ்த்தி, கவிதை நடைக்குத் தமிழை அழைத்து வந்தார். தனது எளிய கனிந்த சொற்களால் அவர் புனைந்த கவிதைகள், திருவருட்பாக்களாகக் மலர்ந்து, படிக்காத பாமரர்களிடமும் சென்று ஆன்மீகம் பேசியது. இதனால் ஆண்களும் பெண்களும் வள்ளலார் எழுதிய திருவருட்பாவை, எளிதாக மனனம் செய்து வழிபாடுகளில் பயன்படுத்திப் பரவசம் எய்தினர். 
 

இதன் மூலம் இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் மாபெரும் மறுமலர்ச்சியை வள்ளலார் ஏற்படுத்தினார். அவருடைய வழிபாட்டுமுறை கொஞ்சம் கொஞ்சமாக, அதுவரை கோலோச்சிக் கொண்டிருந்த ஆரிய ஆன்மீகக் கோட்பாடுகளில் இருந்து விலகியது. குறிப்பாக, உருவ வழிபாட்டு நிலையில் இருந்து அவரது பார்வை, ஒளிவடிவில் இறைவனை காணும் வகையில் விரிந்தது. உலகை வருத்தும் பெரும் பிணியான’பசிப்பிணி நீக்கும் கருணை மருத்துவத்தையும்’ அவர் வலியுறுத்தத் தொடங்கினார். அதேபோல் ஆரியத்தின் நச்சுப் பொதியான புராண இதிகாசத்துக்கு எதிராக அவரது அருட்கவிதைகள் கலகக்கொடி பிடித்தன.


வருணாசிரத்தின் மூலம் ஆரியம் அதுநாள் வரை கட்டிகாத்துக் கொண்டிருந்த சாதீய வன்முறைகளை ஒடுக்கும் வகையில், சமத்துவக் குரலை எழுப்பினார் வள்ளலார். ’சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி” என்றெல்லாம் அவர் எழுத்துக்கள் அதிரடிக்குரல் எழுப்பின. அதனால் ஆரிய சனாதனப் பாதுகாவலர்களின் வெறுப்புக்கு பகைமைக்கும் அவர் ஆளானார். 


அதனால் திட்டமிட்டு அவருக்கு எதிரான பரப்புரைகள் செய்யப்பட்டன. ’வள்ளலார் பாடியவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள்’ என்றெல்லாம் நிறுவ முயன்றனர். அவர் காலத்திலேயே ‘திருவருட்பா தூஷன பரிகாரம்’,’மருட்பா’ உட்பட ஏறத்தாழ 12 நூல்கள் அவருக்கு எதிராக அணிவகுத்து வந்தன. எனினும், வள்ளலாரின் அழுத்தமான அறிவார்ந்த சிந்தனைக் குரலும் சனாதன மறுப்பும் அவரை மக்கள் நெஞ்சில், எவராலும் வீழ்த்த முடியாத உயரத்திலேயே நிலை நிறுத்தின. அவர், பகுத்தறிவாளரும் போற்றுகிற ஞானியாகவே திகழ்ந்தார். 


இப்போது நாத்திக முகாம்களாலும் கூட வள்ளலாரின் குரல் எதிரொலிக்கப்படுவது அவருடைய பேரறிவின் அடையாளமாகும். எதிரிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்றும் ஒளியோடு ஒளியாய்க் கரைந்தார் என்றும் வள்ளலாரை வைத்தும் புனைகதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால் 1873 ஜனவரி 30-ந் தேதி, தன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும் வகையில் வள்ளலார் தனியறை புகுந்தார் என்பதே உண்மை. 
 

வள்ளலார் காலத்தில் வாழ்ந்து, அவருடனே 25 ஆண்டுகள் பயணித்த அவருடைய தீவிர சீடரான தொழூவூர் வேலாயுத முதலியார், 1882-ல் சென்னை தியாபிசிகல் சொசைட்டிக்கு வள்ளலார் தொடர்பாகக் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில்...”நான், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த யோகியரான அருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளையவர்களின் சீடன். மகாத்மாக்கள் இருக்கிறார்களா என்பதிலும் அவர்களது விசேஹ கட்டளைப்படியே பிரம்மஞான சபை ஏற்படுத்தப்பட்டதா என்பதிலும் ஆங்கிலேயரும் இந்தியருள் சிலரும் ஐயுறுவதாகத் தெரிகிறது. 


தாங்கள் பெரிதும் உழைத்து மகாத்மாக்களைப் பற்றி எழுதி வரும் நூலைப் பற்றிக் கேள்வியுற்றேன். எனது குருவைப் பற்றிய சில செய்திகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்”  என்று தொடங்கி..... 
 

அவர் தனது 50 ஆம் வயதை அடைந்த போது (1873) இவ்வுலகைத் தாம் நீப்பதற்கேற்பத் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தாம் சமாதி கூடுவதற்கு எண்ணியிருப்பதையும் தெரிவித்தார்.1873 ஆம் ஆண்டின் முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்திப் போதித்து வந்தார். 
 

அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார். 1874 ஜனவரி மாதம் 30- ஆம் தேதி, நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின், ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து, விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது.’என்று வள்ளாரின் கடைசி நிமிடங்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார். அன்பர்களுக்கு வலி தரும் முடிவு அது.


 

Next Story

அதிசயபிறவி -4 வள்ளலார் ஏன் முக்காடு போட்டுக்கொண்டார்? துயரமா? ஞான ஒளியா?

Published on 08/11/2019 | Edited on 09/11/2019

 

v

 

சிறுவயதிலேயே அகத்துறவு மேற்கொண்டுவிட்டாலும் குடும்பத்தின் பாசவலையில் சிக்கி புறத்துறவு மேற்கொள்ளமுடியாமல் வாலிப வயதிலும் தவித்திருந்தார் வள்ளலார்.  அவர் துறவு கொள்ளாதிருக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வந்தனர் குடும்பத்தினர்.  இப்படியான பாசவலை எப்படி அறுந்தது?எப்போது புறத்துறவு மேற்கொண்டார் வள்ளலார்? புறத்துறவுக்கு பின்னர்தான் அவர் உடலை மறைத்து முக்காடிட்டுக்கொண்டாரா?

 

பாசவலை

 

தாய், இரு சகோதரர்கள், இரு சகோதரிகள், அண்ணிகள், சகோதரிகளின் குழந்தைகள், அண்ணனின் குழந்தை என்று வள்ளலாரை பின்னிப்பிணைந்திருந்தது பாசவலை.  இந்தப்பாசவலைகள் ஒவ்வொன்றாக அறுந்த பின்னரே புறத்துறவு மேற்கொண்டார் வள்ளலார்.  

 

சபாபதிப்பிள்ளை திருமணம் செய்துகொண்டு சென்னையில் சிறப்பாக வாழ்ந்தார்.  அவருக்கு அடுத்து பிறந்த பரசுராமப்பிள்ளைக்கும் திருமணம் நடந்து அவரும் சென்னையில் சிறப்புடன் வாழ்ந்தார்.  இதேபோல் கடைக்குட்டியான வள்ளலாருக்கும் திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்று குடும்பத்தனர் முடிவெடுத்தனர்.   எப்போதும் கோயில்,குளம் என்றே கதியாக கிடப்பதால் குடும்பத்தை வெறுத்து துறவியாகப்போய்விடுவார் என்று பயந்து, வள்ளலாருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று குடும்பத்தினர் துடித்தார்கள்.  குடும்பத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக நினைத்திருந்த வேளையில் திருமண பந்தத்தில் சிக்கிக்கொண்டால் என்னாவது என்று மனம் வருந்தினார் வள்ளலார்.  

 

தாயார் சின்னம்மையாரும், மனைவி தனக்கோடியும் அடுத்தடுத்து நோய்வாய்ப்பட்டு காலமானபின்னர், புறத்துறவு மேற்கொள்ள ஆயத்தமானார்.  அண்ணன் சபாபதியின் குழந்தைகளின் ஒன்று வள்ளலாரிடம் மிக பிரியமாக இருந்தது.  அதனால் அக்குழந்தையை பிரியமனமில்லாமல் இருந்தார்.  சின்னம்மாவின் பிரிவினை தாங்கமுடியாமல் மனவேதனையில் இருந்த அக்குழந்தையும் இறந்ததால் மனம் வருந்தினார் வள்ளலார்.

 

தாயும், தாரமும், குழந்தையும் புறத்துறவுக்கு தடை என்று நினைத்துக் கொண்டிருக்கையில், மூவரும் உயிரிழந்தபின்னர் ஒரு தடையும் இல்லை.  இருந்தும் துறவறம் மேற்கொள்ளவில்லை. அது ஏன் என்று அவருக்கே தெரியவில்லை.  தடை சொல்லிச் சொல்லி   பழகியே போனதால், தடை இல்லாமல் போனபோதும் செய்ய நினைத்த வேலையை துவங்குவதில் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.  ஆகவே, நினைத்தது முடிய மாட்டேங்குது.. என்ன செய்வேன்.. என்ன செய்வேன்.. என்று புலம்புகிறார்.

தாய்தடை என்றேன் பின்னர்த் 
          தாரமே தடைஎன் றேன்நான் 
     சேய்தடை என்றேன் இந்தச் 
          சிறுதடை எல்லாந் தீர்ந்தும் 
     தோய்தடைச் சிறியேன் இன்னுந் 
          துறந்திலேன் எனைத் தடுக்க 
     ஏய்தடை யாதோ எந்தாய் 
          என்செய்கேன் என்செய் கேனே.
 
- என்று இறைவனிடம் புலம்புகிறார்.

 

முக்காடு சாமி


எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்பினார் வள்ளலார்.  சிறுவயது முதற்கொண்டே ஆடை மீது அக்கறை செலுத்தாமல் இருந்தார்.  தாயார் மறைவுக்கு பின்னர் அவர் ஈமக்காரியம் செய்துவிட்டு குளித்துவிட்டு கரையேறும்போது முக்காடு போட்டதாகவும், அதுவே நிரந்தமாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.    மனைவி இறந்த பின்னர்தான் அவர் முக்காடு போட்டுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். ஆண்கள் யாராவது தலையில் முக்காடு போட்டிருப்பதை  பார்த்தால், ‘’பெண்டாட்டியை பறிகொடுத்தவன் போல் தலையில் துண்டை போட்டிருக்கான்..’’என்று கூறும் வழக்கு இருக்கிறது.  அதுபோலவே, மனைவியை பறிகொடுத்த துக்கத்தில் முக்காடு போட்டவர், தன் வாழ்வின் இறுதிவரை முக்காடு போட்டுக்கொண்டார்.  அதுவே வள்ளலார் ராமலிங்க அடிகளின் அடையாளமாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.


 தாயாரின் மறைவிற்குப் பின்னர்தான் அவ்வாறு அவர் முக்காடிட்டுக் கொண்டார் என்பதற்கு அவர் பாடலே ஆதாரமாக இருக்கிறது.

’’அருளுருக் கொண்ட ஒரு வடிவு சிவயோகி
வடிவான நின்னரிய முடிமேல் அங்கே
வளர்ந்த சிகை மூன்று பிரிவுள்ளே நின்னரியதாய்
சின்னம்மைதான் அருள் சிவனடிச் சேர்ந்த பின்னர்
ஒரு சிகை கொண்டு அரிய வெண்துகில்
மேற்கொளிஈ அருட்பாதம் ஏற்கும்
நன்கிருபாதரட்சைதனை அங்ஙனமகற்றி ஆளும்
இருளறு வளாகாமது சித்தியெனும் ஓரிடத்து கற்பூர தீபம் ஏற்றி ஆராதித்து
ஆனந்த மேலிட்டு இனிய கூத்தாடி நின்று
பருவுடல் மறைத்து வெளியான அரசே வருக
வருக நல்லரிய
சித்திவண்மையருள் திருவருட்பிரகாச
வள்ளலே வருக என் மணி வருக வருகவே’’
-
என்ற பாடலின் மூலம் வள்ளலார் ஏன் முக்காடிட்டுக்கொண்டார் என்பதை அறியமுடிகிறது. வள்ளலார் எப்போதும் முக்காடு போட்டிருந்ததால் அவரை பலரும் முக்காடு சாமி என்றே அழைத்தனர். 

 

உச்சந்தலையில் ஞான ஒளி

 

வள்ளலாரின் தலையில் ஞான ஒளிக்கீற்று இருந்ததாகவும் அதை மூடி மறைப்பதற்காகத்தான் முக்காடு போட்டுக்கொண்டார் என்று கூறுகிறார்கள்.   அதற்கு உதாரணங்களாக சில நிகழ்வுகளையும் சொல்கிறார்கள்.  

                                                                                                           

வடலூர் சத்திய தருமசாலையில் தினமும் வள்ளலாரின் அருளுரையை கேட்டு வந்த ஒருவருக்கு, வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது.   வள்ளலாரிடத்தில் நேரிடையாக கேட்க தயங்கிய அவர், ஒரு நாள் கூட்டம் முடிந்ததும் தன் மகனைவிட்டு கேட்கலாம் என்று காத்திருந்தார்.   அதன்படியே கூட்டம் முடிந்ததும் தயங்கித்தயங்கி நின்ற அவரை அழைத்த வள்ளலார், ’’நான் ஏன் முக்காடு போட்டிருக்கிறேன் என்றுதானே கேட்க நினைக்கிறாய்?’’என்று கேட்டார்.    தான் மனதில் நினைத்திருந்ததை அப்படியேச்சொன்னதும், வாயடைத்துப்போனார்.

 

அடுத்து, ‘’உன் கேள்விக்கு இதோ பதில்’’என்று தன் முக்காட்டை வள்ளலார் நீக்கியதும், ஒரே ஒளி வெள்ளம். அதைக்காண முடியாமல் மயங்கி விழுந்துவிட்டார் அன்பர்.  அவரை எழுப்பிய வள்ளலார்,  இதைப்பற்றி யாரிடமும் சொல்லாதே’’என்று கேட்டுக்கொண்டதாக சொல்கிறார்கள்.  மேலும், ஒருநாள் தருமச்சாலைக்கு வெளியே வெய்யிலில் உட்கார்ந்திருந்தார் வள்ளலார்.  அப்போது வள்ளலாரின் தலையின் உச்சியில் இருந்து ஆகாயத்திலிருந்த சூரியன் வரைக்கும் அக்னிக் கம்பம் நீண்டிருந்ததைக்கண்டு மெய் சிலிர்த்துப்போனார்கள் என்று சொல்ப்படுகிறது.

வள்ளலாரின் தலையில் ஒளிக்கீற்று இருந்தது உண்மைதான் என்பதை வாரியாரின் சுயசரிதை மூலம் புரிந்துகொள்ள முடியும்.

 

வாரியாரின் விளக்கம்

 கிருபானந்த வாரியார் தனது சுய சரிதத்தில், ’வள்ளலார் ஏன் முக்காடு போட்டிருக்கிறார்?’ என்பதற்கு விளக்கமளித்துள்ளார். சுயசரிதையில் அவர், ”வடலூரில் சத்திய ஞானசபை திருப்பணித் துவக்கத்தில் ஒருநாள், சத்திய ஞானசபையின் அர்ச்சகர் சிவாச்சார்யரின் இல்லத்துக்கு உணவு அருந்தச் சென்றிருந்தேன். பாலசுப்ரமணிய சிவாச்சார்யர் நேர்மையானவர். வள்ளலாரின் சீடரான சபாபதி சிவாச்சார்யரின் பேரன்.  அவரின் தாயார் நடையில் அமர்ந்திருந்தார். நான் அவரை வணங்கி, அவருக்கு அருகில் அமர்ந்தேன்.

 

 ‘பெரியம்மா, வணக்கம்! தாங்கள் ராமலிங்க அடிகளாரைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று ஆவலுடன் கேட்டேன். அவர் சிரித்த முகத்துடன், ‘அப்போது எனக்கு ஐந்தரை வயது. எங்கள் தாத்தா ஆடூர் சபாபதி சிவாச்சார்யரைக் காண சந்நிதானம் (வள்ளலார்) வருவார். என் தோள்களைப் பிடித்து, ‘குட்டிப் பெண்ணே… குட்டிப்பெண்ணே’ என்று கூப்பிட்டுக் கொஞ்சி விளையாடுவார். அப்போது அவரது திருமேனியில் இருந்து பச்சைக் கற்பூர வாசனை வீசும். அவருடைய சிரத்தில் உள்ள முக்காடு விலகும்போது, மின்னலைப் போன்ற ஞானஒளி வீசும். அப்போது சந்நிதானம், தலையில் உள்ள முக்காட்டுத் துணியை இழுத்து மறைத்துக்கொள்வார்’’என்று சொன்னதாக  எழுதியுள்ளார்.

- கதிரவன்

முந்தைய பகுதி:

அதிசயப்பிறவி -3 காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?