Skip to main content

"என்னை விரக்தியிலிருந்து மீட்ட அந்த வாசகம்..." ராகுல் டிராவிட்டின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #36

Published on 26/05/2021 | Edited on 27/05/2021

 

Rahul dravid

 

“முதல் 15 நிமிடங்களில் டிராவிட் விக்கெட்டை எடுக்க முயற்சியுங்கள்; முடியவில்லை என்றால் மற்றவர்கள் விக்கெட்டை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” - ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். “சச்சின் சிறந்த வீரர்தான்; ஆனால், டிராவிட் வலுவான வீரர்; குறைவான பந்துகளை மட்டுமே அவர் அடிப்பதால் அவர் தவறு செய்வதும் மிகக்குறைவு; களத்தில் குறைவான தவறு செய்பவரை வீழ்த்துவது மிகமிகக் கடினம்” - பாக். வேகப்புயல் அக்தர். “டிராவிட் இந்தியாவின் சுவராக அறியப்படுகிறார்; அவர் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் அந்தக் கோட்டைச் சுவரை உடைக்க பன்னிரண்டு பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்ய வேண்டும்” - ஆஸி. சுழல் ஷேன் வார்னே. இதுபோல உலகம் முழுவதும் உள்ள வென்றவர்களின் டிராவிட் குறித்த வார்த்தைகளை வைத்து மட்டுமே வென்றோர் சொல் தொடரில் டிராவிட் குறித்து பல கட்டுரைகள் எழுதலாம். டிராவிட்... இந்திய கிரிக்கெட் உலகின் வலுவான கோட்டைச் சுவர். ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட் என மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் டிராவிட் களம் கண்டிருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தக் கோட்டைச் சுவரின் அஸ்திவாரம் கூடுதல் வலுமிக்கது. டிராவிட் குறித்த மேற்கண்ட உலக வீரர்களின் உச்சி முகர்தலெல்லாம் ஒரே நாளில் கிடைத்தவையல்ல. உள்ளூர், சர்வதேசம் என டெஸ்ட் கிரிக்கெட் களத்தில் 44,152 நிமிடங்கள் களத்தில் நின்று சுழல், வேகம் என 31,258 பந்துகளை எதிர்கொண்ட பின்னரே கிடைக்கப்பெற்றவை.

 

1973ஆம் ஆண்டு ஷரத் டிராவிட் - புஷ்பா டிராவிட் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் ராகுல் டிராவிட். மத்தியப் பிரதேசத்தில் வசித்த டிராவிட் குடும்பம், அவர் இளம் வயதாக இருக்கும்போதே கர்நாடகாவிற்குக் குடிபெயர்கிறது. டிராவிட்டின் மாமா சி.கே. நாயுடு மத்தியப் பிரதேசத்தின் உள்ளூர் கிரிக்கெட் அணியான கோல்கர் அணி வீரர் என்பதாலும், டிராவிட்டின் தந்தை பல்கலைக்கழக அணி வீரர் என்பதாலும் டிராவிட்டிற்கு இளம் வயதிலேயே கிரிக்கெட் அறிமுகமாகிவிடுகிறது. பயணம் செய்யக்கூடிய தொலைவில் உள்ளூர், சர்வதேசம் என எந்தக் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் மைதானத்திற்கே நேரில் சென்றுவிடுவார் டிராவிட்டின் தந்தை ஷரத் டிராவிட். அத்தகைய நேரங்களில் ராகுல் டிராவிட்டையும் உடன் அழைத்துச் செல்வார். நாட்கள் செல்லச்செல்ல தந்தையின் மிகுதியான கிரிக்கெட் ஆர்வம் ராகுல் டிராவிட்டிற்கும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது. அவர்கள் குடும்பம், படிப்புதான் முதன்மையானது என்ற கருத்துநிலையில் ஊறிப்போயிருக்கும் வழக்கமான இந்தியக் குடும்பத்தில் ஒரு குடும்பமாக இருந்ததால், ஆரம்பக்காலத்தில் டிராவிட்டின் கிரிக்கெட் வீரானாக வேண்டும் என்ற கனவிற்கு எதிர்ப்பு எழுந்தது. டிராவிட்டின் மாமாவும் தந்தையும் கிரிக்கெட்டில் சொல்லிக்கொள்ளும்படியான உயரத்தை எட்டாததால் டிராவிட்டின் பெற்றோர் இந்த விஷயத்தை மிகக்கவனமாக அணுகினர். அந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, வீட்டின் பின்புற கிரிக்கெட், தெரு கிரிக்கெட், மாநில கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் எனச் செங்கல் செங்கலாக வலுவான அஸ்திவாரத்துடன் பின்னாட்களில் எழுந்து நின்றது இந்தச் சுவர்.

 

Rahul dravid

 

"வழக்கமான நடுத்தரக் குடும்பத்தில்தான் நான் பிறந்தேன். என் மாமாவும் அப்பாவும் கிரிக்கெட் வீரர்கள். என் அப்பாவிற்கு இருந்த கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் காரணமாக டெஸ்ட் போட்டி நடைபெறும் நாட்களில் எங்கள் வீட்டில் ரேடியோ வர்ணனை முழுவதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அருகில் எங்காவது கிரிக்கெட் போட்டி நடந்தால், அப்பா என்னையும் என் சகோதரனையும் மைதானத்திற்கு அழைத்துச் செல்வார். என் தந்தையுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கும். அந்த ஆர்வம், என் வீட்டின் பின்புறமும் தெருக்களிலும் கிரிக்கெட் விளையாடும் ஆசையைத் தூண்டியது. அந்த ஆசைதான் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் என் எதிர்காலம் என்ன என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால் பள்ளிக் காலங்களிலேயே கிரிக்கெட் உலகத்திற்குள் முழுவதும் மூழ்கிவிட்டேன். கிரிக்கெட் போட்டி காரணமாக நான் அடிக்கடி பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதனால் என்னுடைய கல்வி கேள்விக்குறியாகிறது என என்னுடைய பெற்றோர் பள்ளித் தலைமையாசிரியரிடம் முறையிட்டனர். எப்போதும்போல அவன் கிரிக்கெட் விளையாடட்டும்; அவன் படிப்பை என்னுடைய பொறுப்பில் விடுங்கள் எனக் கூறி என்னுடைய பெற்றோருக்கு அவர் நம்பிக்கை அளித்தார். அப்போது நான் எட்டாம் வகுப்புதான் படித்துக்கொண்டிருந்தேன். அன்று என் மேல் அவர் கொண்டிருந்த நம்பிக்கை நம்ப முடியாதது. ரஞ்சி போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது சுழற்பந்துவீச்சில் விளையாடத்தான் அதிக வாய்ப்புக் கிடைத்தது. சர்வதேச தரத்திலான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள சந்தர்ப்பம் வாய்க்காததால், பயிற்சி எடுக்கும்போது டென்னிஸ் பந்தை தண்ணீரில் நனைத்து, அருகிலிருந்து அதிக வேகத்தில் எறியச் சொல்லி பயிற்சி எடுத்தேன். என்னுடன் இருந்தவர்கள் அந்தப் பயிற்சியைத் தேவையற்ற ஒன்றாகக் கருதினார்கள். இருப்பினும் நான் அதில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதுதான் பின்னாட்களில் அக்தர், மெக்ராத், அக்ரம் போன்றவர்களை எதிர்கொள்ள எனக்கு உதவியது".

 

சாதிக்க வேண்டும் என்ற லட்சியக்கனவு கொண்ட இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோரிடத்தில்  உடனடி வெற்றி குறித்தான எண்ணம் மேலோங்கியுள்ளது. இலக்கை அடைய ஆகும் காலமென அவர்கள் தீர்மானித்துள்ள கால அளவைத் தாண்டி எடுக்கப்படும் கூடுதல் காலம், தன்னம்பிக்கை இழப்பையும் லட்சிய ஓட்டத்தில் அயற்சியையும் ஏற்படுத்தும் காரணியாக அமைந்துவிடுகிறது. இதையும் நம்பிக்கை கொண்டு கடந்து வருபவர்களின் பாதங்களே வெற்றிக்கோட்டைத் தொடுகின்றன. தன்னுடைய வாழ்வில் இது போன்றதொரு தருணத்தை எதிர்கொண்டது குறித்து டிராவிட் ஒரு மேடையில் பேசுகையில், "19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக நான் செயல்பட்ட போதிலும் இந்திய அணியில் எனக்கு இடம் கிடைக்க 5 ஆண்டுகள் காலமெடுத்தன. நான் எங்கு சென்றாலும் இந்திய அணிக்காக எப்போது விளையாடுவீர்கள் என என்னிடம் கேட்பார்கள். இது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது. கடவுள் தாமதிக்கிறார்; மறுக்கவில்லை என்ற வாசகத்தை என்னுடைய பைக்கில் எழுதி ஒட்டினேன். என்னுடைய கிட் பேக்கை எடுத்துக்கொண்டு காலையில் பயிற்சிக்குச் செல்லும்போது இந்த வாசகம்தான் எனக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும். சீன வகை மூங்கில் ஒன்று உள்ளது. அதன் விதையைத் தரையில் விதைத்துவிட்டு நீங்கள் தண்ணீர் ஊற்றினாலும் 5 வருடங்களுக்கு அதில் எந்த வளர்ச்சியையும் காண முடியாது. 5 வருடங்களுக்குப் பிறகு, சிறிய அளவில் முளைவிடும். அடுத்த ஆறு வாரங்களில் 90 அடி உயர வளர்ச்சியை அந்த மூங்கில் எட்டும். நாள் ஒன்றுக்குத் தலா 39 இன்ச் வளருவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அப்படியென்றால் அந்த ஐந்து ஆண்டுகளில் மூங்கில் என்ன செய்துகொண்டிருந்தது? அது, சத்தமில்லாமல் தன்னுடைய வேரை வளர்த்துக்கொண்டிருந்தது. அந்த அளவிற்கு வலுவான வேர் இல்லையென்றால், இவ்வளவு உயர மூங்கிலால் நிற்க முடியுமா? இந்த மூங்கில் 6 வாரங்களில் 90 அடி வளர்ச்சியை எட்டியதாகச் சிலர் சொல்லலாம். ஆனால், இந்த வளர்ச்சி 5 வருடங்கள் 6 வாரங்களில் எட்டப்பட்டது என்றுதான் நான் சொல்வேன்" என்றார். டிராவிட்டின் இந்த வார்த்தைகள் அந்த மூங்கிலின் வேர்களைவிட வலுவானவை என்றால் மறுப்பதிற்கில்லை.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்...

 

செருப்பு போட்டதே காலேஜ் வந்துதான்... இஸ்ரோ சிவன் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #35

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.