Skip to main content

‘ஆச்சி’க்கு இத்தனை அர்த்தமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 24

Published on 01/11/2018 | Edited on 17/11/2018
soller ulavu


எந்தச் சொல்லாயினும் அச்சொல்லானது ஏதேனும் ஒரு பொருளைக் குறித்தே தோன்றுகிறது. சொல் என்பது பொருளுணர்த்துவது. பொருளுணர்த்தாத எவ்வொன்றும் சொல்லாகாது. இதனை இத்தொடரின் தொடக்கத்திலேயே கூறியிருக்கிறேன். ஒரு சொல்லுக்கு ஒரு பொருளுண்டு என்பது திண்ணம். அச்சொல் ஒற்றைப்பொருளோடு நின்றுவிடுவதுமில்லை. தொடர்ந்து வெவ்வேறிடங்களில் பொருளுணர்த்தும் உயிர்ப்போடு விளங்குகிறது.
 

ஒரு சொல்லுக்கு ஒரேயொரு பொருள் மட்டுமே உள்ளதா ? அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் வழங்கப்படுமா ? ஒரு சொல்லுக்கு ஒரு பொருளேனும் உண்டு. அதற்கு மேலும் பல பொருள்கள் வழங்கப்படுவதும் உண்டு.  
 

ஒரு சொல்லானது ஓரிடத்தில் தோன்றி அவ்வோரிடத்திலேயே வழங்கப்படுவதைல்லையே. எவ்வொரு சொல்லும் தான் தோன்றிய இடத்திலிருந்து பரவி பன்னிலங்களில் வழங்கப்படுவது. அதன் தோற்றுவாயே கூட பற்குழுக்களிடையே வெவ்வேறு பொருள்களோடு தோன்றியதாய் இருக்கக்கூடும். இவ்வேறுபாட்டினை மக்களின் பேச்சுத் தமிழிலேயே நாம் உணரலாம்.
 

தமிழகத்தின் தென்புலத்தில் ‘ஆச்சி’ என்னும் சொல் பழுத்த மூதாட்டியைக் குறிக்கிறது. மேற்கு மாவட்டங்களில் அச்சொல் ‘ஆயிற்று’ என்ற வினைப்பொருளின் கொச்சையாக வழங்கப்படுகிறது. நெல்லையில் “என்ன ஆச்சி ?” என்றால் “என்ன அம்மையே ?” என்பது பொருள். கோவையில் “என்ன ஆச்சி ?” என்றால் “என்ன ஆயிற்று?” என்பது பொருள். ஒரே சொல்தான். அதற்கு ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு மக்கள் திரளிடையேயும் ஒவ்வொரு பொருள் வழங்கப்படும் என்பது நாம் விளங்கிக்கொள்ளக் கூடியதே.
 

மொழியறிவும் புலமையும் மேம்படுகையில் ஒரு சொல்லுக்கு வழங்கப்பட்ட எல்லாப் பொருள்களும் தொகுக்கப்பட்டன. மொழிப்புலவர்களின் வேலையே இதுதான். எளியவர்களுக்கு ஒரு சொல்லின் ஒரு பொருள்தான் தெரிந்திருக்கும். மொழியின் ஆழங்கால் பட்டவர்க்கே ஒரு சொல்லுக்கு வழங்கப்படும் பற்பல பொருள்களும் தெரிந்திருக்கும்.
 

ஊசி என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். ஊசி என்ற சொல்லைக் கேள்வியுற்றவுடன் நமக்குத் தோன்றும் பொருள் என்ன? துணிப்பிரிவுகளை நூல்கொண்டு தைத்து இணைக்கும் கூர்மையானதும் மெலிதானதுமான குத்து பொருள். ஊசி என்ற சொல்லுக்கு வழங்கப்படும் இப்பொருளை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஊசி என்பதற்கு அஃதொன்றே பொருளா ?
 

அக்காலத்தில் ஊசியின் முதன்மைப் பணிகளில் ஒன்று ஓலைச்சுவடிகளில் எழுதுவது. எழுத்தாணியை ஊசி என்று வழங்கியிருக்கின்றனர். காலில் முள் தைத்தால் அதனைக் கிழித்து அகற்றுவதற்கும் ஊசி பயன்பட்டிருக்கிறது. கிழிபட்ட துணியைத் தைப்பதற்குப் பயன்பட்ட அதே ஊசிதான் முள்ளேறிய கால் பகுதியின் மேல் தோலைக் கிழிப்பதற்கும் பயன்பட்டிருக்கிறது. இப்படி அப்பொருளின் பயன்பாடு அதன் தோற்ற நோக்கத்தைத் தாண்டி விரிவடைகிறது. தராசு எனப்படும் எடைக்கோலின் நடுமுள் நேராக நிற்றல் வேண்டும். அம்முள்ளையும் ஊசி என்றே வழங்கியிருக்கின்றனர்.
 

ஊசி என்பது சின்னஞ்சிறு பொருள் ஆயிற்றே. சின்னஞ்சிறு பொருளாயினும் அதன் செயலில் வன்மையுடையது. அத்தன்மையைக் கொண்டு அத்தன்மையுடைய வேறு பொருள்கள் சிலவற்றுக்கும் ஊசி என்ற முன்னொட்டைச் சேர்த்துக்கொண்டனர். எடுத்துக்காட்டாக, வயிற்றைக் குடையும் புழுவுக்கு ‘ஊசிப்புழு’ என்று பெயர். செடிகொடிகளில் சின்னஞ்சிறிதாய்க் காணப்படும் சல்லிவேர்கள்தாம் பாறையை முதலில் துளைத்துச் செல்பவை. அதனால் அவற்றை ஊசிவேர்கள் என்றார்கள். மல்லிகையில்கூட ஊசிபோல் மெலிதாயும் நீண்டுமுள்ளது ஊசிமல்லிகை எனப்பட்டது.
 

வடதிசைக்கும் ஊசி என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. வடதிசைக்கு அச்சொல் எப்படி ஏற்பட்டிருக்கக்கூடும் என்று எண்ணிப் பாருங்கள். காந்த ஊசி எப்போதும் வடதிசையைக் காட்டி நிற்கும். “ஊசி காட்டும் திசை வடக்கு” என்பதன் சுருக்கமாக அத்திசையைக் காட்டும் பொருளைக் கொண்டே திசைக்கும் பெயர் வைத்துவிட்டனர். ஒரு சொல் இப்படித்தான் அதன் வடிவத்தை, வன்மையை, தன்மையை, ஒன்றோடொன்று தொடர்புடைய இயல்பினைக்கொண்டு அடுத்தடுத்த பொருளழகினை ஏற்றுக்கொள்கிறது. “ஒரு சொல்லுக்கு இத்தனை பொருள்களா? இவற்றையெல்லாம் யார் நினைவிற்கொள்ள முடியும் ?” என்று நாம் தேவையின்றி அஞ்சுகிறோம். ஆனால், அப்பொருளின் ஏதோ ஓர் ஒற்றுமை அடுத்தடுத்த பொருளாட்சியை ஏற்று நகர்கிறது. இச்செயல் பன்னெடுங்காலமாக நடந்தது. இன்றைக்கு அவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது நமக்கு வியப்பூட்டுகிறது.   
 

சிறிய கருவிதான். அதற்கு வழங்கப்படும் ஒற்றைப் பொருள், அதன் ஒவ்வோர் இயற்கையைக்கொண்டு ஒவ்வோரிடமாக நகர்ந்து செல்கிறது. ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள் தோன்றுவது இப்படித்தான்.


முந்தைய பகுதி:
 

“இதற்குப் பெண்பால் என்ன ?’ கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 23

 

அடுத்த பகுதி:

 

 சண்டமாருதம் என்றால் என்ன??? சரிகமபதநி-யின் தமிழ் பொருள் இதுதான்... கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 25

 

 

 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார். 

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார்.