Skip to main content

குழந்தைன்னு நினைச்சோம்; 39 வயசு குழந்தைன்னு நினைக்கல! ஒசிட்டா ஐஹீம் | வென்றோர் சொல் #34

Published on 20/03/2021 | Edited on 20/03/2021

 

osita

 

பல ஆண்டுகளாக அந்தச் சிறுவன்... இல்லை... இளைஞன் சினிமா கனவுகளோடு வாய்ப்புத் தேடி, பல தயாரிப்பாளர்களின் அலுவலக வாசற்படி ஏறி இறங்குகிறான். நடிகனாகத் திரையில் தோன்றுவதற்குத் தேவையான வசீகர முகமோ, உடல் கட்டமைப்போ, உயரமோ அவனிடம் கிடையாது. கையில் இருந்ததெல்லாம் சில மேடை நாடகங்களில் நடித்த அனுபவமும் அதற்குக் கிடைத்த கைத்தட்டல் தந்த உற்சாகத்தால் பிறப்பெடுத்த 'பெரிய நடிகனாக வேண்டும்' என்ற ஆசையுமே.

 

நெடும் போராட்டத்திற்குப் பிறகு 18 வயதில் முதல் வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த தயாரான வேளையில், 'குழந்தை வேடத்தில் நடிக்க வேண்டும்' என்று கூறி அதிர்ச்சியளிக்கிறது, அந்தத் தயாரிப்பு நிறுவனம். சற்று யோசித்துப் பாருங்கள்... 18 வயது மதிக்கத்தக்க ஒர் இளைஞனை 7 வயது குழந்தையாக நடிக்க கேட்டுக்கொண்டால்... அதுவும் அவர் உடல்குறைபாட்டை காரணமாக வைத்து இவ்வாறு கூறினால் எப்படி இருக்கும்? நாமாக இருந்தால் அந்த இடத்தில் உடைந்து போயிருப்போம். உலக காமெடியன் என்ற அந்தஸ்துடன் இன்று இணைய உலகை கலக்கிக்கொண்டிருக்கும் ஒசிட்டா ஐஹீம் அந்தத் தருணத்தைக் கையாண்ட விதம் வேறு. கிடைத்த வாய்ப்பை இழக்க விரும்பாத ஒசிட்டா, அக்குழந்தை வேடத்தில் நடிக்கிறார். இந்த முடிவை ஒசிட்டா எப்படி எடுத்தார் என நமக்குள் பல கேள்விகள் எழலாம். அக்கேள்விகளுக்கெல்லாம் "உயரம் குறித்த எண்ணங்கள் வருத்தத்திற்கோ தாழ்வுமனப்பான்மைக்கோ என்னை ஒரு போதும் உள்ளாக்கியதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் குள்ளமானவன் என்று யாராவது கூறினால் நம்பமாட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் உயரமானவன்" என உதடுகள் வழியே தன்னம்பிக்கைப் பொங்கப்பொங்கப் பதிலளிக்கிறார், ஒசிட்டா ஐஹீம்.

 

நைஜீரிய நாட்டில் இமோ மாநிலத்தில் ஹெர்பர்ட் ஐஹீம் - அகஸ்டின் ஐஹீம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர், ஒசிட்டா ஐஹீம். குடும்பத்தில் மொத்தம் 5 குழந்தைகள். வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக ஒசிட்டாவின் வளர்ச்சி இளம் வயதிலேயே தடைபட்டு போனதால் அவர்கள் ஊரிலேயே ஒசிட்டாதான் குள்ளமான மனிதர். தந்தையின் பணி நிமித்தம் காரணமாக குடும்பம் அண்டை மாநிலத்திற்குக் குடிபெயர்கிறது. ஆரம்பக்காலங்களில் குள்ளன் என்ற கேலி சொற்கள் ஓசிட்டாவை அதிகம் காயப்படுத்தியதால் அவற்றை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டார். பின்னாட்களில் அது பழகிவிட, கிண்டல்களை இடதுகையால் புறந்தள்ளும் கலையையும் கற்றுக்கொண்டார். எப்போதும் துறுதுறுவென சேட்டைகள் செய்யும் குழந்தைகளை 'உசரத்துக்கு தக்க வேலையப் பாரு' எனச் சொல்வது வழக்கம். இந்த வசை மொழி ஒசிட்டாவிற்கும் கச்சிதமாகப் பொருந்தும். குடும்பத்திற்கான வருவாய் ஆதாரமாக இருந்த ஒசிட்டாவின் தந்தை எதிர்பாராத விதமாக மரணமடைகிறார். இது, ஒசிட்டாவை மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரையும் வெகுவாகப் பாதிக்கிறது. பின், ஐந்து குழந்தைகளையும் தனி ஆளாக நின்று வளர்த்து ஆளாக்குகிறார், ஒசிட்டாவின் தாயார். அவர்கள் பகுதியில் இருந்த தேவாலயங்களில் நடைபெறும் மேடை நாடகங்களில் தோன்றி நடிக்க ஆரம்பிக்கிறார் ஒசிட்டா. அதற்கு கிடைக்கும் கைத்தட்டல்கள் ஒசிட்டாவை மிகவும் உற்சாகப்படுத்த, நடிகராக வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் முளை விடுகிறது. அதன் நீட்சியாக எழுந்த உலகறிந்த சர்வதேச நடிகராக வேண்டும் என்ற எண்ணம் , உள்ளுக்குள் முளைவிட்ட ஆசைக்கு உரமிடுகிறது. 

 

"வாழ்க்கையில் இவ்வளவு பெரிய உயரத்தைத் தொடுவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஒரு நடிகராக வேண்டும்... வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாக இருந்தது.  எங்கள் பகுதியில் இருந்த தேவாலயத்தில் மேடை நாடகங்களில் நடித்தபோது நிறைய கைத்தட்டல்கள் கிடைத்தன. அவை, சர்வதேச நடிகராக வேண்டும் என்ற ஆசையை எனக்குள் ஏற்படுத்தின. கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது எனக் கருதி குழந்தை வேடங்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். துறுதுறு குழந்தையாக நடித்தது எல்லாம் என்னுடைய நிஜ கதாபாத்திரத்தின் பிரதிபலிப்பே என்பதால் துல்லியமாக அதைச் செய்ய முடிந்தது. பின்னாட்களில் அதுவே எனக்கான அடையாளங்களாக மாறின. அப்போதுதான் நண்பர் சினேடுவைச் சந்தித்தேன். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ஹிட்டாகின. எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் எனக்கான சிறந்த ஒன்றை எப்போதும் வைத்திருப்பார் என்று நம்புவேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது".

 

osita

 

நைஜீரிய நாட்டு காமெடியனாக இருந்த ஒசிட்டாவை, 2003-ஆம் ஆண்டு வெளியான 'அகி நா உக்வா' திரைப்படம் உலகக் காமெடியனாக மாற்றியது. அதில், அவர் ஏற்று நடித்திருந்த பாவ்பா கதாபாத்திரம் உலக காமெடி ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் கேரக்டர். ஒசிட்டா என்ற பெயரை அறியாதவர்கள்கூட பாவ்பாவை அறிந்திருப்பர். இன்று சமூக வலைதளங்களில் நாம் பார்த்து ரசிக்கும் ஒசிட்டாவின் பெரும்பாலான காமெடிகள் மற்றும் மீம் டெம்ப்ளேட்டுகள்  'அகி நா உக்வா' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளேயாகும்.

 

நைஜீரியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள ஒசிட்டா, 'இன்ஸ்பைர்ட் மூவ்மெண்ட் ஆஃப் ஆப்ரிக்கா' என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார். திறமையான இளம் தலைமுறையினரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உத்வேகமும் உதவியும் அளிக்கக்கூடிய பெரும்பணியைச் செய்து வருகிறது, இந்த அமைப்பு. ஒசிட்டா செய்த, செய்துவரும் சாதனைகள் மற்றும் தொண்டுகளை விட அதிகம் ஆச்சரியம் அளிப்பது அவரது வயதே. சின்னக் குழந்தை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒசிட்டாவின் தற்போதைய வயது 39 என்றால் பலரும் நம்பமாட்டார்கள். 

 

குள்ளன் என்ற கேலி சொற்கள், நிராகரிப்பு, குழந்தை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு என பின்புலமற்ற எளிய மனிதர்களை எளிதில் உடையச் செய்துவிடும் சந்தர்ப்பங்களையெல்லாம் தன்னம்பிக்கை கொண்டு கடந்து வந்ததே ஒசிட்டா ஐஹீமின் இந்த வெற்றிக்குக் காரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!
 

வில்லேஜ் குக்கிங் | வென்றோர் சொல் #33
 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.