Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #31

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

maayapura part 31

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா  அம்மாவை வீட்டிற்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் இருக்கிறது என்று அசோக் சொன்னதும் சங்கவி அதிர்ந்தாள். என்ன சிக்கலாக இருக்கும் என யோசித்தாள். "என்ன மாமா சொல்றீங்க?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் சங்கவி.

"ஏய்  சங்கவி ஏன் பயப்படுற அமைதியாக இரு" என்று சங்கவியை அமைதிப்படுத்தினான்.

"ரமா அம்மாவை அழைத்துச் சென்றாள்  அத்தையும் மாமாவும் கோபப்படுவார்கள். போதாததற்கு புவனா வேறு  அத்தையை தூண்டி  விடுவாங்கன்னு சொல்றீங்களா மாமா"என்று தன் யோசனையைச் சொன்னாள் சங்கவி. 

"அவர்களை சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை.ஏதாவது பொய் சொல்ல வேண்டியதுதான். நல்ல விஷயத்திற்கு பொய் சொல்றது தப்பு இல்லைன்னு வள்ளுவரே சொல்லியிருக்கிறார்" என்று சாட்சிக்கு வள்ளுவரை அழைத்தான் அசோக். முதல் பிரச்சனை ரமா அம்மா கேன்சர் நோயாளி  என்றும் அவர்கள் வாழ்வின் விளிம்பில் இருக்கிறார் என்றும் யாருக்கும் தெரியவேண்டாம்.ஒருவர் பிறர் மீது காட்டும் அன்பு இயல்பாக வர வேண்டுமே தவிர இரக்கத்தின் காரணமாக வரக்கூடாது. அதனால் வீட்டில் எல்லாரிடமும் ரமா அம்மா என் நண்பனின் அம்மா என்றும் அம்மா ஒரு வாரம் அமைதிக்காக கிராமத்தில் தங்க வந்திருக்காங்கன்னு சொல்லுவோம்"என்று திட்டம் போட்டான் அசோக்.

"ஏன் மாமா நீங்க படிச்சது உங்க கிராமத்தில் தானே? அப்புறம் எப்படி வீட்டிற்கு தெரியாமல் நட்பு இருக்கும்" என்று புத்திசாலி என்ற நினைப்புடன் கேட்டாள் சங்கவி.

"அறிவே நான் பியூசி டவுனில் ஹாஸ்டலில்தானே தங்கிப் படித்தேன். அந்த சமயத்தில் இருந்த நட்பு வீட்டிற்கு தெரியாது. அதை பற்றி சொல்வேன் என்று ஒரு முடிவுடன் சொன்னான் அசோக். "சரிங்க மாமா ஒரு பிரச்சனை முடிந்தது. இன்னொரு பிரச்சனை என்ன மாமா? என்று ஆர்வமாக கேட்டாள் சங்கவி. "நம்ம வீட்டில் ஆளுக்கு ஒரு அறை தான் இருக்கு. ரமா அம்மாவை எங்கு தங்க வைப்பது?" என்று அசோக் தயக்கமாக சொன்னான். 

"ஆமாம் மாமா  நம்ம அறையை கொடுப்போம்" என்று தியாகியாக சொன்னாள் சங்கவி. 

"என்னது நாம கொடுப்பது அறையா... என்னவோ போனா போகுதுன்னு தட்டு முட்டு சாமான் எல்லாம் ஒதுங்கி நமக்கு கொஞ்சம் இடம் விட்டு வச்சிருக்கு" என்று கிண்டலாக சொன்னான் அசோக்.

"முதல்ல ஒரு பிரச்சினையை முடிப்போம். ரமா  அம்மாவை நல்லபடியா வீட்டில் தங்க வைப்போம். பிறகு அவர்கள் தங்கும் வசதியைப் பற்றி பேசுவோம்". என்றான் அசோக். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே ரமாவை பார்ப்பதற்கு வக்கீலும், பத்திரம் எழுதுபவரும், ரிஜிஸ்டாரும் வந்தார்கள். அனைவரையும் வணக்கம் சொல்லி வரவேற்றார் ரமா. எப்படி பத்திரம் எழுத வேண்டும் என்று விளக்கினார் ரமா.தன்னுடைய  எதிர்கால திட்டத்தைப்  பற்றி விரிவாக கூறினார். இதை கேட்டதும் வக்கீலும், ரிஜிஸ்டாரும் மகிழ்ந்தனர். பத்திரம் எழுதுபவர் ரமா சொன்னவற்றை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டார். அங்கேயே பத்திரம் எழுதப்பட்டது. ஒருமுறை அனைத்தையும் படித்து சரி பார்த்தார் ரமா. "அம்மா மகனிடம் கேட்டீங்களா எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராதே" என்று வக்கீல் சந்தேகத்துடன் கேட்டார்.

"நேற்று இரவு மகனிடம் பேசிட்டேன் அவனுக்கு இதில் பரிபூரண சம்மதம்" என்று மகிழ்வுடன் கூறினார் ரமா.

"சார் அவசரப்பட்டு ரிஜிஸ்டர் பண்ண வேண்டாம்.ஒரு மாதம் கழித்து ஃபோன் பண்றேன் அப்ப ரிஜிஸ்டர் பண்ணுங்க" என்று வேண்டுகோள் வைத்தார் ரமா. மருத்துவமனை நடைமுறை எல்லாம் முடித்துவிட்டு மாலை நேரத்தில் கிராமத்திற்கு கிளம்பினார்கள். இருட்டிய பிறகு ஊருக்குள் வர வேண்டும். அப்பதான் யார் கண்ணிலும் படாமல் வரலாமென்று தங்கத்தின் உத்தரவு. அதனால் மாலை நேரத்தில் கிளம்பினான் அசோக். காரின் முன் இருக்கையில் ரமா வசதியாக அமர்ந்து கொண்டார். பின்னிருக்கையில் மல்லிகாவின் தலையை சங்கவி மடிமீது வைத்துக் கொள்ள படுத்துக் கொண்டு வந்தாள் மல்லிகா. அசோக் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தான். சென்னையை விட்டு கார் வெளியே வந்தது. ஆளரவமற்ற அமைதியான சூழலில் தூரமாக தெரியும் கானல் நீரில் குளித்து எழுந்த சக்கரங்களைத் தார் சாலைகள் தலைதுவட்டிக் கொண்டிருந்தன. வானின் ஏதோ ஒரு மூலையில் நிலவினை பார்த்த சூரியன் வெட்கத்தில் மஞ்சளை பூசிக் கொண்டு ஓடி ஒளிந்தது. அந்த மாலைப்பொழுது ரமாவிற்கு ரம்மியமாக இருந்தது.

 

ஜன்னல் வழியாக வானத்தை பார்த்தார் ரமா. வானத்தில் கருமேகங்களைப் பார்த்ததும் கவிஞராக இருந்தால் பெண்கள் கூந்தலுக்கு உவமை சொல்லியிருப்பார்கள். ரமாவுக்கு படிக்க விரித்த புத்தகங்கள் காற்றில் அசைந்து ஆடுவது போல இருந்தது. அடுக்கிய புத்தகங்கள் கலைந்து சிதறியது போல ரமாவிற்கு காட்சி அளித்தது. ஒன்றையொன்று தூரத்தில் துரத்திய மேகங்கள் சிறிது சிறிதாக கலைந்து மறைந்தது.  மனிதனும் அப்படித்தான் துரத்தும் எண்ணங்களுடனும் மறையும் கனவுகளுடனும் காலத்தைக் கடக்கிறான் என நினைத்துக்கொண்டார் ரமா.    

 

மனிதனின் பலமும் பலவீனமும் நம்பிக்கைதான். பத்து நாட்கள் மட்டுமே பார்த்து பழகிய சங்கவியை நம்பி ரமா அவளுடன் அவள் வீட்டிற்கு செல்வது அவரின் அன்பின் பலமா? அறிவின் பலமா? என்பது ரமா மட்டுமே அறிந்த உண்மை. ரமா போட்டுள்ள திட்டங்கள் நிச்சயம் செயலுக்கு வரும் என்பதை ரமாவின் மனம் நம்பியது.

 

இரண்டு மணி நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். மல்லிகாவை மெதுவாக காரில் இருந்து இறங்க சொன்னார்கள். தங்கம் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்தாள். அனைவரும் மல்லிகாவை நலம் விசாரித்தனர்.

 

மணி மல்லிகாவின் அருகில் வந்து கைகளை பற்றிக்கொண்டான். "எனக்கு ஒன்றும் இல்லை மாமா. நான் நல்லா இருக்கேன்" என்று மணிக்கு தைரியம் சொன்னாள் மல்லிகா. தனம்மா பாட்டி கிட்ட வந்து மல்லிகாவின் கன்னத்தில் தடவி நெட்டி முறித்தாள்.

"வேலங்காட்டில் விறகு வெட்டி, கலாக்காட்டில் காய்பறிச்சு, பனங்காட்டில் புள்ளை பெத்தாளாம் பொன்னாத்தா, பஞ்சு மெத்தையில் படுத்து பூமி அதிராமல் பதுவுசா நடந்து புள்ள பெத்தாளாம் கண்ணாத்தா என்கிற கதையா இவ என்னடான்னா நடக்கக் கூட கூடாதாமே" என்று அங்கலாய்த்தார் தனம்மா பாட்டி. 

"பாட்டி கொஞ்சம் வாயை மூடு" என்று கத்தினான் மணி. இவ்வளவு கலவரத்திலும் அங்கே ஒரு ஜீவன் நிற்பதை யாரும் கவனிக்கவில்லை. புவனா தான் பார்த்துவிட்டு "யாருங்க நீங்க" என்று கேட்டாள். 

 

அசோக் முந்திக்கொண்டு பதற்றமாக "என் ஃப்ரண்டு கணேஷோட  அம்மா" என்றான். "கணேசன்னு உனக்கு ஃபிரண்டே இல்லையேடா" என்று தங்கம் சந்தேகத்தை எழுப்பினாள். "இந்த ஊரில் இல்லை நான் பி.யு.சி ஹாஸ்டலில் தங்கிப் படிச்சேனே அப்ப இருந்த நண்பன் மா" என்று யோசித்து வைத்திருந்த பொய்யைத் தெளிவாக சொன்னான். அசோக் பேச பேச ரமா என்ன நடக்குதுன்னு புரியாமல் விழித்துக் கொண்டு இருந்தார். "சரிடா இந்த நேரத்தில் நம்ம வீட்டுக்கு ஏண்டா வந்திருக்காங்க" என்று தங்கம் சற்றே பெரிதான குரலில் கேட்டார். 

"அம்மா நம்ம கூட சும்மா ஒரு வாரம் இங்க தங்கட்டும்" என்று கெஞ்சும் குரலில் கேட்டான்.

"அசோக் ஏன்டா அவங்க  இங்க தங்கணும் அவங்க வீட்டில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டாள் தங்கம். 

"அதெல்லாம் இல்லை மா அவங்க அமைதியான கிராமத்தில் தங்கனும்னு ஆசை பட்டாங்க அதான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கேன்னு" முழம் முழமாக அளந்தான் அசோக்.

"அப்ப சரி தங்கட்டும்" என்று சொன்னாள் தங்கம்.

"வரவர இந்த வீடு சத்திரமாக மாறிடுச்சு" என்று புலம்பினான் மணி.

"ஆமாம்..  மாமா" என்று ஒத்து ஊதினாள் புவனா. வெளியே சென்றிருந்த செல்வம் உள்ளே நுழைந்து மருமகள் மல்லிகாவை நலம் விசாரித்தார். அசோக் ரமா அம்மாவை பற்றி செல்வத்திடம் சொன்னான்.

"ஓ ..தாராளமாக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இங்க இருக்கட்டும். வீடு தேடி வந்தவர்களை கிராமத்து மக்கள் எப்பவும்  உபசரிப்பார்கள்" என்று கனிவாக பேசினார் செல்வம்.  

 

உங்க எல்லோருடைய அன்புக்கு நன்றிங்க என் பெயர் ரமா என் கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வீரமரணமடைந்தார். மகனும் மருமகளும் பேரனும் ராணுவத்தில் தான் இருக்காங்க என்று ரமா பேசவும் அனைவரும்  ஆச்சரியமாக ரமாவையே பார்த்தனர். ஓரக்கண்ணால அசோக்கையும் பார்த்தனர்."போச்சுடா ஏற்கனவே நாம நேர்ந்து விட்ட பலி ஆடுமாதிரி தான் இருக்கோம்.இப்ப இவங்களுக்கு இருக்கும் கோபத்திற்கு நம்மளை கெடா வெட்டி விருந்து வச்சிடுவாங்க போலிருக்கேன்னு" நினைத்தான் அசோக்.

"நான் மட்டும்தான் சென்னையில் இருக்கேன். மல்லிகாவை சேர்த்து இருந்த மருத்துவமனையில் தான் நானும் கேன்சர் நோய்க்காக தங்கியிருந்தேன்.  அப்பதான் சங்கவியைப் பார்த்தேன். அம்மா... அம்மா என்று  என் மேல ரொம்ப அன்பா இருந்தா. அவளும் அசோக்கும் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்க கொஞ்ச நாளாவது குடும்பம் என்ற உறவுகளுடன் இருக்க ஆசையா இருந்தது. அதான் வந்தேன் உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் நான் சென்னைக்கே போயிடறேன்னு" சொன்னதும், ரமாவின் பைகளை எடுத்துச் சென்று உள்ளே வைத்தான் மணி. "அத்தை என்னை மன்னிச்சிடுங்க நான் திட்டுவாங்க கூடாதுன்னு மாமா பொய் சொல்லிட்டார்" என்று மன்னிப்பு  கேட்டாள் சங்கவி. "ரமா அம்மா ரொம்ப அன்பானவங்க, அவங்க கொஞ்ச நாள் நம்ம கூடவே இருக்கட்டுமே அத்தை" என்று கேட்டாள் மல்லிகா.

"பாவம் குழந்தைங்க என் மேல இருக்கும் அன்பால எனக்கு உதவி செய்வதற்காக பொய் சொல்லிட்டாங்க நானும் அவங்களோட சேர்ந்து பொய் சொன்னால் மரியாதை இருக்காது". என்று கண்ணியமாக பேசினார் ரமா. இரவு உணவு முடித்துவிட்டு அனைவரும் கூடத்தில் படுத்தனர். தனம்மா பாட்டிதான் ரமாவிடம்  கேள்வியாக கேட்டு ராக்கெட் விட்டுக்கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து வயல் வேலைக்கு செல்வதற்காக அசோக் கிளம்பிக் கொண்டிருந்தான். உடன் எழுந்த ரமாவும் அசோக் உடன் சிறிது தூரம் வருவதாக அடம்பிடித்தார்.

 

எனவே அசோக் அழைத்துச்சென்றான் மெதுவாக தான் நடந்து சென்றாள்  நாம் போகும்போது தனிமையில் அசோக்கிடம் சில விஷயங்களை பேசிக் கொண்டே சென்றார்.  அதை கேட்டதும் அசோக் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 


 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)