Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #29

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

maayapura part 29

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா அம்மா தன் மகன் செய்யும் வேலையைச் சொன்னதும் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த சங்கவிக்கு அதிர்ச்சியில் புரை ஏறியது. சங்கவி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு "என்னம்மா சொல்றீங்க?" என்றாள் அதிர்ச்சியான குரலில்.

"ஆமாம் மா  என் மகன் கிரிதரன் ராணுவத்தில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறான். மருமகளும் ராணுவத்தில் டாக்டர். ஒரு பேரன் இருக்கிறான். அவர்கள் எல்லாரும் டேராடூனில் இருக்காங்க" என்று ரமா தன் குடும்பத்தை விளக்கினார். "அம்மா நீங்க தனியாகவா இருக்கீங்க"? என்றாள் சங்கவி கனிவான குரலில்.

"தனிமை வாழ்க்கை பழகிடுச்சு சங்கவி. இறுதிகாலம் நோயுடன் போராடும் போது தான் துணைக்கு யாரும் இல்லையே என்ற அனாதை உணர்வு ஏற்படுகிறது. என் கணவரும் ராணுவ வீரராக இருந்து 1962ல் நடந்த சீனப் போரில் உயிரை விட்டார் என்றார் ரமா கலங்கிய கண்களுடன். சங்கவிக்கு ரமா அம்மா தெய்வமாக தெரிந்தார்கள். "நாட்டிற்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்து இருக்காங்க. என்னால் இரண்டு நாள் அசோக் இல்லாமல் இருக்க முடியவில்லை. துடித்து விட்டேன். இனி சில நாட்கள் மருத்துவமனையில் எப்படி தங்கப் போகிறேன் என்று நினைக்கும்போதே எனக்கு அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. ரமா அம்மா தனியாளாக குடும்பத்தை பார்த்துக்கொண்டு மகனையும் படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து உள்ளார்கள்.

 

ரமா அம்மா தன்னுடைய வாழ்க்கையையே நாட்டுக்காக அர்ப்பணித்தார்கள்  என்று நினைக்கும் போது  அவர்களின் மீதான மதிப்பும் மரியாதையும் பெருக்களில் சென்றது. என்ன பேசுவது என்று தெரியாமல் சங்கவி வாயடைத்து அமைதியானாள்.

" சங்கவி என்னாச்சு ஏன் அமைதியா இருக்கீங்க? என்று ரமா அம்மா கேட்டார். எதற்கெடுத்தாலும் கேலியும் கிண்டலும் பேசும் மல்லிகாவே ரமா சொன்னதைக் கேட்டதும் பெட்டி பாம்பு மாதிரி சுருண்டு படுத்து இருந்தாள்.

 

அந்த இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனையில் மூழ்கி இருந்தார்கள். வாய் மட்டும் சொற்கள் மறந்து இருந்ததே தவிர மனம் அதிவேகமாக எண்ணங்களுடன் பேசிக் கொண்டுதான் இருந்தது. நாம் வாழ்க்கையில் திடீரென்று யாரையாவது சந்திப்போம் காரணம்  அறியாமல் அவர்களைப் பிடித்துப் போகும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலேயே அவர்கள்மீது அன்பு வரும் சந்தர்ப்பவசத்தால். நாம் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆரம்பித்தால் கெட்டவர்களாக இருந்தால் சொல்லாமல் கொள்ளாமல் அவர்களை விட்டு விலகி விடுவோம். பழகியவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தால் அவர்களை நெருங்க விடாமல் தாழ்வு மனப்பான்மை பின்னுக்குத் தள்ளும். அவர்களிடம் பழகிய அன்பானது அவர்களிடம் நம்மை முன்னுக்குத் தள்ளும். இப்படியே மனம் சீசா ஆடிக்கொண்டிருக்கும். மனித உறவுகளில் தான் எத்தனை பேதங்கள். மனங்களைப் பார்க்க மறந்தோம். அந்தஸ்தில் ஊஞ்சல் கட்டி ஆகாயத்தில் ஆடுகிறோம். எல்லோருக்கும் நகைச்சுவை, கோபம், சோகம் என்ற உணர்வுகள் உண்டு. இவ்வளவு ஏன்  நம்மிடம் பழகும் விலங்குகளைப் பாருங்கள் நாம் அடித்தாலோ திட்டினாலோ அதன் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கும். எப்போது அன்பைப் பெற்று அன்பை கொடுக்கிறோமோ அப்போது உலகம் வசப்படும் என்று நினைத்துக்கொண்டாள் சங்கவி.

 

வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மனிதனுக்கும் அவர்கள் உயிர்ப்புடன் இருக்க அன்பு தேவைப்படுகிறது. எல்லா உறவுகளும் இருந்தும் நாம அனாதை பிணமாக போகப்போகிறோம் என்ற உணர்வு  ரமாவின் மனதில் கரையானாய் அரித்துக் கொண்டிருந்தது. நீண்ட மௌனத்திற்கு பிறகு ரமாதான் "நான் என் அறைக்குச் சென்று படுக்கிறேன்" என்று மெதுவாக நடந்து அவருடைய அறைக்கு வந்தார்.

 

மருத்துவமனையில் மல்லிகாவின் உடல் நலம் பெற  ஆரம்பித்தது. சங்கவியும் ரமா அம்மாவிடம் சொந்த மகள் மகளைப் போல பழக ஆரம்பித்தாள். அம்மாவின் உடல் நாளுக்கு நாள் நலிய ஆரம்பித்தது. இதைக் கவனித்த சங்கவி ரமா அம்மாவிற்கு தெரியாமல் அவர்களுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் அவர்களின் உடல்நிலை பற்றி கேட்பதற்கு அவரை தனியாக பார்த்தாள். 

"வணக்கம் டாக்டர்"

" சொல்லுமா என்ன விஷயமா என்னை பார்க்கணும்னு" கேட்டார் டாக்டர்.

" ரமா அம்மா கேன்சர் நோயாளி இப்ப எப்படி இருக்காங்க"என்று அக்கறையுடன் கேட்டாள் சங்கவி.

" அவங்க  இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு இருக்காங்க" என்று வருத்தமாக சொன்னார்  டாக்டர். 

"டாக்டர் ஆண்கள்தான் குடிக்கிறாங்க சிகரெட் பிடிக்கிறார்கள். பாக்கு, புகையிலை போடுறாங்க. அதனால் கேன்சர் வருது. பெண்களுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையே அவர்களுக்கும் ஏன் கேன்சர் வருகிறது என்று சங்கவி ஆதங்கமாக கேட்டாள். "பெண்கள் மத்தவங்களை கவனித்து,கவனித்து தங்களை கவனிக்கறது இல்லைம்மா, மாதவிடாய் காலங்களில் வரும் பிரச்சனைகளை உடனடியாக மருத்துவரிடம் காட்டுவதும் இல்லை. வேலை வேலைனு சரியா சாப்பிடுவதும் இல்லை. இதெல்லாம் பெண்களுக்கு கேன்சர் வருவதற்கு காரணம். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இவர்களை சேர்த்து இருந்தாங்கன்னா இன்னும் நவீன கருவிகள் அங்கு இருக்கு. வீட்டிற்கு அருகில் இருக்குன்னு இங்கே சேர்த்திருக்காங்க என்று விளக்கமாக சொன்னார் டாக்டர்.

 

டாக்டரிடம் விடைபெற்ற சங்கவி ஏதோ யோசனையுடன் அங்கிருந்து வந்தாள். மல்லிகாவிடம் "அக்கா ரமா அம்மா பாவமா இருக்காங்க. அவங்களுக்கு யாருமே இல்லை. நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா? என்று தயங்கிக் கொண்டே கேட்டாள். மல்லிகாவைப் பொறுத்தவரை குழந்தை நல்லபடியாக பிறக்கும் வரை சங்கவியின் உதவி தேவை. அதனால் சங்கவி என்ன சொன்னாலும் அதுக்கு பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டினாள். "சரி சங்கவி நீ சொன்னா சரியா இருக்கும்" என்றாள்.

 

எப்படி ரமா அம்மாவை சம்மதிக்க வைப்பது என்ற யோசனையுடன் அம்மாவின் அறைக்குச் சென்றாள் சங்கவி. அங்கே ரமா சுருண்டு படுத்துக் கொண்டிருந்தார்.

" அம்மா இத்தனை நாள் எங்க கூட இருந்தீங்க. இன்னும்  இரண்டு நாளில் மல்லிகாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போக போறோம்" என்று கவலையுடன் சொன்னாள். "எல்லாரும் ஒருநாள் பிரிய தானே போறோம்" என்று ஆறுதல் சொன்னார்.

"  அம்மா எனக்கு ஒரு ஆசை ஒரு வாரம் வந்து எங்க கிராமத்துல எங்களோட இருங்கம்மா" என்று அழைத்தாள்.

"சங்கவி என் நிலைமையை பார்த்தும் உன்னால் எப்படி என்னை கூப்பிட முடியுது?" என்று கவலையுடன் கேட்டார் ரமா.

" அம்மா நீங்க நல்லாதான் இருக்கீங்க. டாக்டரிடம்  கேட்டேன்.  இப்போதைக்கு கீமோதெரபி கூட இல்லையாம் ஒரு மாதம் கழித்துதான் தருவாங்களாம் .அதனால் எங்களோட வந்து இருங்க என்று வற்புறுத்தினாள்" சங்கவி. 

"சங்கவி நீ வழிப்போக்கன் ஏன் என் பாரத்தை சுமக்கற" என்று அன்பாக சொன்னாள்  ரமா.

"அம்மா இந்த உலகில் எல்லாரும் வழிப்போக்கர்கள் தான்.  வந்தோம் என்றாவது ஒருநாள் போகப்போறோம் இருக்கிற காலம் வரை எல்லாரும் அன்பாக இருப்போம். எங்க கிராமத்துக்கு வாங்கம்மா" என்று வற்புறுத்தி அழைத்தாள் சங்கவி.

 

ரமாவும்  மனுஷி தானே அவருக்கும் ஆசைகள் இருக்கத்தானே  செய்யும். சங்கவியின் அன்பில் கொஞ்சநாள் கிராமத்தில் இருக்கலாமா? என யோசித்தார். ரமா தனக்கு சாப்பாடு கொண்டுவரும் ஆளிடம்  ஒரு  கடிதம் கொடுத்து யாரையோ வரச்சொன்னார்.

 

(சிறகுகள் படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)