Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #27

Published on 23/05/2022 | Edited on 27/05/2022

 

maayapura part 27

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

சங்கவி ரிக்ஷாகாரனிடம் வார்த்தைகளால் போராடிக் கொண்டிருக்கும் போது ஒரு கை சங்கவியின் தோளின் மீது விழுந்தது. சங்கவி மேலும் அரண்டாள். ஏனோ உச்சந்தலையில் உருவான வியர்வையின்  கிளை ஆறுகள் உடலெங்கும் பாய்ந்தது. மிகவும் பயந்து கொண்டே தோளின் மீது கைவைத்தது யார் என்று பார்த்தாள். பயத்தில் உடல் நடுங்கி  கதகளி ஆடியது. சங்கவியின் அம்மா வயதை ஒத்த ஒரு பெண்மணி நெற்றியில் 50 காசு அளவிற்கு குங்கும பொட்டு வைத்திருந்தார். வாயெல்லாம் வெற்றிலை பாக்குடன் உறவு கொண்டு சிவப்பு வண்ணம் பூசி இருந்தது. தலையை சீவி கொண்டை போட்டு அதில் மல்லிகைச் சரத்தை மதில் எழுப்பி வைத்திருந்தார். கையில் பிரம்பால் பெரிய கூடையில் பூ வைத்திருந்தார். பூ வியாபாரம் செய்பவர் என்பது தெரிந்தது. பார்த்த மாத்திரத்தில் இவர் சென்னை என்பதை புரிந்து கொள்ளும் சக்தி சங்கவிக்கு இல்லை காரணம் அவள் கிராமத்தை விட்டு எல்லை தாண்டியது இல்லை.

"த இன்னா இந்த பொண்ணுகிட்ட டகுளு வுட்டுகினு கீற.  வேணாம், புள்ள பயந்துகினு கீது   பாரு"என்று அகராதியில் இல்லாத வார்த்தை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.

"த.. முனியம்மா கம்முனு கட. சும்மா பேச்சுக்  கொடுத்தேன் புள்ள  டபாய்க்குது" என்று அவனும் பதிலுக்கு அதே மொழியில் பேசினான்.

 

இவர்கள் இருவர் பேசுவது சங்கவிக்கு புரியவில்லை என்றாலும் சூழ்நிலையின் விபரீதம் புரிந்தது.  நாம ஏதோ தப்பான இடத்தில் மாட்டிக்கொண்டோம் என்று புரிய ஆரம்பித்தது. மெல்ல அந்த இடத்தில் இருந்து நழுவ ஆரம்பித்தாள் சங்கவி.

"த பொண்ணு உனக்கு என்ன வேணும் என்கிட்ட விலாவாரியா சொல்லு" ன்னு முனியம்மா சங்கவி பக்கம் திரும்பினாள். "அம்மா இங்கே எங்கேயாவது  வீட்டில் இட்லி சுட்டு விக்கறாங்களான்னு  கேட்டேன். என்று தயங்கிக்கொண்டே சொன்னாள்.

"பயப்படாதே கண்ணு நான் இந்த ஏரியா தான். பூ வியாபாரம் செய்கிறேன். என் கூட வா உன்னை நான் நாஷ்டா கடைக்கு கூட்டிட்டு போறேன்" என்று சொன்னாள் முனியம்மா. சங்கவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்போதைக்கு அவளுடைய தேவையெல்லாம் மல்லிகாவிற்கு எப்படியாவது இட்லி வாங்கிட்டுப் போகனும். அதற்காக என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று முனியம்மாள் பின்னால் செல்ல ஆரம்பித்தாள்.

 

காலம் மாதிரி மனிதனை வளப்படுத்துவதும் பலப்படுத்துவதும் எதுவுமில்லை. மனிதனை சித்தனாக்குவதும், சித்தனை பித்தனாக்குவதும் காலம்தான். நடிப்பவர்கள் நாடாளுவதும், நாடாள்பவர்கள் பதவிக்காக நடிப்பதும் மக்கள் பார்க்கும் காலத்தின் கோலங்கள். நாடுகளின் எல்லைகள் விரிந்து சுருங்குவது காலத்தின் மறுமலர்ச்சி. மாதம் மும்மாரி பெய்வதும், மழையே இல்லாமல் பொய்ப்பதும் காலத்தின் மறுசுழற்சி. மனிதன் கொடுப்பதெல்லாம் பல மடங்காகத் திருப்பிக் கொடுக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் வட்டியுடன் திருப்பிக் கொடுத்து துல்லியமாகக் கணக்கிடுவது காலத்தின் கை தேர்ந்த கலை. எங்கோ பிறந்து வளர்ந்து சென்னையை  மேப்பில் மட்டுமே பார்த்த சங்கவி இன்று காலால் நடந்து சுற்றி வருகிறார் என்றால் அது காலத்தின் கட்டாயம் அல்லவா? வேண்டாம் என்று ஒதுக்கிய சங்கவி இன்று மல்லிகாவின் உயிர் காக்கும் தெய்வமாக விளங்குகிறாள் என்றால் அது காலத்தின் திருவிளையாடல்.

 

சந்து பொந்து என்று சுற்றி சுற்றி நடந்த முனியம்மா கடைசியில் ஒரு குடிசை வீட்டின் முன்னாடி நின்றாள். அந்த வீட்டின் வாசலில் அடுப்பை மூட்டி இட்லி அவிக்கற பாத்திரம் வைத்து இட்லி சுட்டுக் கொண்டிருந்தாள் முனியம்மா வயதுடைய பெண். ரிக்ஷா காரன் மாதிரி இருந்த சில ஆண்கள் பாதாம் இலையில் இட்லி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். டேபிள் சேர் எல்லாம் இல்லை. வாசலில் அங்கே அங்கே பெரிய பெரிய கல்லு  திண்டை மாதிரி இருக்கு. அதில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

"த.. கன்னிமா இந்த பொண்ணு ஊருக்கு புதுசு. இவளுக்கு இட்லி கட்டி கொடு" என்று கன்னிமாவை அதிகாரம் பண்ணினாள்.

" ஆமாம் கண்ணு நீ யாரு? ஏன் இந்த ஊருக்கு வந்த?" என்று அப்போதுதான் சங்கவியைப் பார்ப்பது போல கேள்வி கேட்டாள் முனியம்மா.

" அக்கா நான் மதுராந்தகம் தாண்டி மாம்பாக்கம் கிராமம். என் அக்காவை உடம்பு சரியில்லைன்னு இங்க பக்கத்துல இருக்கிற ஹாஸ்பிடலில் சேர்த்து இருக்கோம் ஹோட்டல் இட்லி எல்லாம் உடம்பு சரியில்லாதவங்களுக்கு சரிவராது. அதான் வீட்டு இட்லியை  தேடி வந்தேன்" என்று தன் ஏழ்மையை மறைத்தாள் சங்கவி.

" ஏ ..பொண்ணு நீ சாம்பலை சாப்டு  வெளியில வெண்ணையை பூசிக்கர ரகமா? ஏழ்மையை மறைக்க என்ன தளுக்கா பேசுறே. உன் தன்மானம் புடிச்சிருக்கும்மா" என்று வெளிப்படையாக பேசினாள் முனியம்மா.

 

அதற்குள் சங்கவி கேட்ட 8 இட்லியை இலையில் கட்டி அதில் கெட்டி சட்னியும் வைத்து கட்டினாள் கன்னிம்மா. ஒரு இட்லி  25 பைசா என்று இரண்டு ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொண்டு, "அக்கா எனக்கு சரியா வழி தெரியலை கொஞ்சம் மெயின்ரோடில் விடுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் "என்று சொல்லி சங்கவி முனியம்மாவை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றாள். வேகவேகமாக ஆஸ்பிட்டல் வந்தாள் சங்கவி.

"பசி அதிகமாக இருக்கிறது இவ்வளவு நேரம் என்ன  செய்த  மாவை அரைத்து இட்லி சுட்டு எடுத்துட்டு வர்றியா" என்று சத்தம் போட்டாள் மல்லிகா. "என்னதான் நாம அன்பா இருந்தாலும் நாம அன்பு காட்டறவங்க மனசு குரங்கு மாதிரி சில நேரங்களில் மரத்திலிருந்து தொப் தொப்பென்று குதிக்க தான் செய்கிறது" என்று மனதில் நினைத்து கொண்டாள் சங்கவி. பாவம் மல்லிகாவிற்கு அதிக பசி போல ஆறு இட்லியை எடுத்து கொண்டு இரண்டு இட்லி தான் மீதம் வைத்தாள். அதை சங்கவி சாப்பிடும்போது பார்த்த மல்லிகா "சங்கவி நீ சாப்பிடலையா நீ சாப்பிட்டு எனக்கு வாங்கிட்டு வந்திருக்கன்னு நினைச்சு சாப்பிட்டேன் தப்பா நினைச்சுக்காதே" என்று கனிவாக சொன்னாள். ஒருவேளை உணவுக்கே இப்படி போராட்டம் என்று நினைத்த சங்கவிக்கு மதிய உணவினை நினைத்தால் மலைப்பாக இருந்தது. மல்லிகா மாத்திரை எல்லாம் போட்டுக்கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். மருத்துவமனையில் நோயாளியாக இருப்பவர்களைவிட  அவர்களுக்கு உதவிக்கு இருப்பவர்கள் தான் மிகவும் கஷ்டப்படுவார்கள். எந்த வேலையும் இல்லாமல் இருப்பது ஒரு மணி நேரம் வேண்டுமானால் மகிழ்வாக இருக்கும் அதற்கு பிறகு கடிகாரம் முள்ளை ஸ்லோ சைக்கிள் பந்தயம் மாதிரி மெதுவாக நகர்த்தும். சங்கவி மெதுவாக அந்த மருத்துவமனையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு அறையில் இருந்த கட்டிலிலிருந்து எழுந்திருக்க முயற்சி செய்து முடியாமல் தடுமாறி திணறிக்கொண்டிருந்தார் வயதான அம்மா. அவர்களுக்கு 70 வயதிருக்கும்.

 

இதை அந்த அறையின் வெளியில் இருந்து பார்த்த சங்கவிக்கு மனசு பதைத்தது. அந்த அறையின் உள்ளே செல்லலாமா? என்று தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். அந்த அம்மா மிகவும் சிரமப்படுவதை பார்த்ததும் சங்கவிக்கு பொறுக்கமுடியவில்லை. வேகமாக ஓடிப்போய் அவர்களை கட்டிலில் இருந்து கீழே இறக்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தாள்.அந்த அம்மாவிற்கு சங்கவியை மிகவும் பிடித்துவிட்டது. சங்கவியைப் பற்றி விவரங்கள் கேட்டு தெரிந்து கொண்டார். சங்கவி அவர்களிடம் பேசிக் கொண்டே அந்த அறையை கண்களால் அளவெடுத்தாள். நோயாளிகளின் பொருள்கள் வைக்கும் டேபிளில் பெரியாரும் பெண் விடுதலையும், இங்கர்சாலின் பொருளாதாரக் கொள்கை,மார்க்சின் தத்துவங்கள், இத்தனை புத்தகங்களுடன் பகவத்கீதையும் இருந்தது. இதையெல்லாம் பார்த்ததும் சங்கவிக்கு பிரமிப்பாக இருந்தது.

"அம்மா இந்தப் புத்தகங்கள் எல்லாம் நீங்கள் படிக்கிற புத்தகமா? என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

"ஆமாம் மா இந்த புத்தகங்கள் இந்த ரமாவின் ரணங்களுக்கு மருந்தாகின்றன" என்று புன்னகையுடன் சொன்னாள். 

"என்னம்மா உடம்புக்கு" என்று அக்கறையுடன் விசாரித்தாள் சங்கவி. 

"கேன்சர் ன்னு  சொல்றாங்க" என்று  தலைவலி வந்தது போல சொன்னார். இதை கேட்டதும் சங்கவி அதிர்ச்சியானாள். என்னம்மா இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க என்று பதறினாள்.

"சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்கு சமம்"என்று பெரியார் சொல்லியிருக்கார் என்று அமைதியாக சொன்னார் ரமா.

 

இதை கேட்டதும் சங்கவியின் கண்களில் நீர் திரையிட்டது. இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே சங்கவி மல்லிகாவை சென்று பார்த்து வந்தாள் மல்லிகா நன்றாக தூங்கிகொண்டிருந்தாள். மதிய உணவு நேரம் நெருங்கியதும், அம்மா நான் மல்லிகாவிற்கு சாப்பாடு வாங்கி கொடுத்து சாப்பிட வைத்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு கிளம்ப கிளம்பினாள்

" எங்கே கிளம்பி போற  சாப்பாடு வீட்டிலிருந்து வரும் சேர்ந்து சாப்பிடலாம்" என்று  அழைத்தார் ரமா. காலை உணவை தேடி,தேடி அலைந்து நொந்து  நூலானாள். மதிய உணவு தேடாமல் இருக்கும் இடத்தை தேடி வருகிறது. எத்தனையோ பேர் அந்த அறையை கடந்து சென்றனர். பத்தோடு பதினொன்றாக  சங்கவியும் அப்படி இருந்திருக்கலாம். சங்கவியின் இரக்க குணம் ரமாவின் அன்பிற்கு பாத்திரமானது. அந்த அட்சய பாத்திரத்தின்   மூலமாக சங்கவியின் வாழ்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படப் போகிறது என்பது சங்கவிக்கு தெரியாது.

 

(சிறகுகள் படபடக்கும்)
 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)