Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #24

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

maayapura part 24

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

கடற்கரை மணல் பரப்பு எண்ணிலடங்கா மணல் துகள்களைக் கொண்டுள்ளது. மணல் துகள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவங்களில் மனிதர்களின் எண்ணங்களைப்  போன்று காணப்படுகின்றன. கடல் அலைகளில் கால் நனைக்கும் போது பாதத்தில் இருக்கும் மண்ணை அடித்துச் செல்லும். பாதத்திற்கு  பிடிமானம் இல்லாமல்  நாம் விழுந்து விடுவது போல நிலை தடுமாறும். அடுத்த அலை வருவதற்குள் பாதத்தை மீண்டும் அந்த மணலில் அழுத்தி வைப்போம். மனித வாழ்க்கையும் அப்படித்தான் ஒரு துன்பம் வரும்போது துவளாமல் அந்த இடத்தில் அமைதியாக வலிமையாக செயல்பட வேண்டும். மணல் பரப்பில் நடக்கும்போது கால்களில் மணல் துகள்கள் ஒட்டிக் கொள்ளும். ஈரம் காயக்காய கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த மணல் துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்துவிடும்.

 

மனித உறவுகளும் அப்படித்தான் ஏதோ ஒரு தேவை என்னும் ஈரம் இருந்தால் தான் நம்மிடம் ஒட்டிக்கொள்வார்கள். அந்த தேவை முடிந்துவிட்டதும் மணல் துகள்கள் கொட்டுவது போல இவர்களும் நம்மிடமிருந்து விலகி கொண்டே இருப்பார்கள். இது மனித இனத்தின் நிதர்சனமான உண்மை.

 

கடற்கரையில் உப்புக் காற்று தான் வீசும் அந்த உப்பானது நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நம் முகத்தில் நாம் மட்டுமே உணரக்கூடிய உப்பு என்ற அந்த பிசுபிசு உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாமே முகத்தை கழுவினால் தான் நம்மை விட்டுப் போகும். இப்படியும் சில அன்பானவர்கள் இருக்கிறார்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் உப்புக்காற்று மாதிரி நம்முடனே ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

 

தன் அண்ணி நாகம்மாவை,  தங்கம் உதவிக்குக்  கூப்பிட்டார். நாகம்மா புவனாவை அந்த வீட்டில் திருமணம் செய்து கொடுத்து இருந்தால் தங்கத்திற்கு உதவிக்கு வந்திருப்பார். தங்கத்தின் தேவை நாகம்மாவிற்கு இல்லை என்பதால் மணல் துகள் மாதிரி உதிர்ந்து விட்டார். 

 

அந்த அவசர சிகிச்சை  பிரிவு அறைக்கு  எதிரில் நால்வரும் மருத்துவர் வந்து சொல்லப்போகும் பதிலுக்காக உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்திற்கு வயல்வெளியில் வேலை செய்த அழுக்கான வேட்டியுடன் பெருமாள் பதற்றத்துடன் வந்தார். கூடவே அலமேலுவும் முந்தானை ஓரம் கிழிந்த கண்டாங்கி சேலை உடனும் கோடாலி முடிச்சு போட்ட கொண்டையுடனும் வந்தார். முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகள் அவர்களின் உள்ளத்தின் படபடப்பை சொட்டு சொட்டாக வெளியேற்றியது. முந்தானையால் வியர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டே தங்கத்தின் அருகே வந்தார் அலமேலு.

 

இவர்களைப் பார்த்ததும் தங்கமும்  மணியும் ஆச்சரியப்பட்டார்கள். இவர்கள் எப்படி இங்கே வந்தனர் என்று நினைத்தனர். பெருமாளு அலமேலு அன்பு உப்புக்காற்று போன்றது. அந்த அன்பை வெகுவிரைவில் தங்கம் உணரத்தான் போகிறார். 

"அண்ணி.. என்ன ஆச்சு கேள்விப்பட்டதும் என் ஈரக் குலையே நடுங்கிடுச்சி மல்லிகா எப்படி இருக்கா? கருவுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே"? என்று தங்கத்தை கேள்வி கேட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.

"டாக்டர் வந்தா தான் தெரியும்" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு" நீங்க எப்படி வந்தீங்க யார் செய்தி சொன்னது" என்று குழப்பமாக கேட்டார்   தங்கம். 

"காசி செட்டியார் தான் நம்ம ஊருக்கு வரவங்ககிட்ட செய்தி சொல்லி அனுப்பினார்" என்று பெருமாள் அமைதியாக சொன்னார்.

"அடியே.. கூறு கெட்டவளே புள்ளத்தாச்சி இருக்கிற வீட்டில பார்த்து கவனமாக வேலை செய்ய வேண்டாமா? இப்ப பாரு பழி  உன் மேல விழுது". என்று மகளையே வெள்ளந்தியாக திட்டினாள் அலமேலு.

"அம்மா.. நான் கவனமா தான் இருந்தேன் எப்படியோ அக்கா விழுந்துட்டாங்க" என்று அலுப்புடன் சொன்னாள் சங்கவி.  இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்துகொண்டு  ஒரு பெண் டாக்டர் வெளியே வந்தார். டாக்டரைப்  பார்த்ததும் மண்ணெண்ணெய்  வாங்குவதற்கு நிற்கும் கூட்டம் போல  அனைவரும் அவரை சுற்றி  நின்றுகொண்டே 

"மல்லிகாவுக்கு எப்படி இருக்குங்க டாக்டர்"? என்று ஒரே குரலில் கேட்டு குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டினார்கள். 

 

நான்  எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். அபார்ஷன் பண்ணாதான் பெரிய உயிரை காப்பாற்ற முடியும் என நினைக்கிறேன்" என்று டாக்டர் சொன்னதும், "நீங்களே இப்படி சொன்னா எப்படி டாக்டர்  எப்படியாவது கருவை காப்பாற்றிக் கொடுங்கள்" என்று கெஞ்சினான் மணி."நாங்களும் மனுஷங்கதானே எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம் முடியலைன்னும் போது என்ன செய்யறது" என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். சங்கவி  டாக்டர் பின்னாடியே ஓடி போய்  கரு கலையாமல் இருக்க என்ன பண்றதுன்னு சொல்லுங்க மேடம் உங்களைத்தான் நம்பி இருக்கோம்" என்று டாக்டரின் காலில் விழுந்தாள் சங்கவி" டாக்டருக்கு என்ன செய்யறதுன்னு புரியலை "முதலில் எழுந்திரு" என்று தவிப்புடன் கூறினார். "நீங்க வசதியானவர்களாக இருந்தால் ஒரு வழி இருக்கு சென்னையில் பெரிய டாக்டர் இருக்கிறார். அவருக்கு ஒரு லெட்டர் தரேன் அவரிடம் காட்டி பாருங்க. ஆனால் எந்த அளவுக்கு சரி வரும்னு தெரியல" என்று தயக்கமாக கூறினார்.

"டாக்டர் நீங்க எந்த டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகச் சொன்னாலும் அழைச்சிட்டு போறோம்"என்று கெஞ்சினாள் சங்கவி.

 

சங்கவி டாக்டர் காலில் விழுந்ததை பார்த்ததும் மணியும் தங்கமும் அதிர்ச்சி அடைந்தனர். நமக்காக சங்கவி எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று மணிக்கும் தங்கத்திற்கும் சங்கவி மீது லேசாக அன்பு  அரும்ப ஆரம்பித்தது. அது மலராக மலருமா, இல்லை கருகி விடுமா என்பது காலத்தின் கையில் உள்ளது. சங்கவி டாக்டரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் மீண்டும் அனைவரும் டாக்டர் அருகில் வந்தனர்.

" சென்னை எல்லாம் போய் மருத்துவம் பாக்குறதுன்னா நிறைய பணம் செலவாகுமே. உங்களால செலவு பண்ண முடியுமா? அந்த அளவு பணம் இருக்கா என்று டாக்டர் கேட்டதும் தங்கமும் மணியும் அமைதியாக இருந்தனர். அசோக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தான்.

"பணத்தை பற்றி பாக்காதீங்க டாக்டர் என் உயிரைக் கொடுத்தாவது நான் பணத்தை ரெடி பண்றேன்"என்று ஏதோ நேற்றுதான் வீட்டில் பணம் காய்ச்சி மரத்தை நட்டு வைத்தது  மாதிரி பேசினாள் சங்கவி.

"எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க நேரம் ஆக ஆக பெரிய உயிருக்கு ஆபத்தாக முடியும்" என்று பயமுறுத்தி விட்டு  டாக்டர் அங்கிருந்து சென்றார். "நம்மகிட்ட அவ்வளவு வசதி இல்ல பேசாம கருவை கலைத்துவிடலாம் என்று தங்கம் சொன்னதும் மணியின் முகம் வாடி விட்டது .

"அத்தை எப்படியாவது பட்டணத்துக்கு அழைச்சிட்டு போய் கருவை காப்பாற்றிவிடலாம்" என்று சங்கவி சொன்னதும், அலமேலு  சங்கவி கையைப்   பிடித்து தனியே அழைத்துச் சென்றாள். 

"விளங்காதவளே  உன் மாமியாரே தயங்கறாங்க  நீ என்னடான்னா உயிரைக் கொடுக்கறேன்னு வாயாலேயே வடை சுடுற உன் மேல பழி வரும்னு பயப்படாத, அந்த பொண்ணு தான் கவனமாக நடந்து வந்து இருக்கணும். 

"ஏழு ஜென்மமாய் ஒரே ரத்தத்தில் ஊறி ஒட்டிப்பிறந்த  இரட்டையும் ஒன்னோடு ஒன்னா மண்ணோடு மண்ணா வளர்ந்தாலும் பங்காளி சண்டையில பல்ல பேத்துகிட்டு நிப்பாங்க. நீ என்னடான்னா ஒரே வீட்டில் வாழ்க்கைப் பட்டத்துக்காக மல்லிகா குழந்தையை காப்பாற்ற இந்த பாடுபடற" என்று கோபப்பட்டார் அலமேலு.

"அம்மா ஒரே வீட்டில் வாழறத்துக்காக இல்ல அந்த குழந்தையை எத்தனை கனவுடன் மல்லிகா சுமந்து கொண்டிருக்கிறார். அந்த குழந்தை இல்லன்னா அவள் மனம் என்ன வேதனைப்படும் கருவுல மூன்று மாதம் சுமந்தாலும் 30  வருஷம் வளர்த்தாலும் அம்மாவுக்கு அது குழந்தை தானே அம்மா. எப்பவும் மனசுல அந்த வலி இருந்துகொண்டே இருக்கும் மா. இது எல்லாத்துக்கும் மேல என் மனசாட்சி என்னை கொல்லுமே முகம் தெரியாத அந்த குழந்தை  என்னைப்  பார்த்து " சித்தி என்னை ஏன் கொலை பண்ணீங்க அப்படின்னு கேட்கற சத்தம்  என்  மனசுகுள்ள  கேட்குமே அதுக்கு நான் என்ன பதில் சொல்வது?" என்று கண் கலங்கினாள் சங்கவி.

 

சங்கவியின் உணர்வுகளை அசோக் புரிந்து கொண்டான். "சரி சங்கவி அண்ணியை சென்னைக்கு அழைத்து போகலாம். காரில் போனால் அதிக செலவாகும். மருத்துவமனை ஆம்புலன்சில் அழைச்சிட்டு  போகலாம்" என கூறி அசோக் மருத்துவமனை ஊழியர்களிடம் பேச சென்று விட்டான்.

 

கோபப்பட்ட  அம்மாவை சமாதானப்படுத்தி உண்மையை புரிய வைத்தாள் சங்கவி. மணிக்கும் தங்கத்திற்கும் மனசும் உடம்பும் ரொம்ப சோர்ந்து போக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டனர். அசோக்கும் ஆம்புலன்ஸ் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தான். 

 

பணத்திற்கு என்ன செய்வது என அடுத்த பிரச்சனைக்கு சென்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த பெண்கள் தான்  வங்கியின் சேப்டி லாக்கர் போன்றவர்கள் அவசரத்திற்கு தேவைப்படும்போது அடகு வைப்பதற்கு அந்த நகைகள்தான் பயன்படும். "அம்மா இங்கேயே இருங்க இதோ வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு அசோக்கை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டல் தாண்டி செங்கல்பட்டு  நகருக்குள் வந்தார்கள்.  சங்கவி போட்டிருந்த தங்ககம்மலையும், கழுத்தில் போட்டிருந்த செயினையும் கழற்றி நகை கடையில் விற்றுவிட்டு ,கவரிங் வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

"சங்கவி என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டான் அசோக்.

"ஏன் மாமா திடீர்னு இந்த கேள்வி? என்று குழந்தையாக கேட்டாள் சங்கவி.

" என்னை உனக்கு ரொம்ப பிடிச்சதாலதான்   என் குடும்பத்தாரையும் உனக்கு பிடிக்குது. அதனால் தானே நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய்" என்று கம்மிய குரலில் சொன்னான் அசோக்.

"மாமா நீங்க என் கழுத்துல தாலி கட்டும் போது என்ன நடக்குது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன். இப்ப உங்க  மேல ரொம்ப அன்பா இருக்கேன். அதனால்தான் நீங்க நேசிக்கிற உங்க குடும்பத்தையும் என்னால  நேசிக்க முடியுது" என்று  சங்கவி  சொல்லும்போது இருவரின் கண்களும் கண்ணீருடன் பேசின.

 

ஆஸ்பிட்டல் வந்தவர்கள் மருத்துவரிடம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டார்கள். மல்லிகாவை டிஸ்சார்ஜ் செய்து  சென்னை அழைத்துச் செல்ல தயாரானார்கள்.

"அண்ணி நான் வேணும்னா வீட்டை பார்த்துக்கறேன். நீங்க சென்னை போயிட்டு வாங்க" என்று அலமேலு சொன்னார். அலமேலு பொறுப்பாக வீட்டைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தங்கத்திற்கு வந்ததும்  நிம்மதியாக இருந்தார்.

 

சென்னையில் போரூர் தாண்டி இருக்கக்கூடிய அந்த மகளிருக்கான மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியது மல்லிகாவை ஆம்புலன்சில் அழைத்து வந்ததால் நேரடியாக அட்மிஷன் போட்டுக்கொண்டார்கள் நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தனர். மல்லிகாவையும் சோதித்தனர். அந்த ஆஸ்பிட்டலின்  தலைமை மருத்துவர்,குடும்பத்தினரை அழைத்து மல்லிகாவின் உடல்நிலை குறித்து இனி வரும் காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.  எவ்வளவு செலவாகும் என்று விளக்கமாக சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொல்லச் சொல்ல அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி ரேகைகள் சுனாமி போல அலை அடித்தது.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)