Skip to main content

சிறை சென்று திரும்பி சாதித்த மனிதர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 12

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 12

 

சிறைக்கு சென்று வந்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் விவரிக்கிறார்

 

நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய உறவினரை வெட்டினார். வெட்டப்பட்டவருக்கு ஆழமான காயம் ஏற்பட்டது. இரண்டு வருட சிறை தண்டனைக்குப் பிறகு அவர் வெளியே வந்தார். சிறைக்குச் சென்று வந்ததால் அனைவரும் அவரை வித்தியாசமாகவே நடத்தினர். அவர் என்னிடம் வந்தார். மிகுந்த மன அழுத்தத்தில் அவர் இருந்தார். தன்னை சந்திப்பவர்களிடம் தான் சிறையில் இருந்ததை சொன்னவுடன் தன்னை அவர்கள் ஒதுக்குவதைக் கண்டு அவர் வேதனையடைந்தார். 

 

இதனால் அவருக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தான் சிறை சென்ற விஷயத்தை அவர் மறைக்க ஆரம்பித்தார். ஒரு இடத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனாலும் அவர் சிறை சென்ற விஷயம் தெரிந்தவுடன் அந்த வேலையும் பறிபோனது. தான் உண்மையைச் சொல்ல வேண்டுமா, பொய் சொல்ல வேண்டுமா என்கிற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது. பள்ளியில் அவருடைய குழந்தைக்கும் இதனால் அவமானமே கிடைத்தது. ஒருமுறை சிறை சென்றுவிட்டால் காலம் முழுவதும் அவர் குற்றவாளி தான் என்பது போல் உலகம் அவரை நடத்தியது.

 

சிறையிலேயே இன்னும் அதிக காலம் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. வேறு மாநிலத்திற்கு சென்று வேலை பார்க்கலாம் என்றாலும் அங்கு அவருக்கு மொழிப் பிரச்சனை ஏற்பட்டது. அவரை சுயதொழில் தொடங்கச் சொல்லி நான் அறிவுறுத்தினேன். மனைவியின் உதவியுடன் அவர் சுயதொழில் தொடங்கினார். பல்வேறு சேவைகள் அடங்கிய பெட்டிக்கடை ஒன்றை அவர் அமைத்தார். ஆச்சரியமாக அந்தக் கடை உடனடியாக நல்ல வருமானத்தைத் தர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் அவர் கடன்கள் அனைத்தையும் அடைத்தார். நல்ல வருமானம் ஈட்டினார். கிட்டத்தட்ட சாதனையாளராக மாறினார் என்றால் மிகையாகாது.

 

இப்போது அதே உலகம் அவர் குறித்து பாசிட்டிவாக பேசத் தொடங்கியது. அவருக்கு ஆறுதல் கூறியது. அவரை இன்ஸ்பிரேஷன் என்று அழைத்தது. நம்முடைய எண்ணத்தில் தான் நாம் தவறு செய்கிறோம். அதை உடலின் மூலமாக இன்னொருவர் மீது செலுத்துகிறோம். எண்ணத்துக்கு எந்த தண்டனையும் இல்லை. உடலுக்கு தான் தண்டனை. அந்த தண்டனை தான் ஜெயில். தன்னுடைய வாழ்க்கையில் பட்ட அனுபவங்களை வைத்து தன்னுடைய குழந்தைக்கு அவர் அறிவுரை கூறினார். இதன் மூலம் குழந்தைக்கும் வாழ்க்கை குறித்த நல்ல புரிதல் ஏற்பட்டது. கோபத்தை நாம் சரியாக நிர்வகிக்காவிட்டால் வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்படும்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அவமதித்த ஆசிரியர் முன் குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 18

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 18

 

குஜராத்தில் ஒரு பள்ளி ஆசிரியருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

குஜராத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்கின்ற பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க சென்றிருந்தேன். அங்கே தானாகவே நடந்த ஒரு கவுன்சிலிங் பற்றி சொல்கிறேன்.  

 

குஜராத்தில் உள்ள பழங்குடி மக்கள் வாழ்கிற கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் சென்றேன். அங்கு எப்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது என்றால் நான் தமிழில் சொல்வேன். அதை ஒரு குஜராத் தன்னார்வலர் அங்குள்ளவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வார். சில சமயம் நகைச்சுவை சொன்னாலும் அது மொழிபெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு புரிந்துதான் அவர்கள் சிரிப்பார்கள் அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். இது எனக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

 

இந்த சமயத்தில் அங்கு வந்த ஒரு வகுப்பு டீச்சர், இந்த பழங்குடி பிள்ளைகளுக்காக நீங்கள் ரொம்ப மெனக்கிடல் செய்ய வேண்டாம் சார். இதுங்க எல்லாம் மதிய சோத்திற்காகத்தான் பள்ளிக்கூடமே வராங்க. சாப்டு போயிடுவாங்க. படிப்பின் மீதெல்லாம் பெரிய கவனம் செலுத்தமாட்டாங்க என்றார். இதை ஒரு ஆசிரியர் சொல்கிறார் எனும்போது ஆச்சரியமாகவும், வருத்தமாகவும் இருந்தது.

 

தமிழகம் போன்ற கல்வியில் முன்னுக்கு வந்துள்ள மாநிலங்களில் இருந்து சென்றவன் என்பதால் மட்டுமல்ல, இந்த கல்விதான் என்னை அங்கே கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. நாம் அந்த டீச்சருக்கு ஒரு போதனையை கவுன்சிலிங்காக கொடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றியது. அதை நேரடியாக செய்யாமல் எடுத்துக்காட்டோடு செய்தேன்.

 

நான் சொல்வதை மாணவர்களுக்கு அப்படியே சொல்லுங்கள் என்று மொழிபெயர்ப்பாளரிடம் சொன்னேன். என் பெயர் ஜெய். அழகாக உடை உடுத்தியிருக்கிற எனக்கு எழுத, படிக்க தெரியாது. என் பெயரையே எழுத தெரியாது. யாராவது எழுத சொல்லித் தருகிறீர்களா என்று கேட்டதற்கு அந்த வகுப்பில் இருந்த 14 பழங்குடியின மாணவர்களுமே நான் எழுத சொல்லித் தரேன் என முன் வந்தார்கள்.

 

அதில் ஆஷா என்ற சிறுமி உடனடியாக முன்வந்து, என் பெயரை அவர்களது மொழியில் எழுத கற்றுக் கொடுத்தாள். நான் வேண்டுமென்றே தவறு செய்தேன். அதையும் திருத்தினாள். எனக்கு எப்படி எழுத வேண்டும் என்றும், வாசிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள். இதையெல்லாம் கவனித்த டீச்சர் என்னிடம் வந்து பேசினார். இந்த பழங்குடி மாணவர்கள் படிப்பார்கள் என்று எனக்கு தெரியாது சார் என்றார். ஆனால் இனி இவர்களுக்கு நல்லபடியாக சொல்லித்தரேன் என்று வாக்குறுதி அளித்தார். இந்த மனமாற்றமே எனக்கு பெரிதாக இருந்தது.

 

 

Next Story

கணவனை வெறுத்த மனைவி; அதிர்ச்சியான காரணம் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 17

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

jay-zen-manangal-vs-manithargal- 17

 

எல்லோரும் கொடுமை செய்கிற கணவனைப் பற்றி புகார் அளிப்பார்கள். ஆனால் இங்கே ஒரு பெண்மணி தன் கணவர் மிகவும் நல்லவராக இருக்கிறார் என்று சொல்லி கவுன்சிலிங் வந்திருந்தார். அவருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

நல்ல வசதியான குடும்பத்தைச் சார்ந்த, நல்ல வேலையில் இருக்கிற, சமூகத்தில் நல்ல பொறுப்பில் இருக்கிற, குடிப்பழக்கமோ வேறு எந்த கெட்ட பழக்கமோ இல்லாத, இன்னொரு பெண்ணின் மீது விருப்பமோ, திருமணத்தை மீறிய உறவோ எதுவும் வைத்திராத ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன் தன் கணவர் என்றும் எல்லோராலும் மிகவும் நல்லவராக பார்க்கப்படுகிறார். அவர் செய்வது சரியாக இருக்கும் என்பதே எல்லோரின் முடிவாகவும் இருக்கிறது.

 

அதுதான் தனக்கு சிக்கலாக இருக்கிறது என்றார் அந்த பெண்மணி. அதாவது எல்லாவற்றிலுமே பக்காவாக இருக்கிறவரின் முடிவுதான் எல்லோரின் முடிவாகவும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கோவில் போக வேண்டும் என்று அந்த பெண்மணி முடிவெடுத்தால், அவரின் கணவரோ வேண்டாமே என்று சொல்லிவிட்டார் என்றால் எல்லோருமே அதான் மாப்ளை சொல்லிட்டாருல்ல அப்ப சரியாத்தான் இருக்கும். கோவிலுக்கு போக வேண்டாம் என்று எல்லோரின் முடிவாகவும் மாறிப்போகும்.

 

அவர்தான் எல்லாவற்றிலுமே கரெக்டா இருக்கிறாரே அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணமே எல்லோரையும் அவரின் முடிவுக்கு மறுபேச்சு பேசாமல் முடிவெடுக்க வைக்கிறது. ஒரு சமயத்தில் இந்த முடிவெடுக்கும் சூழல் படுக்கை அறை வரை வந்து நிற்கிறது. அன்றைய இரவு வேண்டும், வேண்டாம் எனபதையே அவர்தான் முடிவெடுக்கிறார். இதனால் மனமுடைந்த பெண் எல்லோரிடமும் இதை குறையாகச் சொன்னால் “எவ்வளவோ தப்பு பண்றவனுங்க இருக்கானுங்க, இதெல்லாம் ஒரு பிரச்சனையா? அட்ஜஸ்ட் பண்ணிட்டு போ” என்கிறார்கள்.

 

ஆனால் தான் அவரிடமிருந்து பிரியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கவுன்சிலிங் வந்தார். தன்னுடைய முடிவில் சற்றே உறுதித்தன்மை இல்லாதவரிடம் நான் ஒரு வார்த்தை கேட்டேன். அந்த பெர்பெக்ட் மனிதரை விடுங்கள், அவரிடமிருந்து பிரிந்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள். சிறு வயதுதான் ஆகிறது, துணை வேண்டும். வேறொரு வாழ்க்கையைத் துணையை தேடிக்கொண்டால் அவன் பெர்பெக்டாக இல்லாமல், தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவனாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு சற்று யோசித்தார்கள். பிறகு இதற்கு தீர்வு உங்கள் கணவரோடு பேச வேண்டும் என்றேன். அவரை அழைத்து வந்தார்கள்.

 

தன்னிடம் எந்த பிரச்சனையுமே இல்லையே என்று நினைத்தவரிடம் பிரச்சனை என்னவென்று எடுத்துச் சொன்னோம். யோசிக்க ஒரு வாரம் கொடுங்கள் என்று கேட்டவர் ஒரு வாரத்திற்கு பிறகு வந்து ஆமாம் என்னிடம் அப்படியான ஒரு சிக்கல் இருக்கிறது தான். நான் நினைப்பதுதான் சரி என்று நினைப்பேன். இனிமேல் எல்லாவற்றையுமே கலந்தாலோசித்து முடிவெடுக்கிறேன் என்று சொன்னார். சில சமயம் நல்லவனாக இருப்பதும் பலருக்கு சிக்கலாகிப் போகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இந்த கவுன்சிலிங் வழியாக புரிந்து கொள்ளப்பட்டது.