Skip to main content

செருப்பு போட்டதே காலேஜ் வந்துதான்... இஸ்ரோ சிவன் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #35

Published on 27/03/2021 | Edited on 01/04/2021

 

isro sivan

 

உலகின் எந்த நாட்டு லேண்டரும் கால்பதித்திடாத நிலவின் தென்பகுதியைக் குறிவைத்து முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள், விக்ரம் லேண்டர், பிரக்யான் ஊர்தி ஆகிய மூன்றையும் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-2. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு ஸ்ரீ ஹரிகோட்டாவில், 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் நாள் நடந்தேறியது. இந்தத் திட்டத்தால் நேரடியாக எந்தப் பலனும் தங்களுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதை நன்கறிந்த இந்தியாவின் கடைக்கோடி அன்றாடங்காய்ச்சி மனிதர்களில் தொடங்கி இந்தியாவைத் தங்கள் போட்டி நாடாகக் கருதிக்கொள்ளும் வல்லாதிக்க நாடுகள்வரை அனைவரது பார்வைகளும் சந்திராயன்-2 மீதே இருந்தன. சந்திராயன்-2 நிலவின் தென்பகுதியை அடைய எடுத்துக்கொள்ளும் காலம் எனத் திட்டமிடப்பட்டிருந்த 48 நாட்களும் உச்சபட்ச எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தது இந்திய தீபகற்பம். இத்திட்டம் ஒட்டுமொத்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியாக இருந்தாலும் இதற்கான மூளையாக மற்றும் முன்னத்தி ஏராக இருந்தவர், 'ராக்கெட் மனிதர்' என அழைக்கப்படும் கே.சிவன்.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை என்ற கிராமத்தில் கைலாச வடிவு மற்றும் செல்லம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சிவன். மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் உள்ள ஏழ்மைக்கும் நடுத்தரத்திற்கும் இடைப்பட்ட நிலையுடைய குடும்பத்தில் பிறந்த சிவன், தன்னுடைய பள்ளிக்கல்வியை ஊரில் இருந்த அரசுப்பள்ளியில் தமிழ் வழியில் பயில்கிறார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு பொறியியல் படிக்க வேண்டும் என்பது சிவனின் ஆசை. தன்னுடைய குடும்பச் சூழலைக் காரணங்காட்டி தந்தை கைவிரித்துவிட, பி.எஸ்.சி படிக்கிறார். தன் மகன் ஆசையை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியில் இருந்த கைலாச வடிவு, சிவனின் அடுத்த கட்டப் படிப்பிற்காகத் தன்னுடைய நிலத்தை விற்று வான்வெளிப் பொறியியல் படிக்க வழிவகை செய்து கொடுக்கிறார். பின், அங்கிருந்து வான்வெளிப் பொறியியலில் மேற்படிப்பு, இஸ்ரோவில் வேலை, பதவி உயர்வு, தலைவர் பொறுப்பு என உயரப் பறந்து சாதித்திருக்கிறார் சிவன்.

 

"எங்கள் குடும்பம் விவசாயக் குடும்பம். பள்ளி முடிந்ததும் நிலத்திற்குச் சென்று அப்பாவுடன் வேலை செய்வேன். அப்பா மாங்காய் வியாபாரமும் செய்துவந்தார். விடுமுறை என்றால் முழுநேரமும் மாங்காய் தோட்டத்தில்தான் இருப்பேன். அங்கே இருக்கும்போது நானும் ஒரு வேலை ஆள் போலத்தான். ஒரு கல்லூரியில் சேர வேண்டுமென்றால் அந்தக் கல்லூரி எப்படி, அங்கு எப்படி பாடம் கற்றுக்கொடுப்பார்கள் என்றுதான் மற்றவர்கள் பெற்றோர் எதிர்பார்ப்பார்கள். நான் கல்லூரியில் சேரும்போது கல்லூரி வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறதா என்பதைத்தான் என் அப்பா எதிர்பார்த்தார். எங்கள் குடும்பச் சூழலை சமாளிக்க அது தேவையாகவும் இருந்தது. எனக்கு இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. ஆனால், குடும்ப நிலையை எடுத்துக்கூறி அப்பா மறுத்துவிட்டார். அப்பா மனம் மாறுவார் என நினைத்து ஒருவாரம் வரை சாப்பிடாமல் இருந்து பார்த்தேன். கடைசியில் நான்தான் மனம் மாறினேன். கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்தேன். மேற்படிப்பு என்று வரும்போது மனம் மாறிய என் அப்பா, 'ஒருமுறை உன்னைத் தடுத்துவிட்டேன். இப்போது நீ விருப்பப்பட்டதைப் படி... வேண்டுமென்றால் நிலத்தை விற்று உனக்கு உதவுகிறேன்' எனக் கூறினார். அதன்பிறகு எம்.ஐ.டி-யில் சேர்ந்து வான்வெளிப் பொறியியல் பயின்றேன். எம்.ஐ.டி-யில் படிக்கும் போதுதான் முதல்முறையாக என் வாழ்க்கையில் செருப்பு அணிந்தேன். வான்வெளிப் பொறியியலில் இளங்கலை முடித்த பின் வேலை கிடைக்கவில்லை. அதனால் முதுகலை படித்தேன். முதுகலை முடித்ததும் இஸ்ரோவில் வேலை கிடைத்தது".

 

isro sivan

 

அதன்பிறகு, தன்னுடைய திறமையை சிவன் படிப்படியாக வளர்த்துக் கொள்ள, இஸ்ரோவில் உயர்ந்த பதவிகள் தேடி வருகின்றன. பொதுவாக வெற்றியாளர்களிடம் உங்களது 'ரோல் மாடல்' யார் எனக் கேட்டால் தங்களுக்கு முன் சாதித்த யாரையாவது குறிப்பிடுவார்கள். மேற்கண்ட பின்புலத்தில் இருந்து வந்து ராக்கெட் மனிதராக சிவன் சாதித்ததே மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கையில், ரோல் மாடல் யார் என்ற கேள்விக்கு, "நான் பி.எஸ்.சி முடிக்கும் வரை என்னுடைய உலகம் மிகச்சிறியது. பெரிய அளவில் எனக்கு வெளியுலகத் தொடர்பெல்லாம் கிடையாது. அதனால் இவரைப்போல ஆகவேண்டும் என்று நினைத்து அதை நோக்கி உழைக்க எனக்கு வாய்ப்பு அமையவில்லை" எனச் சிவன் அளித்த பதில், அந்த ஆச்சரியத்தை அதிகப்படுத்துகிறது.

 

நெருக்கடிகள் மிகுந்த அன்றாட வாழ்க்கை ஓட்டக் கரங்களின் பிடியில் இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தப்பி, அந்தச் சந்தர்ப்பங்களை எல்லாம் சரியாகப் பயன்படுத்தி, வானுலகை இந்தியாவின் பிரதிநிதியாக இன்று ஆளும் கே.சிவன், 'நினைத்தது கிடைக்காதபோது வருந்தமாட்டேன். கிடைத்ததைச் சிறப்பானதாக மாற்றிக்கொள்வேன். இதுதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்" என்கிறார். தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தில் இருந்து அதற்கான உதாரணங்களையும் அள்ளி அடுக்குகிறார்.

 

"நான் விரும்பியது என்றும் எனக்குக் கிடைத்ததில்லை. இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்ட போது பி.எஸ்.சி படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு எம்.எஸ்.சி படிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், பி.டெக் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பி.டெக்கிற்குப் பிறகு வேலையில் சேர வேண்டுமென நினைத்தேன். ஆனால், ஐ.ஐ.எஸ்-இல் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பின், சேட்டிலைட் துறையில் சேர வேண்டுமென நினைத்தபோது ஸ்பேஸ் செண்டரில் வேலை கிடைத்தது" எனச் சிரித்தவாறே கூறுகிறார்.

 

சிறந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என நினைப்பதைவிட கிடைத்த வாய்ப்பை சிறந்ததாக்க முயற்சிப்போம் எனக் கூறும் சிவன் வார்த்தைகளில் தன்னம்பிக்கைத் ததும்புகிறது..

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

குழந்தைன்னு நினைச்சோம்; 39 வயசு குழந்தைன்னு நினைக்கல! ஒசிட்டா ஐஹீம் | வென்றோர் சொல் #34
 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.