Skip to main content

"பா.ம.க பகுதிக்குள் நீங்க போக வேண்டாம், அதை திமுக பார்த்துக் கொள்ளும்'' - எதற்காக சொன்னார் திருமா? கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

தமிழகத்தில் கவனிக்கப்படும் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியும் ஒன்று. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து போட்டியிடுவதால் இது ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் இதே திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பிறகு, தனித்துப்போட்டி என தொண்டர்கள் முழக்கம், மக்கள் நலக் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டி என சென்ற பயணம் மீண்டும் தற்போது இந்த முறையும் திமுக கூட்டணியுடன் அதே சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் இந்தத் தொகுதியில் ஏற்கனவே ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த தேர்தலில் சிதம்பரம் தேர்தல் களம் எப்படி இருந்தது? கொஞ்சம் சென்று பார்க்கலாம்.

அப்போதும் தமிழகத்தின் ஹாட்டஸ்ட் தொகுதிகளில் ஒன்றாக சிதம்பரம் தகித்தது. தொகுதியில், வன்னிய சமூக மக்களும், தலித் சமூக மக்களும் ஏறத்தாழ சம பலத்தில் இருக்க, இவர்களையடுத்து இஸ்லாமியத் தரப்பும், கிறிஸ்தவத் தரப்பும், மூப்பனார் சமூகத்தினரும் ஓரளவு கணிசமாக உள்ளனர். பிற சமூக மக்களும் கலந்துகட்டி இருக்கிறார்கள். 

 

thiruma



கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் அரியலூரில் அறிமுகக் கூட்டத்தைக் கலக்கலாகத் தொடங்கிய திருமா, முதற்கட்டமாக தன் கட்சித் தொண்டர்களை அழைத்து "சாதீய மோதலுக்கு வழி வகுத்து, நம்மைப் பலிகடா ஆக்கப் பார்ப்பார்கள். அதனால் பா.ம.க.வினர் இருக்கும் வன்னியப் பகுதிகளுக்குள், நீங்கள் வாக்கு சேகரிக்கப் போக வேண்டாம். அதை சூரியத் தரப்பு பார்த்துக் கொள்ளும்'' என எச்சரிக்கையாகக் கடிவாளம் போட்டார். இதைத்தொடர்ந்து பல தொகுதிகளில் இருந்தும் திருமாவுக்காக களவேலை பார்க்கச் சென்றிருந்த சிறுத்தைப் பிரமுகர்கள், தலித் மக்கள் வாழும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று "பா.ம.க.வில் சேர்ந்து சீட் வாங்கியிருக்கும் மணிரத்தினத்தை ஓரம்கட்டுங்க. அவருக்கு சரியான பாடம் புகட்டுங்க. அ.தி.மு.க. வேட்பாளரோ கரன்ஸியை மட்டுமே நம்பி நிக்கிறார். அவரையும் தோற்கடிச்சி அனுப்புங்க. ஈழத்தமிழர்களுக்காக உறுதியாக் குரல் கொடுக்கிறவர் நம்ம திருமாதான்'’ என்றெல்லாம் திண்ணைப் பிரச்சாரம் செய்தார்கள் . இந்த நிலையில் உ.பி.க்கள் திருமாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஒரு தகவல் அப்போதும் கிளம்பியது. குன்னம் தேர்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்த திருமா "சிறுத்தைகள் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் தி.மு.க. சரியாக களப்பணி செய்யவில்லை என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். ஆனால் இங்கே பாருங்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.வும் மா.செ.வுமான சிவசங்கர், பெரம்பலூர் மா.செ.துரைசாமி போன்றோர் இங்கே வந்து, அந்த வதந்தியை முறியடித்துவிட்டார்கள்'' என்று  உற்சாகமாகப் பேசி அதை முடித்துவைத்தார்.

முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மா.செ.வுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அடிக்கடி தொகுதி முழுக்க விசிட் அடித்து, உ.பி.க்களை உசுப்பிவிட்டபடியே இருந்தாராம். ஒரு முறை குமராட்சி பகுதிக்கு திடீர் விசிட் அடித்த அவர், ஒ.செ. மாமல்லனைக் கூப்பிட்டு "நம்மக் கட்சியில் இருக்கும் வன்னிய வாக்குகளை இலைத் தரப்பு அறுவடை பண்ணலாம்னு பாக்குது. யாரும் ஜாதிப் பாசத்துக்கு இடம் கொடுத்துடாம பார்த்துக்கங்க. தேர்தல் முடிந்ததும் ஒன்றிய வாரியா, நமக்கு எவ்வளவு வாக்குன்னு பார்ப்பேன். ஓட்டு குறைஞ்சா யாரா இருந்தாலும், கட்சிப் பதவிக்கு ஆப்புதான்'' என செல்லமாக எச்சரித்துள்ளார். முஸ்லிம்கள் அதிகமுள்ள லால்பேட்டை, பரங்கிப் பேட்டை பகுதிகளில் ம.ம.க. ஜாகிர் உசேன் டீம், திருமாவுக்கு வாக்குகளை அறுவடை செய்தது. 
2014இல் இலைத்தரப்பில் நல்ல மனிதர் என்று பெயரெடுத்துள்ள சந்திரகாசு வரிந்து கட்டினார். "இங்கு திருமாவை தோற்கடித்துவிட்டு வாருங்கள்" என ஜெ., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை தேர்தல் பொறுப்பாளராக அனுப்பிவைக்க அவர், பர்ச்சேஸிங் பாலிஸியைக் கையில் எடுத்தார். தொகுதியில் இருக்கும் வன்னிய வாக்குகளைக் குறிவைத்த அவர், பா.ம.க.வில் இருந்து யார் யாரை இழுக்கலாம் என அண்ணாமலை நகர் வாடகை வீட்டில் ஆலோசனை நடத்தினார். முதலில் வன்னிய தலைவர்களில் முக்கியமானவரான பு.த.இளங்கோவனை ஜெ.’தலைமையில் ஐக்கியமாக்கினார். இளங்கோவன் மூலம் பாட்டாளிப் பிரமுகர்களை இழுக்க முயன்றார். டாக்டர் ராமதாஸுக்கு முதலில் அரசியல் அட்வைசராக இருந்த கங்கைகொண்ட சோழபுரம் பொறியாளர் கோமகனை சந்தித்த அதிமுக முக்கியஸ்தர்கள் "நீங்க எங்கக் கட்சிக்குக் கூட வர வேணாம். நீங்க தேர்தல் வேலை செய்யாமல் இருந்தாலே போதும்'’என்று கூற அவரும், "நான் ஒதுங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டார். செங்கோட்டையனின் ஆட்கள் சிதம்பரம் அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகளை எல்லாம் செல்போனில் தொடர்புகொண்டு "உங்க பகுதியில் மாற்று கட்சிக்காரர்கள் யார் நம்ம பக்கம் வருவாங்க. பட்ஜெட் என்ன?" என தூண்டில் வீசியபடியே இருந்தார்கள்.

 

thiruma 1



காங்கிரஸில் பசை பார்ட்டியான தொழிலதிபர் மணிரத்தினம், சீட்டை பலமாக எதிர்பார்த்திருக்க, கட்சியோ எக்ஸ் எம்.பி. வள்ளல்பெருமானை அறிவித்தது. மணிரத்தினத்துக்கு காங்கிரஸில் சீட் இல்லை என்று தெரிந்ததும், சிறுத்தையினர் வெடிவெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். காரணம் தலித் வாக்குகளை மணிரத்தினம் பிரிப்பார் என்று அவர்கள் நம்பினர். இதனால் டென்ஷனான மணிரத்தினம், பா.ம.க. காடுவெட்டி குருவைத் தொடர்புகொண்டு சீட்டுக்குப் பேசினார். க்ரீன் சிக்னல் கிடைக்க, 100 கார்கள் புடைசூழச் சென்று குருவைப் பார்த்தார். இவரைப் பார்த்ததும் குரு "என்னை காதலுக்கு எதிரின்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டிருக்கீங்க. நான் எதிரி இல்லை. ஏமாற்றுக் காதலைத்தான் எதிர்த்தேன்" என்றார். "தெரியும்ணே" என்ற மணி, குருவுக்கு சால்வை போட்டார். அங்கிருந்து டாக்டர் ராமதாஸை குரு தொடர்பு கொள்ள, அவரும் ஓ.கே. சொன்னார். இதைத்தொடர்ந்து, மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

"சீட் கிடைக்காததால் இன்னொரு கட்சியில் சேர்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?' என மணிரத்தினத்திடம் அப்போது நக்கீரன் கேட்டபோது "விசுவாசமான தொண்டனின் முதுகில் கட்சியே குத்திவிட்டால் அது சரியா? உனக்குதான் சீட் என்று நம்பவைத்து கடைசி நேரத்தில் கட்சி, கழுத்தை அறுப்பது சரியா? சீட் தருவோம் என்ற பெயரில், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் என்னிடம் எவ்வளவோ ஆதாயம் அடைந்தார். நான் மதித்த கட்சி என்னை மதிக்கவில்லை. என்னை மதித்த கட்சியை நான் மதித்து சேர்ந்திருக்கிறேன்'' என்றார் அதிரடியாகவே. ஞானதேசிகன், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சில காலம் இருந்தார். பின்னர், வாசன் அணி பிரிந்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. காங்கிரஸ் வள்ளல்பெருமானோ, சிதம்பரத்தில் செயல்வீரர் கூட்டத்தைக் கூட்டி "பா.ம.க.வுக்கு போன மணிரத்தினம் துரோகி" என ஆரம்பித்து ஒருமையில் அர்ச்சனை செய்தார். இலைத் தரப்போ "இங்கு நான்குமுனைப் போட்டி என்றபோதும், உச்ச ஃபைட் எங்களுக்கும் திருமாவுக்கும்தான்''’ என்றது அழுத்தமாக.

இப்படி வி.ஐ.பி. தொகுதியான சிதம்பரத்தில் 2014யிலும் சம பலத்தில் போட்டி நிலவியது. போட்டி என்பதைத் தாண்டி ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் என்பது போர் போலத்தான். வியூகங்கள், ஆக்ஷன், துரோகம், ட்விஸ்ட் எல்லாம் கலந்து தற்போதும் தகிக்கிறது தேர்தல் களம். மக்களுக்கு இந்த ஒரு மாதம் கேளிக்கைதான். அதன் பின்பு வென்றவர்களுக்கு கேளிக்கை. மக்களுக்கு வாடிக்கையான வாழ்க்கை.  

 

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.