Skip to main content

திருமணம் ஆகாத பெண்களைக் குறிவைக்கும் காமுகன்கள் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 02

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Detective Malathi's Investigation : 02

 

சமுதாயம் எவ்வளவு முன்னேறினாலும் டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும் பாதிக்கப்படும் சமுதாயமாக பெண் சமுதாயம் தான் இருக்கிறது. அந்த வகையில், தான் சந்தித்த பெண்கள் அதிகம் குறிவைக்கப்பட்ட வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளரான மாலதி விவரிக்கிறார்.

 

மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்த ஒரு பெண்ணை ஒரு பையன் தொடர்புகொண்டான். சில காலம் பேசிப் பழகிய பிறகு நேரில் சந்தித்தனர். இருவரும் அடுத்தடுத்த நிலைகளைக் கடந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளை விட்டு அவன் விலக ஆரம்பித்தான். இதனால் அவர்கள் எங்களைத் தொடர்புகொண்டனர். அவனுக்கு அந்தப் பெண்ணைப் பற்றி அனைத்தும் தெரியும். ஆனால், இவளுக்கு அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. முட்டாள்தனமாக அவனோடு பழகியிருக்கிறாள். 

 

அவளைத் தொடர்ந்து அவனுக்கு மெயில் அனுப்பச் சொன்னோம். ஒருகட்டத்தில் அவன் வெளியே வந்தான். அவள் இருக்கும் இடத்திற்கு வந்து ரூம் போட்டு அவளை அழைத்துச் சென்றான். நாங்களும் அவர்களைப் பின்தொடர்ந்தோம். சுற்றி இருக்கும் அனைத்து இடங்களிலும் ஆள் வைத்து கண்காணித்தோம். அன்று முழுவதும் அவன் கால்டாக்சியிலேயே தான் சுற்றினான். அவனுடைய காரை கண்டுபிடித்தோம். அவன் பின்னணியை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்தனர். 

 

சில நாட்களில் இந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாள். காவல்துறையினர் எங்களையும் விசாரித்தனர். நாங்கள் நடந்த அனைத்தையும் கூறினோம். அவனுடைய இருப்பிடம் குறித்து நாங்கள் தகவல் தெரிவித்தோம். காவல்துறையினர் அவனை கைது செய்தனர். அவன் ஆன்லைனில் இதே வேலையாகத்தான் இருந்திருக்கிறான் என்பது அதன் பிறகு போலீஸ் விசாரணையில் தெரிந்தது. 

 

டேட்டிங் என்றால் என்ன என்பது குறித்த சரியான புரிதல் நம்முடைய இளைஞர்களுக்கு இல்லை. வெளிநாடுகளில் உறவுமுறையை உறுதி செய்து திருமணம் வரை கொண்டு செல்வதற்கே டேட்டிங் பயன்படுகிறது. இங்கு அதற்கான அர்த்தமே வேறு.

 

வெளிநாட்டினர் நம்முடைய கலாச்சாரத்தை இப்போது பின்பற்றி வாழ்கின்றனர். நம் இளைஞர்கள் தவறான பழக்கங்களையே கலாச்சாரம் என்று கருதுகின்றனர். ஒரு வழக்கில் சரியான துப்புகள் கிடைத்தால் மட்டும்தான் அதை நாங்கள் எடுத்துக்கொள்வோம். துப்புகளே இல்லாத வழக்குகளை நாங்கள் எடுப்பதில்லை. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திலிருந்து நான் வரவில்லை என்றால் போலீசாரோடு எங்கள் டீம் உள்ளே வந்துவிடும். அனைத்தையுமே ப்ளான் செய்துவிட்டு தான் உள்ளே செல்வோம்.

 

 

Next Story

பெண்களை ஆசையாக பேச வைப்பது; சபலம் உள்ள ஆண்களிடம் ஆட்டையைப் போடுவது  - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 42

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 detective-malathis-investigation-42

பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான  தகவல்களை வாங்கினோம்.

இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.

இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த  வங்கி  கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என  வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.

இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது