Skip to main content

"அரைவேக்காட்டு சாப்பாடுதான்; அந்த வாசனையே நம் ஆட்களுக்கு பிடிக்காது" - பர்மா கதைகள் பகிரும் பாக்யம் #3

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் மூன்றாம் பகுதி பின்வருமாறு...

 

"இங்கிருந்து பர்மாவிற்கு சென்ற மக்களுக்கு ஆரம்பத்தில் எந்தப் பிரச்சனையும் கிடையாது. உழைப்பு, வசதி, திருப்தியான வாழ்க்கை அவர்களுக்கு கிடைத்தது. பிள்ளைகள் வளர்ப்பு மட்டும்தான் அவர்களுக்கு சிரமமாக இருந்தது. நம் ஆட்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்தார்கள். சிலர் துறைமுகத்தில் வேலை பார்த்தார்கள். முஸ்லீம்கள் சிலர் சொந்தமாக மரக்கடை வைத்திருந்தார்கள். 

 

பர்மாவை அப்பர் பர்மா, லோயர் பர்மா என்று பிரித்திருந்தார்கள். நாங்கள் இருந்தது லோயர் பர்மா. மலைப்பகுதிதான் அப்பர் பர்மாவில் வரும். அங்கிருந்து இந்தியாவின் எல்லைவரை அப்பர் பர்மாதான். நாட்டில் பெரிய அளவில் சட்டங்கள் இல்லை. குழந்தை பிறந்தால் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்றெல்லாம் அங்கு கிடையாது. நான் பிறந்ததற்கெல்லாம் அந்த நாட்டில் பதிவு இருக்காது. யார் வேண்டுமானாலும் வரலாம், வாழலாம் என்று இருந்ததை ராணுவ ஆட்சி வந்த பிறகுதான் ஒரு ஒழுங்குக்குள் கொண்டுவந்தார்கள். அதன் பிறகுதான், அங்கிருந்த வெளிநாட்டினர் வெளியேற ஆரம்பித்தனர். 

 

மீன், கீரைதான் அந்த மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். நம்மைப்போல அல்லாமல் அரைவேக்காட்டில்தான் உண்பார்கள். அதிலிருந்து வரும் ஒருவகையான வாசனை பெரும்பாலும் நம் ஆட்களுக்கு பிடிக்காது. கையெடுத்து கும்பிடும் பழக்கமெல்லாம் அங்கு கிடையாது. நெஞ்சில் கை வைத்து தலையை குனிவதுதான் அங்கு மரியாதை செலுத்தும் முறை. உடை விஷயத்தில் ரொம்பவும் கண்ணியமாக இருப்பார்கள். வயிறு தெரிவதுபோல உடை உடுத்தவே மாட்டார்கள். 

 

இன்று அங்குள்ள தமிழர்கள் பர்மாகாரர்களாகவே மாறிவிட்டார்கள். அவர்கள் மொழி பேசிக்கொண்டு, அந்த மக்கள் உடையை உடுத்திக்கொண்டு அந்த மக்களோடு மக்களாகவே ஆகிவிட்டார்கள். பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை கிறிஸ்டியன் பள்ளிகள்தான் அதிகம். இன்று அரசியலில் பெரிய ஆட்களாக உள்ள பெரும்பாலோனோர் அங்கு படித்தவர்கள்தான்".

 

 

Next Story

"எருமை மாட்டின் முடிக்காம்புகளில் தடவி கஞ்சா கடத்துவாங்க" - பர்மா அனுபவம் பகிரும் பாக்யம் #4

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் நான்காம் பகுதி பின்வருமாறு...

 

ராணுவ ஆட்சி வருவதற்கு முன்புவரை தமிழை வளர்ப்பதற்கான சூழல் பர்மாவில் நிறையவே இருந்தது. தமிழ்நாட்டில் வெளியாகிற புத்தகங்கள், நாளிதழ்களெல்லாம் அங்கு வரும். ஆனால், ஒருநாள் தாமதமாக வரும். அங்கிருந்த நம் மக்கள் பெரியாரை நேசித்தார்கள். அதே நேரத்தில் தீவிரமாக கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவும் இருந்தார்கள். அண்ணாவுடைய பேச்சும் அங்கிருந்த எங்களிடம் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பர்மாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும் நம் மக்கள் தமிழ் உணர்வோடுதான் இருந்தார்கள். 

 

அந்தக் காலத்தில் பர்மாவில் கடத்தல் அதிகமாக இருக்கும். போதைப்பொருட்களில் தொடங்கி பவளம் வரை கடத்தல் நடக்கும். எருமை மாட்டினை சுத்தமாக கழுவிவிட்டு அதன் முடிக்காம்புகளில் கஞ்சாவை தடவி, இங்கு கொண்டுவந்து கழுவி எடுத்துக்கொள்வார்கள். எல்லையில் தீவிரவாதம் தலைதூக்கிய பிறகு அதெல்லாம் ஒழிந்துவிட்டது. அங்கு கடத்தலில் ஈடுபட்டவர்கள் நாட்டிற்குள் வந்து வேறு தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். நகை, துணிமணிகள் கடத்தலும் அதிகமாக நடக்கும். நம் நாட்டிலும் அதே விலைதான் இருக்கும் என்றாலும், அங்கிருந்து வரும் தங்கம், துணிகள் தரமாக இருக்கும். 

 

அங்கு எம்.ஜி.ஆர், ரஞ்சன், ராஜகுமாரி, சிவாஜிக்கு தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள். அதிலும் எம்.ஜி.ஆர், தெலுங்கு நடிகர் ரஞ்சனுக்கு பர்மிய மக்களும் ரசிகர்களாக இருந்தார்கள். ஒருமுறை, எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரு நடிகை அங்கு வந்தார். நம் ஆட்கள் அவர் கையைப் பிடித்து இழுத்துவிட்டார்கள். எதுக்கு உன் கணவனை டைவர்ஸ் பண்ண என்று அவரிடம் கேட்டு பெரிய பிரச்சனையே ஆகிவிட்டது. தமிழர்கள் வெளியேற ஆரம்பித்த பிறகு பர்மாவில் விவசாயம் பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஒருகட்டத்தில், சைனீஸ் மக்கள் அதிகமானது பர்மிய மக்களுக்கு பல வகையில் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இன்றைக்கும் நம் ஆட்கள் கணிசமான அளவில் அங்கு இருக்கிறார்கள். பெரிய அளவில் தொழில் செய்தவர்கள் ஓரளவு பிழைத்துவிட்டனர். சாதாரணமான தொழில் செய்தவர்களும் கூலி வேலை செய்தவர்களும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

 

 

Next Story

"வாங்க செட்டியார், வாங்க உடையார் என்று பேசினாலும் எங்களுக்கு ஜாதி வெறி இருந்ததில்லை" - பர்மா கதைகள் பகிரும் பாக்யம் #2

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

burma history

 

பிழைப்புத்தேடி உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு, கடந்த நூற்றாண்டில் முதன்மைத் தேர்வாக இருந்தது பர்மா. குறிப்பாக, தமிழர்களுக்கும் பர்மாவுக்கும் இடையே மிகநெருக்கமான உறவு உள்ளது. அந்த வகையில், பர்மாவில் பிறந்து தன்னுடைய இளமைக்காலம் முழுவதையும் பர்மாவில் கழித்த பாக்யம், பர்மா குறித்தும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் வரலாறு குறித்தும் நக்கீரனிடம் தொடர்ந்து பகிர இருக்கிறார். அவர் பகிர்ந்து கொண்ட பர்மா கதைகளின் இரண்டாம் பகுதி...   

 

எங்க அப்பா காலத்தில் எல்லோரும் சென்னை வந்து, சென்னையிலிருந்து கல்கத்தா சென்று, அங்கிருந்து கௌகாத்தி வந்து, கௌகாத்தியிலிருந்து மணிப்பூர் வந்து, அங்கிருந்து கால்நடையாகவே பர்மாவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தப் பாதைகள் சரியாக இல்லாததால் வழிநெடுக நிறைய பிரச்சனைகள் இருந்தன. சிலர் நோய் வந்தும், சாப்பாடு இல்லாமலும் இறந்து போயிருக்கிறார்கள். அன்றைக்கு ரங்கூன் சிட்டி ரொம்பவும் சிறியது. அன்றைக்கு அந்த சிட்டிக்குள் மட்டுமே காரில் போகமுடியும். அதைத் தாண்டி வெளியே செல்லவேண்டுமானால் கப்பலில்தான் செல்லவேண்டும். இந்தக் கப்பல் எல்லாம் பர்மாவை அடித்து நாசம் செய்ததற்கு நஷ்ட ஈடாக ஜப்பான் கொடுத்த கப்பல். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நாடு முழுக்க சாலை வசதி கொண்டுவந்துவிட்டார்கள்.

 

நம்முடைய ஆட்கள் இன்னமும் 5 லட்சம் பேர் வரை அங்கிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பர்மா மக்களோடு கலந்து அவர்கள் மொழி பேசி, அவர்கள் உணவை சாப்பிட்டு பர்மிய மக்களாகவே மாறிவிட்டார்கள். அங்கு நம் ஊர் முஸ்லீம்கள் 500 மரக்கடைகளுக்கு மேலாக வைத்திருந்தார்கள். ஆரம்ப காலத்தில் நான் அதிலுள்ள ஒரு கடையில்தான் வேலை பார்த்தேன். நம்ம ஊர் செட்டியார்கள், மார்வாடிகள், பெங்காலிகள்தான் அங்கு அதிகப்படியாக இருந்தார்கள். நம்ம ஊர் மவுண்ட் ரோடு மாதிரி அங்கு சூளப்பியா என்று ஒரு ரோடு இருக்கும். அந்த ரோடு முழுவதும் இவர்கள் கடைகளாகத்தான் இருக்கும்.

 

செட்டியார்கள் மண்ணை பிடித்துவிட்டார்கள், மார்வாடிகள் தங்கத்தை பிடித்துவிட்டார்கள் என்று அங்கு ஒரு பழமொழியே சொல்வார்கள். அங்கிருந்த பர்மிய மக்களுக்கு பெரிய அளவிலான தொழில் செய்வதற்கெல்லாம் வாய்ப்பே அமையவில்லை. ரொம்பவும் பாவப்பட்ட மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். அந்த மக்களுக்கான உரிமைகளை நாம் அதிகமாக எடுத்துக்கொண்டதால்தான் நம்மை அவர்கள் வெளியே தள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. 

 

எங்க வீட்டில் மொத்தம் 10 குழந்தைகள். நான்தான் கடைசியாக பிறந்தேன். என்னுடைய மூத்த அண்ணன் ஒருவர் அங்கிருந்த ராணுவத்தில் சேர்ந்து, ஒரு குண்டுவீச்சில் இறந்துவிட்டார். அந்த சம்பவத்தில் 30, 40 பேர்வரை இறந்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மீதிருந்த பற்றி காரணமாக நிறைய பேர் படையில் சேர்ந்தார்கள். அவருக்காக படையில் சேர்ந்து நிறைய பேர் உயிரை தியாகம் செய்தார்கள். சிலர் ஜெயிலில் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தற்போது உதவித்தொகை கொடுக்கிறார்கள். 

 

சுதந்திர போராட்டம் பற்றி தெளிவு இல்லாவிட்டாலும்கூட, இந்தியா, தமிழர் என்ற உணர்வு பெரிய ஈர்ப்பை கொடுத்து சுதந்திர போராட்ட வெறியை ஏற்படுத்தியது. வெள்ளாளர், செட்டியார், உடையார், தேவர் என எல்லா சாதியினரும் அங்கு இருந்தனர். வாங்க செட்டியார், வாங்க உடையார் என்றெல்லாம் பேசினாலும் எங்களுக்குள் ஜாதி வெறியில்லை. எல்லோருமே நாட்டுப்பற்று, இனப்பற்றுடன் ஒற்றுமையாக இருந்தோம்.