Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி -3

Published on 15/07/2019 | Edited on 18/07/2019

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகனின் 8 ஆயிரம் கோடி ஊழல்! (CAYMAN ISLANDS FDI SCAM)
 

bjp scams



பிரதமர் மோடிக்கு நெருக்கமான பாஜகவின் கையாள் என்று சொல்லுமளவுக்கு நெருக்கமான அஜித் தோவலின் மகன் விவேக் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினார். அதாவது பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 13 நாட்களுக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கினார். இந்த நிறுவனத்துக்கு 2017-18 ஆம் ஆண்டு மட்டும் கேய்மேன் தீவுகளில் இருந்து அன்னிய நேரடி மூலதனமாக 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி குவிந்தது. இந்தத் தொகை மலைக்க வைக்கும் அளவுக்கு பெரியது. அதாவது 2000மாவது ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த மொத்த நேரடி அன்னிய மூலதனத்துக்கு நிகரானது ஆகும். இந்த நிறுவனத்தின் முக்கியமான இயக்குனரில் ஒருவர் டான் டபுள்யு இபேங்க்ஸ். இவர் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் இடம்பெற்றவர்.


சீட்டுக்கம்பெனி ஊழல் (சத்தீஷ்கர்) - CHIT-FUND SCAM (Chhattisgarh)
 

bjp scams


2015 முதல் 2017 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சத்தீஷ்கர் மாநிலம் முழுவதும் 111 சீட்டுக்கம்பெனிகள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 697 முதலீட்டாளர்களை ஏமாற்றி, 484 கோடியே 39 லட்சத்து, 18 ஆயிரத்து 122 ரூபாயை சுருட்டின. விவசாயிகளும், ஏழை ஜனங்களும் ஏமாற்றப்பட்ட இந்த ஊழலில் ஒருவருக்கும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்ட ஏழை மக்களின் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்று தங்களால் சொல்ல முடியாது என்று பாஜக தலைவர் கூறிவிட்டார்கள்.



அரசுப் பள்ளிகளை மூடியதில் ஊழல் (ராஜஸ்தான்) -CLOSURE OF GOVT SCHOOLS (RAJASTHAN)
 

bjp scams



ராஜஸ்தான் அரசு 17 அரசுப் பள்ளிகளை மூடியது. இதையடுத்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளை விட்டு வெளியேற நேர்ந்தது. குறைவான மாணவர்கள் வருகையே பள்ளிகள் மூடப்பட்டதற்கு காரணம் என்று அரசு கூறியது. ஆனால், உண்மை அதுவல்ல. தனியார் பள்ளிகளின் லாப நோக்கத்திற்காகவே அந்தப் பள்ளிகளை அரசு மூட உத்தரவிட்டது. பள்ளிகளை விட்டு நின்ற பிள்ளைகளுக்கு தனியார் பள்ளிகளில் சேருவது ஒன்றே வழியாக இருந்தது. இல்லையென்றால் படிப்பைத் தொடராமல் வேறு வேலைகளுக்கு செல்ல வேண்டியதாயிற்று. இது கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானது.


ஹெலிகாப்டர் ஊழல் (சத்தீஷ்கர்) -CHOPPER SCAM (CHHATTISGARH)

 

bjp scams


2007 ஆம் ஆண்டு சத்தீஷ்கர் அரசுக்காக அகஸ்டா 109 பவர் இ ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது. ஆனால் ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் குறிப்பிட்ட மாடல் ஹெலிகாப்டரை வாங்குவதற்கு சாதகமாக அதே ஆண்டு முறையற்ற டெண்டர் அறிவிக்கப்பட்டது. அரசு விரும்பிய அம்சங்கள் உள்ள ஹெலிகாப்டர்களை வேறு சில கம்பெனிகளும் தயாரித்த நிலையில் 30 சதவீதம் கமிஷன் கொடுத்து அதாவது சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து இந்த ஹெலிகாப்டர் வாங்கப்பட்டது.



நிலக்கரி ஊழல் (ஜார்கண்ட்) -COAL SCAM (JHARKHAND)
 

bjp scams



ஜார்கண்ட் மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்க உரிமையை குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு வழங்குவதற்காக மோடி அரசின் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சர் திலிப் ராய் அரசு விதிகளை தளர்த்தினார். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தின் பிரமதிஹா நிலக்கரி சுரங்கப் பகுதியில் அந்தக் கம்பெனிக்கு உரிமை வழங்கப்பட்டது. காஸ்ட்ரான் டெக்னாலஜீஸ் என்ற அந்த நிறுவனம் இந்த உரிமையைப் பெற தேவையான வழிகாட்டு முறைகளை பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த உரிமை விதிகளை மீறி வழங்கப்பட்டது.


சிதுர்ஜியா ஊழல் (உத்தரகாண்ட்) -CITURGIA SCAM (UTTARAKHAND)
 

bjp scams


உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார். சிதுர்ஜியா பயோகெமிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை வீடுகட்டும் கம்பெனி ஒன்றுக்கு சாதகமாக வழங்க முதல்வர் ஏற்பாடு செய்தார். அந்த கம்பெனியின் ரிஷிகேஷ் வீடுகட்டும் திட்டத்திற்காக 30 ஏக்கர் நிலத்தை மாற்றிக்கொடுத்து முதல்வர் கோடிக்கணக்கில் லாபம்பெற்றார்.


கடலைமிட்டாய் ஊழல் (மகாராஸ்டிரா) -CHIKKI SCAM (MAHARASHTRA)
 

bjp scams


பாஜக தலைமையிலான மகாராஸ்டிரா அரசின் 206 கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகியது. பாஜக அமைச்சரான பங்கஜா முண்டே பள்ளிக் குழந்தைகளுக்கு கடலை மிட்டாய் வழங்குவதற்கான டெண்டர் விதிகளை தளர்த்தி, அதாவது, டெண்டரே விடாமல் குறிப்பிட்ட கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுத்தார். இதற்காக ஒரே நாளில் 24 தீர்மானங்களை அவர் நிறைவேற்றியிருக்கிறார். 3 லட்சத்திற்கு மேல் யாருக்கேனும் ஒப்பந்தம் கொடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் டெண்டர் கோர வேண்டும் என்பது விதியாகும்.

 

முந்தைய பகுதி:

ஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2

 

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.