Skip to main content

“தொட்டதுக்கெல்லாம் மிரட்டிய மனைவி; இறுதியில் ஏற்பட்ட முடிவு” - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 42

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

advocate-santhakumaris-valakku-en-42

 

எதற்கெடுத்தாலும் சண்டை போடுகிற பெண்ணிடமிருந்து டைவர்ஸ் பெற்ற ஒருவரது வழக்கு குறித்து குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடையே விவரிக்கிறார்.

 

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குகநாதன் என்பவருடைய வழக்கு இது. நண்பர்களின் பரிந்துரையின் பேரில் ஒரு பெண்ணின் புரொபைல் வந்து, நிச்சயித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பே பெண் டயாப்பட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். இதை மாப்பிள்ளைக்கு தெரிவித்தும், எல்லாருக்கும் இயல்பாக வருவது தானே என்றிருந்திருக்கிறார்.

 

திருமணத்திற்கு பிறகு தான் தெரிய வருகிறது. ஒரு நாளைக்கு நான்குமுறை இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலையில் பெண் இருந்திருக்கிறாள். இதன் தீவிரத்தன்மை தெரிய வந்ததும் குகநாதன், தன் அக்காவிடம் சொல்லி மருத்துவரை பார்க்க தன் மனைவியை அழைத்திருக்கிறார். அந்த பெண்ணோ “ஏன், இதையெல்லாம் உங்க அக்காவிடம் சொன்ன”? என்று சண்டையிட்டு இருக்கிறாள்.

 

சென்னையில் தங்கி திருவள்ளூரில் வேலை செய்து வருகிற குகநாதனுக்கு, மாலை வந்ததும் அசதியில் படுத்துவிடுவார். ஆனால் வெளியே எங்கேயாவது கூட்டிப்போகுமாறு சண்டையிடுவாள், வார இறுதி நாளில் கூட்டிப்போகிறேன் என்று சொன்னால் அதற்கும் சமாதானம் ஆகாமல் தினமும் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறாள். சில சமயம் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டு சாப்பிடாமல் இருப்பது, இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து மயக்கநிலைக்கு செல்வதெல்லாம் இருந்திருக்கிறது.

 

அந்த பெண் ஒரு நாள், குகநாதனின் போனை எடுத்துப் பார்த்த போது தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பெண்ணோடு வெகுநாட்களுக்கு முந்தைய வாட்ஸ் அப் சேட் எடுத்துப் பார்த்து, அந்த பெண்ணோடு தொடர்பாக இருக்குறியா என்று சந்தேகப்பட்டு சண்டையிட்டு இருக்கிறாள். அது பழைய தொடர்பு, இப்போது தொடர்பில்லை என்று சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகாமல் சண்டையிட்டு இருக்கிறாள்.

 

இப்படி அடிக்கடி சண்டையிடுவதையே வழக்கமாக வைத்திருப்பதால், மனம் நொந்து போன குகநாதன், தனது அக்கா மகனோடு ஊட்டிக்கு ஒரு சுற்றுலா சென்றிருந்திருக்கிறார். அதை தெரிந்து கொண்டு இப்போ உடனடியாக சென்னைக்கு வராவிட்டால், நான் அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டு சாப்பிடாமல், இன்சுலின் போட்டுக்கொள்ளாமல் இருந்து விடுவேன். எனக்கு எதாவது ஒன்று ஆனால் அதற்கு நீ தான் பொறுப்பு என்பதையும் எழுதி வைத்துவிட்டேன் என்று மிரட்டி இருக்கிறார். அவரும் ஊட்டியிலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு திரும்பி வந்து அவளை காப்பாற்றியிருக்கிறார்.

 

கொஞ்ச நாளைக்கு உங்க அம்மா வீட்டுக்கு போ என்று அனுப்பி வைத்து விட்டு வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது சாப்பிட கடைக்கு போய் உணவு பார்சல் வாங்கி வந்திருக்கிறார். இதை ஒரு தகவலாக அந்த வீட்டின் வாட்ச் மேன் அந்த பெண்ணுக்கு போனில் சொல்லி இருக்கிறார். உடனே வீட்டிற்கு வந்து நீ வீட்டிற்குள் வேறு பெண்ணோடு இருக்கிறாய் என்று சண்டையிட்டு கதவை திறக்கச்சொல்லி சண்டையிட்டு இருக்கிறார்கள். இப்படி தொடர்ச்சியான மன உளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளானதால் டைவர்ஸ் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

 

பெண் வீட்டின் தரப்பிலிருந்து இவர் மீது கொலை மிரட்டல் செய்தார், திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார்கள். முன் ஜாமீன் வாங்கி, நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்காடி குகநாதனுக்கு அந்த பெண்ணிடமிருந்து டைவர்ஸ் வாங்கி கொடுத்தோம். நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த, சாதாரண பணியில், சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்த குகநாதனுக்கு பெரிய தொகையினை ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று பெண் தரப்பில் சொல்லப்பட்டது. நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று கடன் வாங்கி அந்த தொகையை தந்து இப்போது நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறார்.