Skip to main content

பெண்கள் திருமணத்தின் போதே இதை கட்டாயப்படுத்துங்கள் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 12

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Advocate Santhakumari's Valakku En - 12

 

பெண்களைச் சுற்றி பின்னப்படும் வலைகள் ஏராளம். எந்தெந்த வகைகளில் எல்லாம் தாங்கள் ஏமாற்றப்படுவோம், அவற்றிலிருந்து எப்படி தங்களைத் தற்காத்துக் கொள்வது என்பது குறித்து சிந்திப்பதிலேயே அவர்கள் பாதி நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அப்படியான ஒரு வழக்கு குறித்து  குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

ஜெயா என்கிற பெண். கணவனை இழந்து இரண்டு குழந்தைகளோடு வாழ்பவள். அப்போது அவளுக்கு உதவ ஒருவர் முன்வந்தார். அவள் மறுத்தபோதும் அவர் வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். இவளும் சம்மதித்து திருமணம் நடைபெற்றது. இது தெரிந்தால் தன்னுடைய பெற்றோரின் கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்றும், முதலில் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொள்வோம், பின்பு பெற்றோரிடம் சொல்வோம் என்றும் அவர் கூறினார். அவளும் சம்மதித்தாள்.

 

திருமணத்திற்குப் பிறகு அவன் இரவு நேரங்களில் வெளியே செல்ல ஆரம்பித்தான். விசாரித்தபோது தான் தன்னுடைய அப்பா, அம்மாவைப் பார்க்கச் செல்வதாகக் கூறினான். அவர்களிடம் விரைவில் சொல்லும்படி அவள் கூறினாலும் ஏதேனும் காரணங்கள் சொல்லிக்கொண்டே இருந்தான். திடீரென்று முழுவதுமாகக் காணாமல் போனான். அவன் வீட்டுக்கு அவள் சென்றாள். அப்போதுதான் அவனுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று இருந்தது தெரிய வந்தது. 

 

இவள், தான் ஏமாற்றப்பட்டது குறித்து அவன் பெற்றோரிடம் கூறினாள். யாரும் நியாயம் வழங்கவில்லை. திருமணத்திற்கான அனைத்து ஆதாரங்களையும் எடுத்துக்கொண்டு அவன் இருக்கும் இடத்திற்குப் புறப்பட்டாள். அங்கு சென்று புதுப்பெண்ணின் பெற்றோரிடம் முறையிட்டாள். இவள் அழுவது கண்டு மணப்பெண்ணால் தாங்க முடியவில்லை. அவனோடு இனி வாழ முடியாது என்று முடிவெடுத்தாள். மணப்பெண்ணும் அவளுடைய தந்தையும் அவன் மேல் போலீசில் புகார் கொடுத்தனர். 

 

எப்படி இருந்தாலும் இரண்டு தண்டனைகள் அவனுக்குக் கிடைக்கும் என்கிற நிலை இருந்தது. திருமணச் செலவு முழுவதையும் அவனிடமிருந்து பெற்றுக் கொண்டனர். தாலியைக் கழற்றி காவல் நிலையத்தில் எறிந்து விட்டுச் சென்றாள் மணப்பெண். திருமணத்தைப் பதிவு செய்ய பெண்கள் தவறக் கூடாது. திருமணத்தின் போதே பதிவு செய்ய வேண்டும் என்பதைக் கூறி உடனடியாக பதிவுத் திருமணமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பல ஏமாற்றங்களில் இருந்து அவர்கள் தப்பிக்கலாம். சட்டரீதியான பாதுகாப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.

 


 

Next Story

கணவனுக்குத் தெரியாமல் கர்ப்பத்தைக் கலைத்த மனைவி; கதறிய கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 54

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
advocate-santhakumaris-valakku-en-54

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

சரண் என்பவருடய வழக்கு இது. ஒரே பையன், பிஸினஸ் பார்க்கிறார். ஜாதக பொருத்தம் பார்த்து ஒரு பெண் அமைந்து, பெரியோர்களால் நிச்சயத் தேதி முடிவாகிறது. ஆனால், பெண்ணோ நிச்சயத்தில் அவ்வளவாக விருப்பம் காட்டாமல் இருக்கிறாள். ஒரு நெருக்கம் இல்லை. புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்கும்போதும் கூட சரியான ஒத்துழைப்பு இல்லை. ஒருவித வெறுமையாக இருக்கிறாள். திருமணம் பின்பு சரியாகி விடும் என்று சரண் நினைக்கிறார். முதலிரவிலும் தங்களுக்கு செய்திருந்த அலங்காரங்கள் எல்லாவற்றையும் மிகவும் கோபமாக தூக்கி வீசுகிறாள். இதெல்லாம் சரணுக்கு வேதனையாக இருக்கிறது. எவ்வளவு அன்பாக பேசியும் அவளிடம் சரியான பதிலில்லை. கணவன் மனைவி ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை சந்தேகித்து சரணுடைய அப்பா அவனை விசாரிக்கிறார். மனம் தாங்காமல் சரணும் சொல்லி விடுகிறார். அவர் பெண் வீட்டினருக்கும் சொல்லி பெண்ணின் தந்தை அவளிடம் விசாரிக்க அவள் ஏதோ சமாளித்து விடுகிறாள். 

தேனிலவுக்கு அந்த பெண் தன் தம்பி இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொள்ள அங்கேயே போகிறார்கள். அங்கும் தம்பியுடனே சுற்றுவது என்று கூட வருகிறான். இருவரும் அங்கே மனமில்லை என்றாலும் சேர்ந்து இருந்து விடுகிறார்கள். அதற்கு பின் சென்னையில் தனி வீடு பார்த்து போய் விடுகிறார்கள். அங்கே அவள் கர்ப்பமாகிறாள். சரண் மற்றும் அவரது பெற்றோருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அந்த பெண்ணிற்கு இந்த குழந்தை வேண்டாம் என்றும் ஒரு இரண்டு வருடம் நன்கு சேர்ந்து வாழ்ந்த பின்னர் பெற்று கொள்ளலாம் என்று அழிக்க நினைக்கிறாள். இது சரணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சரண் பெற்றோர் பார்க்க வந்திருந்த போதும் கூட அவர்களிடம் சரியாக முகம் குடுத்து பேசவில்லை. அவள் பின்னர் தன் அம்மா அப்பாவை பார்க்க வேண்டும் என சொல்லிவிட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விடுகிறாள். போனவள் பத்து நாட்கள் கழித்து வருகிறாள். டாக்டர் செக்கப் கேட்டதற்கு தன் குழந்தை நிற்கவில்லை என்று சொல்லி விடுகிறாள். 

அதில் ஆரம்பித்து இரு வீட்டிலும் புரிதல் இல்லாமல் போய் அடிக்கடி பிரச்சனை, தகராறு என்று ஆகிறது. இரண்டு மாதம் அப்படி போக, கடைசியில் அந்த பெண் சரணுடன் போய் வாழ மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். பெற்றவர்களும் சரணும் சேர்ந்து வாழ அறிவுரை சொல்லி, இனிமேல் புதிதாக சேர்ந்து வாழலாம் என்று பலவாறு பேசி அனுப்பி வைக்கிறார்கள். அவனுடன் வந்த பின்னர் தன் தோழிக்கு கல்யாணம் பெங்களூரில் நடக்கிறது. போய் பார்க்கப் போகிறேன் என்று நகையை லாக்கரில் இருந்து எடுக்கிறாள். மாமனார் வந்து பார்த்த போது அவரிடம் சொல்ல, அவர் எடுத்து போகும் நகையை குறித்து வைக்க சொல்கிறார். அவரிடம் நீங்கள் எனக்கு போட்ட வைர நெக்லஸ் ரொம்ப பிடித்தது மாமா. நான் என்ன என் நகை, உங்கள் நகை என்று பிரித்தா பார்க்கிறேன் என்று அன்பாக பேச அவரும் இறங்கி எது வேண்டுமோ எடுத்து செல்லுமாறு சொல்கிறார். ஆனால் இவளோ அவர்கள் நகையை வைத்து விட்டு தன் அம்மா வீட்டில் போட்ட நகையை எடுப்பது போல நடித்து  பையன் வீட்டு நகை எல்லாமே எடுத்து சென்று விடுகிறாள். அதன் பின்னர் திரும்பி இங்கே வரவே இல்லை. 

இரண்டு வருடம் மேல் ஆனது. அடுத்து சரண் குடும்பம் மேல் வரதட்சணை கொடுமை, மாமியார் கொடுமை, என்று எல்லா கேஸ் போட்டு, பெண்ணின் அப்பா சரணுக்கு கார் வாங்கிக்கொள்ள சொல்லி அன்பளிப்பாக கொடுத்த இருபது லட்சத்தையும் இவர்கள் வேண்டுமென்றே வாங்கி கொண்டு வீட்டை விட்டு தன்னை துரத்தி விட்டதாக வேறு புகார்கள். போலீஸ் கைது செய்யும் வரை வழக்கு ஆகிறது. எல்லாருக்கும் பெயில் வாங்கி, ஸ்டேஷனில் கையெழுத்து வாங்கி வழக்கு மேல் வழக்கு போட்டு இறுதியில் சரண் வெறுத்து போய் அவரே விவாகரத்து பதிவு செய்தார். அந்த பெண்ணிற்கும் விவாகரத்து தான் வேண்டும் என்றாலும் அவர்கள் மேல் போட்ட எல்லா வழக்கையும் வாபஸ் பெற வேண்டும் என்றால் தனக்கு ஐந்து கோடி பணம் வேண்டும் என்று கேட்டாள். மீடியேஷன் போட்டும் பலனில்லை. வழக்கை வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டிற்கு அனுப்பி அங்கு மீண்டும் மீடியேஷன் போட்டு பேசியதில் ஒரு கோடியே இருபது லட்சத்திற்கு ஒத்துக்கொண்டு மியூச்சுவல் கன்செண்ட் போட்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இப்பொழுது சரண் இரண்டாவது திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கிறார். அந்த பெண் தன் தோழியுடன் சேர்ந்து ஏதோ கடை வைத்திருக்கிறாள் என்று தெரிய வந்தது.

Next Story

விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ததால் பிரச்சனை; கதறிய அப்பாவி கணவன் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்: 53

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 advocate-santhakumaris-valakku-en-53

தான் சந்தித்த பல்வேறு வழக்குகள் குறித்தும் அதை நடத்திய விதம் குறித்தும் பிரபல வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அவசரமாக ஒரு நபர் ஒருநாள் என்னுடைய அலுவலகத்தில் வந்திருந்தார், அப்பாயின்மென்ட் இல்லாமல் பார்க்கமுடியாது என்பதால், நான் அனுமதிக்காமல் இருக்க, சிறிது நாள் கழித்து அப்பாயின்மென்ட் வாங்கியபின் நான் அவரை சந்தித்தேன். அவரும் மிக பதற்றமாக என்னிடம் பேசினார். தான் ஒரு விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தவர் என்றும், இப்போது அந்த பெண் தன்னை வீட்டினுள்ளே விடுவதில்லை என்றும் பதற்றமாக பேசினார். என்ன ஆனது என்று கேட்டபின் தான் சொல்ல ஆரம்பித்தார். 

அந்த பெண்ணை அவர் முதலில் ஒரு தெரிந்த விழாவில் சந்தித்ததாகவும், பிடித்திருந்ததால் விசாரித்ததில் அந்த பெண்ணிற்கு ஏற்கனவே கோர்ட்டில் விவாகரத்து கேஸ் போய்க்கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது. பின்னர் கேஸ் முடிந்தவுடன் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவளுக்கு முதல் கணவனால் வந்த குழந்தையையும் ஏற்று கொள்கிறார். திருமணம் ஆன பின்னர் இவர்களுக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இருவரையும் அவர் ஒன்றாக தான் வைத்து வளர்க்கிறார், ஆனால் மற்றவர்கள் சும்மா இல்லாது, அவர் தன்னுடைய குழந்தையை மட்டும் எப்படி கொஞ்சுகிறார் பார். தன் மகனை மட்டும் நன்றாக வளர்க்கிறார் என்று ஏற்றி விட, இவளுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி விடுகிறது.

இவர் வெளியில் சென்று சாதாரணமாக  நண்பர்கள் என்று சந்தித்து  வந்தாலும், உன் கணவனை நான் வேறொரு பார்ட்டியில் பார்த்தேன் என்றெல்லாம் அவளின் நண்பர்கள் கூற கூற இவளுக்கு தேவையில்லாத சந்தேகம் தானாக வருகிறது. வீட்டிற்கு வந்ததும் கணவனிடம் ஒழுங்காக பேசுவதில்லை, எது பேசினாலும் சரியாக பதிலளிப்பதில்லை. பார்ட்டி என்று சென்று வருவதை சொல்லிக் காட்ட, இவர் தனக்கு அது வெறும் பொழுதுபோக்கு தான் என்று சொல்லிவிட்டு, அடுத்தமுறை அவளையும் கூட்டி போவதாகச் சொல்கிறார். ஆனால் அவளை அழைத்துப் போக ஆபிசில் அதுவரை எந்த பார்டியும் நடக்கவில்லை. அதனை புரிந்துகொள்ளாமல் மேலும் கோவப்படுகிறாள்.

எல்லாரும் இல்லாததை சொல்ல சொல்ல, அந்த முதல் கணவனின் பதினாறு வயது மகன் அவரை வெறுக்கிறான். ஒருநாள் குடித்துவிட்டு வந்ததில், அந்த பதின்வயது பையன் மரியாதை இல்லாமல் பேச பிரச்சனை பெருசாக ஆகிறது. 

கையை ஓங்குவது என்று அவரை அடக்கும் அதிகாரம் எடுத்துக் கொள்கிறான். அவருக்கென்று அவருடைய காரும் கொடுக்காமல், வாங்கிக் கொள்வது, பணத்தை எண்ணி பார்ப்பது போன்ற வேலையை எல்லாம் செய்கிறான். எல்லை மீறி அடிப்பது வரை ஆகிறது. ஒருநாள் அந்த பையனே குடிக்க ஆரம்பித்து விடுகிறான். தந்தை தடுக்க போய், பாட்டிலாலே அடித்து விடுகிறான். சின்ன பையனையும் அடக்கி வைத்திருக்கிறார்கள். இவருக்கு வீட்டில் மரியாதை இல்லை என்று தெரிய வருகிறது. வீட்டில் பணம் வைப்பதை நிறுத்தி விடுகிறார். சாப்பாடு போடுவது, கவனிக்கிறது என்று கிடையாது. தகராறு ஆகி வெளியே வந்து அப்போது தான் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று என்னிடம் வந்தார். போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கச் சொல்ல, அங்கு கவனிக்காததால், கமிஷனருக்கு மெயில் அனுப்பினார். பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

காவலர்கள் வீட்டிற்கு சென்று விசாரிக்க, இதனால் மேலும் அந்த அம்மா, பையன் என்று இவரிடம் அதிகமாக தகராறு செய்ய, மீண்டும் என்னிடம் வந்து என்ன செய்வது என்று நின்றார். எனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியை வைத்து அவர்கள் தரப்பில் பேச வைக்க ஏற்பாடு செய்யச் சொல்ல, அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் முடிவானது. போய் பேசவைப்பது என்று வாரக்கணக்கு ஆனது. ஆனாலும் அந்த அம்மாவிற்கு இவருடன் வாழ விருப்பமே இல்லை என்று தெரிய வந்தது. சரி வாழப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடலாமே என்று பேச, நான் இவரை விட்டு வெளியே தெருவிலா நிற்க முடியும். எனக்கும், என் பையனுக்கும் செய்ய வேண்டிய செட்டில்மென்டை கொடுக்கச் சொல்லுங்கள் என்றாள். சட்டப்படி அந்த பையனுக்கு பதினெட்டு வயது ஆனதால், அவனுக்கு இவர் செட்டில் செய்யவேண்டிய அவசியம் இல்லை. அவனே தான் வேலைக்கு போய் பார்த்து கொள்ளவேண்டும்.  பையனுக்கு நான் லீகல் கார்டியனாக இருக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

எனக்கு நிரந்தர ஜீவனாம்சம் எழுபது லட்சம் வேண்டும் என்று கேட்டாள். அவ்வளவு பணம் முடியாது என்று முழுமனதாக இவர் நிராகரிக்க கடைசியாக முப்பது லட்சம் வாங்கிக்கொள்ள ஒத்துக்கொள்கிறாள். அவரும்  பையனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டு, எப்போது வேண்டுமோ அவள் வந்து பார்க்கலாம் என்றும் தான் அனுமதிப்பதாகவும் சொல்கிறார். ஆனால் மாறாக, தன்னுடைய பிளாட்டிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும் என்றார். முடிந்தவரை மறுத்தாலும், இறுதியாக ஒத்துக்கொண்டு செங்கல்பட்டு கோர்ட்டில் முதல் தவணை செட்டில்மென்ட் குடுத்து, இருவர் பேரில் இருந்த வீட்டின் ஒரு பாதி தொகையை இவர் பெறுமாறு பெட்டிஷன் போட்டு, எல்லாம் தொகை குடுத்து முடிக்க ஆறு மாத காலம்  ஆனது. டிவோர்ஸ் ஆன அன்று மாலையே வீட்டின் சாவியை கோர்ட்டில் வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவு சொல்லப்பட்டு கடைசியாக வழக்கு முடிந்தது.