Skip to main content

"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! தாராவி கதைகள் #7

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

ஒரு காலத்தில் 45 பள்ளிகளாக இருந்த தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது 20 பள்ளிகளாக குறைந்துவிட்டன. தாராவியில் இருந்த 2 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. பம்பாயில் வசிக்கும் நம் குழந்தைகள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டுமென்று நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவுதான் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு காரணம். தாராவி என்பது தமிழர்களின் கோட்டை, தாராவி என்பது இன்னொரு தமிழ்நாடு என்ற பிம்பம் ஏறக்குறைய 90 விழுக்காடு நொறுங்கிவிட்டது. 

 

80களில் ஒலிம்பிக் நேரத்தில் கலர் டிவியை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. அதற்கு முன்பு தாராவி பகுதியில் கலர் டிவி கிடையாது. சில குடிசைகளில் 60 எம்.எம் வெள்ளைத் திரையில் சினிமா ஓட்டுவார்கள். அதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்குதான் பார்க்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இதற்கான வசதி இருந்தது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ரௌடியாகத்தான் இருப்பார்கள். 3 மணிக்கு ஒரு சினிமா, 6 மணிக்கு ஒரு சினிமா, இரவு 9 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இதில், 9 மணி சினிமா என்பது ப்ளூ ஃபிலிம்மாக இருக்கும். இதில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது மாதிரியான கலாச்சார சீர்கேடு நிகழ்வுகள் நடப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் போலீசாருக்கும் ஒரு பங்கு செல்லும். சில நேரங்களில் மேலதிகாரி அழுத்தம் காரணமாக ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் ரெய்டு வரும் விஷயத்தை முன்கூட்டியே இவர்களிடம் தெரிவித்துவிடுவார்கள். 

 

50 பேர் கூடி ப்ளூ ஃபிலிம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதனால் தாராவி பகுதிக்குள் நிறைய வன்முறைகள் நடந்தன. ஒருகட்டத்தில் இதை இழுத்து மூட வேண்டுமென பெண்களே போராட ஆரம்பித்துவிட்டனர். அதுபோக தாராவி தமிழர்களுக்குப் பெரிய சிக்கல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் இருந்தது. தமிழ்நாட்டில் ஏதாவது கொலை செய்துவிட்டு தாராவி பகுதிக்குள் வந்து பதுங்கிக்கொள்வார்கள். அப்படி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் இருந்தது. இதனால், அடிக்கடி தாராவி பகுதிக்குள் போலீசார் வந்துசென்றனர். படம் பார்ப்பது, ரம்மி விளையாடுவது மாதிரியான பொழுதுபோக்குகள் மட்டுமே அங்கிருந்த மக்களுக்கு இருந்தன.

 

அதைத் தவிர்த்து, இலக்கியக் கூட்ட விழா நடந்தாலும் பெரும்பாலான மக்கள் அதில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கக் கூடிய ஆட்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் வெறும் 20, 30 ஆட்கள் மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் வந்து நேரடியாகக் கலந்துகொள்வார்கள். அதுபோக அரசியல் ரீதியான பட்டிமன்றங்கள் நடைபெறும். திமுகவினர் வந்தால் ஜெயலலிதா அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா என தலைப்பு வைத்து நடத்துவார்கள். அதுவே அதிமுகவினர் வந்தால் கருணாநிதி அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா எனத் தலைப்பு வைத்து நடத்துவார்கள். எங்களுக்கு இது சரியாகப்படவில்லை. ஒருமுறை இதுமாதிரியான பட்டிமன்ற நிகழ்வுக்கு வந்தவர்களிடம் அரசியல் பேச வேண்டாம்; அதற்குப் பதிலாக திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுங்கள் எனக் கூறினோம். முதலில் அவர்கள் தயங்கினாலும் பிறகு சம்மதித்துவிட்டனர்.

 

அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, 'உண்மையோ பொய்யோ இதுவரை ஒரு தலைவனை தூற்றியோ புகழ்ந்தோதான் பேசியிருக்கிறோம். முதல்முறையாக திருக்குறள் பற்றி பேசுகிறோம் என விழாவிற்கு வந்த மூவருமே கண்கலங்கிவிட்டனர். அரசியல் பட்டிமன்றங்கள்தான் இப்படி ஆபாசமாக நடக்குமேயொழிய, இலக்கிய பட்டிமன்றங்கள் மிகக் கண்ணியமான முறையில் நடக்கும். சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்ணகிக்கும் மாதவிக்கும் புகழ் பரப்பக்கூடிய அளவிலேயே விவாதங்கள் நடைபெறும். அந்த மாதிரியான தலைப்புகள்தான் தேர்ந்தெடுக்கப்படும். தற்போது இலக்கியக் கூட்டங்கள் எதுவும் அங்கு நடப்பதில்லை. 

 

அன்று பெரிய தலைவர்களாக இருந்த ஆட்களின் பெயர்களைக்கூட இன்றைய ஆட்கள் மறந்துவிட்டனர். தாராவி பற்றி தமிழ் சினிமாவில் கூறியதில் எதுவும் உண்மையில்லை. 'நாயகன்', 'காலா' படங்களில் காட்டியதுபோல எந்தச் சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை. தற்போது வசிக்கும் இடத்தை விற்றுவிட்டு 30 லட்சம், 40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு புறநகர் பகுதியில் சென்று வசதியாக வாழலாம் என்று நினைத்துதான் தாராவியில் இருந்து தமிழர்கள் வெளியேறத்தொடங்கினார்கள். மராட்டிய அரசோ, மாநகராட்சியோ நம் மக்களைத் துரத்தவில்லை. சினிமாவிற்காகத் தமிழர்கள் அவர்களுக்கு கீழே அடிமையாக இருந்ததுபோல காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6 
 

 

 

Next Story

"தமிழர்கள் கடைசிவரை கூலித்தொழிலாளியாக இருந்ததற்கு இதுதான் காரணம்..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! #8

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவி தமிழர்கள் பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவிக்கு மனிதநேயமிக்க முகம் ஒன்று உள்ளது. அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் யார்யார் வீட்டில் சமையல் நடக்கிறது; அடுப்பு எரிகிறது என்பதெல்லாம் தெரிந்துவிடும். தொடர்ந்து இரு நாட்கள் ஒரு வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து காரணம் கேட்பார்கள். கையில் பணமில்லை என்பதற்காக ஒருவர் சமைக்காமல் பட்டினியாகக் கிடக்கிறார் என்றால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. வா இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்' என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்தப் பழக்கம் அங்கு வசித்த எல்லா மொழி பேசும் மக்களிடமும் இருந்தது. தாராவி என்ற பெயர் எதற்காக வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து நிறையத் தேடிப்பார்த்தோம். எந்த இடத்திலும் அதற்கான சரியான பதில் இல்லை. மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு மும்பாதேவி கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. அது மீனவ மக்களுக்கான கோவில். மும்பா என்பது ஆங்கிலேயர்களால் பம்பா என உச்சரிக்கப்பட்டு பின்பு பம்பாய் என்றானதாகக் கூறுவார்கள். பின்பு, அது மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

விஜயகாந்த், கமல், ரஜினி என தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த அனைவருக்கும் தாராவியில் ரசிகர்மன்றம் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். பல ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நடிகர் படத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை அங்கு இல்லை. அனைவருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் பிற இனத்தவர்கள் நம்மை இந்த இடத்திலிருந்து விரட்டிவிடுவார்களோ என்ற எண்ணம்தான். மும்பையில் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருந்தபோது தாராவியில் தமிழர்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவரிடம் முறையிட்டதற்கு, 'பிழைக்க வந்த இடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே' என்றார். இது மாதிரியான விஷயங்கள் எல்லாம்தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 

 

மராட்டியப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் போலவேதான் இருப்பார்கள். அவர்கள் நம் பெண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. மராட்டியக் கிராமப்புறங்களுக்குள் சென்றால் நம்முடைய அம்மா, அத்தையைப் பார்ப்பதுபோல இருக்கும். அவர்களுடைய விருந்தோம்பல் பண்பும் சிறப்பாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில், தாராவி மக்கள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் அங்கிருந்தவர்கள் மத்தியில் இருந்தது. நான் அங்கிருந்த காலகட்டத்திலேயே அந்த எண்ணத்தை உடைக்க இலக்கியவாதிகள், இளைஞர்கள் எனப் பலர் வேலை செய்தனர். உண்மையில் தாராவிக்காரர்கள் தவறானவர்கள் அல்ல; கொஞ்சம் கோபக்காரர்கள். ஒருமுறை ஓனர் திட்டினார் என்பதற்காக நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, நீங்களே ஒட்டிட்டுப்போங்கடா என நம்முடைய ஆட்கள் எட்டு பேர் வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். தாராவி தமிழர்களை வேலைக்கு வைத்தால் இந்த மாதிரியான முரட்டுத்தனமான செயல்களைச் செய்வார்கள் என்ற பயம் அங்கிருந்த முதலாளிகளுக்கு இருந்தாலும் இதுவரை எந்த முதலாளியும் தாராவி தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறியதில்லை. 

 

அங்கிருந்த சாதாரண மக்களுக்கு மராட்டிய அரசோ காவல்துறையோ ஒருபோதும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தாராவிக்குள் ஒளிந்திருக்கிறார் என்றால் போலீஸ் வருவார்கள். மற்றபடி வேறெந்த காரணத்திற்காகவும் போலீஸ் உள்ளே வரமாட்டார்கள். இன்றைக்கு வட இந்தியர்களைப் பார்த்து நாம் கூறுகிறோமே அதுபோல இந்த தமிழனுங்க வந்துதான் நமக்கெல்லாம் வேலை கிடைக்காம போயிருச்சு என்று சில மராட்டியர்கள் பேசுவார்கள். இது மாதிரியான பேச்சு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல்வாதிகளிடமோ அதிகாரிகளிடமோ இருக்காது. கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து முன்னரே கைது செய்து போலீஸ் நிலையத்தில் எங்களை இருக்க வைப்பார்கள். மறுநாள் வெளியே விட்டுவிடுவார்கள். எந்தவொரு போலீஸ் அதிகாரியும் நீங்கள் எதுக்கு போராட்டம் செய்றீங்க என்றெல்லாம் எங்களைப் பார்த்துக் கேட்டதில்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள். 

 

குஜராத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் வருகிறான் என்றால் அவன் நண்பர்கள் அனைவரும் நகைக்கடை வைப்பார்கள். இங்கு தமிழ்நாட்டில் இருந்து நாடார் ஒருவர் போகிறார் என்றால் அங்கு சென்று மளிகைக்கடைதான் வைப்பார். தாராவி தமிழர்களோ மாடுங்கா தமிழர்களோ தொழில்ரீதியாக அங்கு செல்லவில்லை. மாதச்சம்பளத்தை நோக்கித்தான் ஆரம்பத்திலிருந்தே சென்றுகொண்டிருந்தார். குஜராத்தியர்கள், பார்சியினரெல்லாம் தொழில் செய்யவேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களிடம் கூலிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. தாராவிக்கு சென்ற தமிழர்களின் அதிகபட்ச ஆசை டாக்சி, ஆட்டோ வாங்கவேண்டும் என்பதாகவே இருந்தது. இதுதான் தமிழர்கள் அங்கு பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

 

 

Next Story

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6 

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்ற முத்திரை தமிழர்கள் மீது விழுந்தது எப்படி என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வரதா பாய் தலைமையில் தாராவியில் ஊர்வலம் சென்றது குறித்து கடந்த பகுதியில் கூறியிருந்தேன். அப்படிச் செல்லும்போது வழிநெடுக இருந்த கடைகளையும் மாடுங்கா ஸ்டேஷனையும் அடித்து நொறுக்கியது குறித்தும் கூறியிருந்தேன். ஆசாத் மைதானத்திற்குச் செல்வதற்காக வரதா பாய் தனி ரயிலையே புக்கிங் செய்திருந்தார். அந்த ரயிலில் ஏறுவதற்காக மாடுங்கா ஸ்டேஷனில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அங்கு திரண்டிருந்த ஆட்களின் எண்ணிக்கையைப் பார்த்து முதலில் வந்த சில ரயில்கள் நிற்காமல் சென்றுவிட்டன. சிறிது நேரம் கழித்து வரதா பாய் புக் செய்த ரயில் வந்தது. அதில் நம் ஆட்கள் ஏறிக்கொண்டார்கள். ஆயிரக்கணக்கானோர் ரயிலில் ஏறாமல் வெளியே நின்றபோதிலும், ரயிலுக்குள் கடுமையான நெரிசல். இவ்வளவு ஆட்களை ஏற்றிக்கொண்டு ரயில் சென்றுகொண்டிருக்கையில், வழியிலேயே ரயிலை நிறுத்திவிடுகின்றனர். வழக்கமாக அந்த இடத்தில் ரயில் நிறுத்தம் கிடையாது. என்னவென்று எட்டிப்பார்த்தால், 500 போலீஸ் அதிகாரிகள் கையில் லத்தியுடன் நின்றுகொண்டிருந்தனர். வழியில் இருந்த கடைகளை உடைத்த குற்றத்திற்காக அங்கிருந்தவர்களை நோக்கி லத்தி சார்ஜ் செய்ய ஆரம்பித்தனர். ரயிலில் இருந்த ஆட்களை இழுத்துபோட்டு போலீசார் அடிக்க ஆரம்பிக்க, அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். நல்லவேளை துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று நினைத்து நாங்கள் ஆறுதல்பட்டுக்கொண்டோம். 10க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிகழ்விற்குப் பிறகு, வரதா பாய் மீது தாராவி தமிழர்களுக்குப் பெரிய அளவில் வெறுப்பு வந்துவிட்டது. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தலைவராக வேண்டும் என வரதா பாய் நினைத்தார். அது கடைசிவரை நடக்காமல் போனதற்கு இந்தச் சம்பவம்தான் முக்கிய காரணம். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான், தாராவி தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று அங்கிருந்த பிற மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.  

 

தாராவி தமிழர்கள் பெயரைச் சொல்லி பலபேர் தலைவராக நினைத்தார்கள். தமிழர் பேரவை ஆம்புலன்ஸ் என்று அங்கு ஓர் ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது, அங்கு மிகவும் பிரபலமான ஆம்புலன்ஸ். ஒருமுறை குஜராத்தில் இருந்து பேரல் பேரலாக அதில் சாராயம் கடத்தி போலீஸில் மாட்டிக்கொண்டார்கள். அத்தோடு அந்த ஆம்புலன்ஸுக்கு இருந்த நல்ல பெயரும் அடிபட்டுப்போனது. அதுபோக நிறைய சிறிய தலைவர்கள் இருந்தனர். அதில், மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆரோக்கியமான சிந்தனை உடையவர்கள் மட்டுமே மக்களின் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். மராட்டிய மாநில தமிழ்  கவிஞர் மன்றம், மராட்டிய மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம், திராவிடம், கம்யூனிசம் சார்ந்த இலக்கிய மன்றம் என நிறைய இலக்கிய அமைப்புகள் இருந்தன. ஆனால், உழைக்கும் மக்கள் இதில் பெருமளவில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை.

 

வாரம் முழுக்க உழைக்கும் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும்தான் விடுமுறை இருக்கும். அன்று வீட்டில் கறி சமைத்து ரம்மி விளையாடி நன்றாக ஓய்வவெடுக்கவே விரும்பினார்கள். அதுபோக மெண்டிகோட் என ஒரு சீட்டு விளையாட்டு அங்கு பிரபலமாக இருந்தது. அதில் விளையாடியும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றாலே வீட்டில் மனைவி மக்களுடன் இருக்க வேண்டும் என்பதே தாராவி தமிழர்களின் எண்ணமாக இருந்தது. தமிழ்நாட்டில்தான் நாம் பெண் விடுதலை அது இது என்று பேசிக்கொண்டிருக்கிறோம். தாராவியில் இருந்த ஆண்கள் எல்லாவிதமான வீட்டு வேலைகளிலும் பெண்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். 

 

ஒருமுறை இலக்கிய கூட்டத்திற்கு வந்த வரதா பாய், ‘ஏன் பள்ளிகளில் வாடகை கொடுத்து இது மாதிரியான கூட்டங்களை நடத்துகிறீர்கள்... தனியாக கட்டடம் கட்டி அங்கு இந்தக் கூட்டங்களை நடத்தலாமே’ என்றார். ‘ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் செய்கிறேன்’ என்றும் கூறினார். ஆனால், அந்த இலக்கிய அமைப்பினர் அதை மறுத்துவிட்டனர். இன்று அவரிடம் உதவி வாங்கிவிட்டால் அவர் யாரையாவது கூறினால் அவர்களைப் பேசவைக்கவேண்டும்... அவரிடம் கைகட்டி நிற்க வேண்டும்... இதுவெல்லாம் தேவையா என நினைத்து முன்கூட்டியே அதை மறுத்துவிட்டனர். அங்கிருந்தவர்கள் இது மாதிரியான விஷயங்களில் மிகவும் கவனமாக இருந்தார்கள்.