Skip to main content

சாதிச்சங்கங்கள் பல இருந்தாலும், மூட்டிவிடும் வேலையை யாரும் செய்யவில்லை! தாராவி கதைகள் #2

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

அந்தக்காலத்தில் நம் மக்களை தமிழர்கள் என்று சொல்லமாட்டார்கள். மதராஸி என்றுதான் அழைப்பார்கள். தாராவியில் தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர் என்று யாரும் கிடையாது. திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என நிறைய அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். இங்குள்ள அரசியல் தலைவர்கள்போல அவர்கள் பெரிய அளவில் ஆதாயம் பெறவழியில்லை. தமிழ்நாட்டில் வட்டச்செயலாளராக இருப்பவர்கூட கார் வைத்திருக்கிறார். அங்கு மாநில அளவில் பொறுப்பில் உள்ளவரால்கூட கார் வாங்கமுடியாது. தாராவி பகுதியில் தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர்கள்தான் ஓடிவந்து நிற்பார்கள். மொழி காரணமாக அங்கு பெரிய அளவில் பிரச்சனை வெடித்தபோது தமிழர்களைத் தலைமையேற்று நடத்தியவர் பொன்னையா நாடார் என்ற ஒருவர்தான். அவர் அங்கு மளிகைக்கடையும் ரேஷன் கடையும் நடத்திவந்தார். புகை, மது உட்பட எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது. சாராயம் விற்பவர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காது. மளிகைக்கடையில் இருந்து கிடைக்கும் லாபத்தின் மூலம் கண்ணியமாக வாழவேண்டுமென்று நினைக்கக்கூடியவர். எனக்குத் தெரிந்தவரையில் ஒரு ஜாதித்தலைவனாக இருந்தும் சுயஒழுக்கமிக்கவராக இருந்தவர் பொன்னையா நாடார் மட்டும்தான். 

 

ஒன்றல்ல, இரண்டல்ல... பல சாதிச்சங்கங்கள் இருந்தன. ஆதிதிராவிடர்களுக்காக ஆதிதிராவிட மகாஜன சங்கம், நாடார்களுக்காக தட்சணமாற நாடார் சங்கம், தேவர்களுக்காக ஒரு சங்கம், தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்காக ஒரு சாதி அமைப்பு, வேளாளர்களுக்காக ஒரு சாதி அமைப்பு என ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு சங்கம் இருந்தது. அங்கு பல சாதி சங்கங்கள் இருந்தாலும் ஒருவருக்குள் ஒருவர் சண்டை மூட்டிவிடும் வேலையைச் செய்யவில்லை. எல்லாச் சாதி சங்கங்களும் தங்கள் சாதியினரின் கல்வி, தொழில்வாய்ப்புகளுக்கு உதவி புரிந்தன. அதேபோல ஏதாவது தீய செயல்களில் தங்கள் சாதியினர் ஈடுபட்டாலும் உடனே அழைத்து எச்சரிப்பார்கள். இத்தனை சாதி மற்றும் சங்கங்கள் இருந்தாலும் அவர்களுக்குள் சண்டை வந்ததேயில்லை. ஒரேயொருமுறை ஆதிதிராவிடர்களுக்கும் நாடார்களுக்கும் இடையே சண்டை மூள்வதற்கான சூழல் ஏற்பட்டது. இந்த இரு சாதிகளைச் சேர்ந்த இரு சாராய வியாபாரிகளின் தனிப்பட்ட பகை சாதிய மோதலாக வெடிக்கவிருந்தது. அதற்குள் இரு சாதி சங்கங்களும் தலையிட்டு, 'இவனுக சாராயம் விக்க எதுக்கு சாதியை இழுக்குறானுக' என முடிவெடுத்து இருவரையும் அந்தந்த சாதி சங்கங்களில் இருந்து நீக்கி, அந்தப் பிரச்சனையைச் சுமூகமாக முடித்தனர். 

 

dharavi

 

ஒரு கட்டத்தில் மொழி ரீதியான பிரச்சனை அங்கு வெடிக்க ஆரம்பிக்கிறது. தமிழர்கள் இருவரை மராட்டியர்கள் வெட்டிக்கொலை செய்துவிடுகின்றனர். தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நாம் அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என முடிவெடுத்த பொன்னையா நாடார், அனைத்து சாதி சங்கத்தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசி ஓர் அமைப்பை உருவாக்குகிறார். 'இனி ஒரு தமிழனின் உயிர்போனால் பத்து பேரின் உயிரை எடுக்க நான் தயாராக இருக்கிறேன்' என பகிரங்கமாகப் பொன்னையா நாடார் அறிவித்தார். சிவசேனா கட்சியினர் தாராவி பகுதியில் ஆயிரம் பேருடன் திரளான ஊர்வலம் ஒன்றை நடத்தி அந்த இடத்தைவிட்டு தமிழர்களே வெளியேற்றும்படி அவர்களுக்குப் பயங்காட்ட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்காக அனுமதிகோரி கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

 

ஆனால், சிவசேனா கட்சியினர் தாராவி பகுதியில் எந்தக் காரணங்கொண்டும் நுழையக்கூடாது எனக் கூறி கமிஷனர் அனுமதி மறுத்துவிடுகிறார். அவர்கள் உழைத்துச் சம்பாதித்து ஓர் ஓரத்தில் வாழ்கிறார்கள், அவர்களை ஏன் தொல்லை செய்கிறீர்கள் எனக்  கமிஷனர் கேட்டுள்ளார். இதையெல்லாம் காதில் வாங்காத சிவசேனா கட்சியினர் அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது... ஊர்வலம் நடத்த அனுமதி வேண்டும்... ஊர்வலத்திற்குப் பாதுகாப்புக் கொடுக்க எத்தனை வாகனம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். உடனே அந்த கமிஷனர், வாகனம் எல்லாம் அனுப்பமுடியாது; வேண்டுமென்றால் 50 ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம். எப்படியும் நீங்கள் அவர்கள் கடையை உடைக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு இருக்கிற கோபத்திற்கு உங்கள் கை, கால்களை வெட்டி எறிய ஆரம்பித்துவிடுவார்கள் எனக் கூறியுள்ளார். நீங்கள் ஊர்வலம் நடத்துங்கள்; நாங்கள் ஆம்புலன்ஸ் அனுப்புகிறோம் எனக் கமிஷனர் கூறியவுடன் ஊர்வலத்தை ரத்துசெய்துவிட்டார்கள். 

 

அந்த சமயத்தில் பாந்த்ரா, மாடுங்கா பகுதிகளில் யாராவது வேட்டி கட்டியிருப்பதைப் பார்த்தால் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அந்த சமயத்தில் மராட்டிய கவர்னராக இருந்த சி.சுப்ரமணியம் என்ற தமிழரிடம் பொன்னையா நாடார் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறித்து  முறையிட்டுள்ளனர். அவர், 'பொழைக்கத்தான வந்திருக்கீங்க... வாலச்சுருட்டிக்கிட்டு இருங்க' எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த தலைவர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியோடு கிளம்பிவந்துவிட்டனர்.           

 

தாராவி பகுதியில் வசித்த சில தமிழர்கள் அதிகாரி அளவிலான நல்ல பொறுப்பில் இருந்தார்கள். அவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் தாராவியில் தான் வசிப்பதாகக் கட்டிக்கொள்ள மாட்டார்கள். தங்களை மற்றவர்கள் இழிவாகப் பார்ப்பார்கள் என எண்ணி வேறு பகுதிகளில் வசிப்பதாக மாற்றிக்கூறுவார்கள். ஆனால், முதல் மொழிக்கலவரத்திற்கு பிறகு நாம் அனைவரும் தமிழர்கள் என்ற எண்ணம் அவர்களுக்கும் வர ஆரம்பித்தது. அதன் பிறகு, நான் தாராவி தமிழன் எனப் பெருமையாகக் கூறிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

 

சில நேரங்களில் தமிழ்நாட்டில் வசிக்கிற தமிழர்களாலும் தாராவியில் வசித்த தமிழர்களுக்குச் சிக்கல் ஏற்படும். தமிழ்நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு தாராவியில் வந்து ஒளிந்துகொள்வார்கள். இதனால் அந்தப் பகுதிக்குள் அடிக்கடி போலீஸ் வரநேர்ந்தது. தாராவி பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு பணிமாறுதல் பெற்றுவருவதற்காக அந்தக்காலத்திலேயே லட்சக்கணக்கில் செலவழிப்பார்கள்.  சாராயக்கடை, மடுக்கா சூதாட்டம் எனப் போலீஸாருக்கு மறைமுக வருமானம் தரக்கூடிய விஷயங்கள் அங்கு நிறைய இருந்தன. இதனால் தாராவி மக்கள் என்றாலே குற்றவாளிகளாக இருப்பார்கள் என முத்திரை விழுந்தது.       

 

தொடரும்...
 

 

 

Next Story

"தமிழர்கள் கடைசிவரை கூலித்தொழிலாளியாக இருந்ததற்கு இதுதான் காரணம்..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! #8

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவி தமிழர்கள் பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கான காரணம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

தாராவிக்கு மனிதநேயமிக்க முகம் ஒன்று உள்ளது. அங்கு வீடுகள் நெருக்கமாக இருப்பதால் யார்யார் வீட்டில் சமையல் நடக்கிறது; அடுப்பு எரிகிறது என்பதெல்லாம் தெரிந்துவிடும். தொடர்ந்து இரு நாட்கள் ஒரு வீட்டில் அடுப்பு எரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து காரணம் கேட்பார்கள். கையில் பணமில்லை என்பதற்காக ஒருவர் சமைக்காமல் பட்டினியாகக் கிடக்கிறார் என்றால் மற்றவர்கள் கோபப்படுவார்கள். 'இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே.. வா இருக்கிறதை பகிர்ந்து சாப்பிடலாம்' என்று கூறி அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். இந்தப் பழக்கம் அங்கு வசித்த எல்லா மொழி பேசும் மக்களிடமும் இருந்தது. தாராவி என்ற பெயர் எதற்காக வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்து நிறையத் தேடிப்பார்த்தோம். எந்த இடத்திலும் அதற்கான சரியான பதில் இல்லை. மும்பை என்ற பெயர் வந்ததற்குக் காரணம் அங்கு மும்பாதேவி கோவில் என்று ஒரு கோவில் இருந்தது. அது மீனவ மக்களுக்கான கோவில். மும்பா என்பது ஆங்கிலேயர்களால் பம்பா என உச்சரிக்கப்பட்டு பின்பு பம்பாய் என்றானதாகக் கூறுவார்கள். பின்பு, அது மும்பை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

விஜயகாந்த், கமல், ரஜினி என தமிழ்நாட்டில் மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த அனைவருக்கும் தாராவியில் ரசிகர்மன்றம் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும். பல ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் இந்த நடிகர் படத்தை மட்டும்தான் பார்க்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை அங்கு இல்லை. அனைவருமே ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். சாதி, மதம் கடந்து அனைவரும் தமிழர்களாக ஒற்றுமையாக இருந்ததற்கு முக்கிய காரணம் பிற இனத்தவர்கள் நம்மை இந்த இடத்திலிருந்து விரட்டிவிடுவார்களோ என்ற எண்ணம்தான். மும்பையில் ஆளுநராகத் தமிழர் ஒருவர் இருந்தபோது தாராவியில் தமிழர்களுக்கு நேர்ந்த பிரச்சனை குறித்து அவரிடம் முறையிட்டதற்கு, 'பிழைக்க வந்த இடத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதானே' என்றார். இது மாதிரியான விஷயங்கள் எல்லாம்தான் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. 

 

மராட்டியப் பெண்களும் தமிழ்ப்பெண்கள் போலவேதான் இருப்பார்கள். அவர்கள் நம் பெண்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல. மராட்டியக் கிராமப்புறங்களுக்குள் சென்றால் நம்முடைய அம்மா, அத்தையைப் பார்ப்பதுபோல இருக்கும். அவர்களுடைய விருந்தோம்பல் பண்பும் சிறப்பாக இருக்கும். ஆரம்பக்கட்டத்தில், தாராவி மக்கள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணம் அங்கிருந்தவர்கள் மத்தியில் இருந்தது. நான் அங்கிருந்த காலகட்டத்திலேயே அந்த எண்ணத்தை உடைக்க இலக்கியவாதிகள், இளைஞர்கள் எனப் பலர் வேலை செய்தனர். உண்மையில் தாராவிக்காரர்கள் தவறானவர்கள் அல்ல; கொஞ்சம் கோபக்காரர்கள். ஒருமுறை ஓனர் திட்டினார் என்பதற்காக நடு ரோட்டிலேயே வண்டியை நிறுத்திவிட்டு, நீங்களே ஒட்டிட்டுப்போங்கடா என நம்முடைய ஆட்கள் எட்டு பேர் வேலையை விட்டுவிட்டு வந்தார்கள். தாராவி தமிழர்களை வேலைக்கு வைத்தால் இந்த மாதிரியான முரட்டுத்தனமான செயல்களைச் செய்வார்கள் என்ற பயம் அங்கிருந்த முதலாளிகளுக்கு இருந்தாலும் இதுவரை எந்த முதலாளியும் தாராவி தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறியதில்லை. 

 

அங்கிருந்த சாதாரண மக்களுக்கு மராட்டிய அரசோ காவல்துறையோ ஒருபோதும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒருவர் தாராவிக்குள் ஒளிந்திருக்கிறார் என்றால் போலீஸ் வருவார்கள். மற்றபடி வேறெந்த காரணத்திற்காகவும் போலீஸ் உள்ளே வரமாட்டார்கள். இன்றைக்கு வட இந்தியர்களைப் பார்த்து நாம் கூறுகிறோமே அதுபோல இந்த தமிழனுங்க வந்துதான் நமக்கெல்லாம் வேலை கிடைக்காம போயிருச்சு என்று சில மராட்டியர்கள் பேசுவார்கள். இது மாதிரியான பேச்சு சாதாரண மக்கள் மத்தியில் இருந்தாலும் அரசியல்வாதிகளிடமோ அதிகாரிகளிடமோ இருக்காது. கம்யூனிஸ்ட் போராட்டங்களில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து முன்னரே கைது செய்து போலீஸ் நிலையத்தில் எங்களை இருக்க வைப்பார்கள். மறுநாள் வெளியே விட்டுவிடுவார்கள். எந்தவொரு போலீஸ் அதிகாரியும் நீங்கள் எதுக்கு போராட்டம் செய்றீங்க என்றெல்லாம் எங்களைப் பார்த்துக் கேட்டதில்லை. சட்டப்படி என்ன செய்யவேண்டுமோ அதை மட்டுமே அவர்கள் செய்வார்கள். 

 

குஜராத்தில் இருந்து ஒரு தொழிலதிபர் வருகிறான் என்றால் அவன் நண்பர்கள் அனைவரும் நகைக்கடை வைப்பார்கள். இங்கு தமிழ்நாட்டில் இருந்து நாடார் ஒருவர் போகிறார் என்றால் அங்கு சென்று மளிகைக்கடைதான் வைப்பார். தாராவி தமிழர்களோ மாடுங்கா தமிழர்களோ தொழில்ரீதியாக அங்கு செல்லவில்லை. மாதச்சம்பளத்தை நோக்கித்தான் ஆரம்பத்திலிருந்தே சென்றுகொண்டிருந்தார். குஜராத்தியர்கள், பார்சியினரெல்லாம் தொழில் செய்யவேண்டும் என்ற முடிவோடுதான் அங்கு வந்தார்கள். ஆனால், பெரும்பாலான தமிழர்களிடம் கூலிக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது. தாராவிக்கு சென்ற தமிழர்களின் அதிகபட்ச ஆசை டாக்சி, ஆட்டோ வாங்கவேண்டும் என்பதாகவே இருந்தது. இதுதான் தமிழர்கள் அங்கு பெரிய தொழிலதிபர்களாக உருவாக முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

 

 

Next Story

"தாராவி பற்றி தமிழ் சினிமா கூறுவது உண்மையல்ல..." ஆறாவயல் பெரியய்யா கூறும் தாராவி கதைகள்! தாராவி கதைகள் #7

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

aaravayal periyaiya

 

எழுத்தாளரும் மூத்தப் பத்திரிகையாளருமான ஆறாவயல் பெரியய்யா, தாராவியில் தான் வசித்த நாட்களின் நினைவுகள் குறித்தும், தாராவி தமிழர்களின் வாழ்க்கைமுறை குறித்தும் 'தாராவி கதைகள்' என்ற தொடர் வாயிலாக நம்மோடு பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தாராவியின் தற்போதைய நிலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

ஒரு காலத்தில் 45 பள்ளிகளாக இருந்த தமிழ்வழிப் பள்ளிகள் தற்போது 20 பள்ளிகளாக குறைந்துவிட்டன. தாராவியில் இருந்த 2 பள்ளிகள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. பம்பாயில் வசிக்கும் நம் குழந்தைகள் எதற்குத் தமிழ் படிக்க வேண்டுமென்று நம் ஆட்கள் நினைக்க ஆரம்பித்ததன் விளைவுதான் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதற்கு காரணம். தாராவி என்பது தமிழர்களின் கோட்டை, தாராவி என்பது இன்னொரு தமிழ்நாடு என்ற பிம்பம் ஏறக்குறைய 90 விழுக்காடு நொறுங்கிவிட்டது. 

 

80களில் ஒலிம்பிக் நேரத்தில் கலர் டிவியை இலவசமாக இறக்குமதி செய்ய அனுமதி இருந்தது. அதற்கு முன்பு தாராவி பகுதியில் கலர் டிவி கிடையாது. சில குடிசைகளில் 60 எம்.எம் வெள்ளைத் திரையில் சினிமா ஓட்டுவார்கள். அதற்கு 2 ரூபாய், 3 ரூபாய் எனக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். சினிமா பார்க்க வேண்டுமென்றால் அங்குதான் பார்க்க வேண்டும். 10க்கும் மேற்பட்ட குடிசைகளில் இதற்கான வசதி இருந்தது. இதை நடத்துபவர்கள் பெரும்பாலும் ஏதாவது ரௌடியாகத்தான் இருப்பார்கள். 3 மணிக்கு ஒரு சினிமா, 6 மணிக்கு ஒரு சினிமா, இரவு 9 மணிக்கு ஒரு சினிமா போடுவார்கள். இதில், 9 மணி சினிமா என்பது ப்ளூ ஃபிலிம்மாக இருக்கும். இதில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. இது மாதிரியான கலாச்சார சீர்கேடு நிகழ்வுகள் நடப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள். இதில் கிடைக்கும் வருமானத்தில் போலீசாருக்கும் ஒரு பங்கு செல்லும். சில நேரங்களில் மேலதிகாரி அழுத்தம் காரணமாக ரெய்டு நடத்த வேண்டிய கட்டாயம் போலீசாருக்கு ஏற்படும். அந்த நேரங்களில் ரெய்டு வரும் விஷயத்தை முன்கூட்டியே இவர்களிடம் தெரிவித்துவிடுவார்கள். 

 

50 பேர் கூடி ப்ளூ ஃபிலிம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இதனால் தாராவி பகுதிக்குள் நிறைய வன்முறைகள் நடந்தன. ஒருகட்டத்தில் இதை இழுத்து மூட வேண்டுமென பெண்களே போராட ஆரம்பித்துவிட்டனர். அதுபோக தாராவி தமிழர்களுக்குப் பெரிய சிக்கல், தமிழ்நாட்டுத் தமிழர்களாலும் இருந்தது. தமிழ்நாட்டில் ஏதாவது கொலை செய்துவிட்டு தாராவி பகுதிக்குள் வந்து பதுங்கிக்கொள்வார்கள். அப்படி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கென்றே அங்கு ஒரு கூட்டம் இருந்தது. இதனால், அடிக்கடி தாராவி பகுதிக்குள் போலீசார் வந்துசென்றனர். படம் பார்ப்பது, ரம்மி விளையாடுவது மாதிரியான பொழுதுபோக்குகள் மட்டுமே அங்கிருந்த மக்களுக்கு இருந்தன.

 

அதைத் தவிர்த்து, இலக்கியக் கூட்ட விழா நடந்தாலும் பெரும்பாலான மக்கள் அதில் பங்கெடுத்துக்கொள்வதில்லை. புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கக் கூடிய ஆட்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இருந்தாலும் வெறும் 20, 30 ஆட்கள் மட்டுமே இலக்கியக் கூட்டங்களில் வந்து நேரடியாகக் கலந்துகொள்வார்கள். அதுபோக அரசியல் ரீதியான பட்டிமன்றங்கள் நடைபெறும். திமுகவினர் வந்தால் ஜெயலலிதா அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா என தலைப்பு வைத்து நடத்துவார்கள். அதுவே அதிமுகவினர் வந்தால் கருணாநிதி அதிக அயோக்கியத்தனம் செய்தது ஆளும் கட்சியாக இருந்தபோதா, எதிர்க்கட்சியாக இருந்தபோதா எனத் தலைப்பு வைத்து நடத்துவார்கள். எங்களுக்கு இது சரியாகப்படவில்லை. ஒருமுறை இதுமாதிரியான பட்டிமன்ற நிகழ்வுக்கு வந்தவர்களிடம் அரசியல் பேச வேண்டாம்; அதற்குப் பதிலாக திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுங்கள் எனக் கூறினோம். முதலில் அவர்கள் தயங்கினாலும் பிறகு சம்மதித்துவிட்டனர்.

 

அப்படி ஏற்பாடு செய்யப்பட்ட திருக்குறள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, 'உண்மையோ பொய்யோ இதுவரை ஒரு தலைவனை தூற்றியோ புகழ்ந்தோதான் பேசியிருக்கிறோம். முதல்முறையாக திருக்குறள் பற்றி பேசுகிறோம் என விழாவிற்கு வந்த மூவருமே கண்கலங்கிவிட்டனர். அரசியல் பட்டிமன்றங்கள்தான் இப்படி ஆபாசமாக நடக்குமேயொழிய, இலக்கிய பட்டிமன்றங்கள் மிகக் கண்ணியமான முறையில் நடக்கும். சிலப்பதிகாரம் பற்றி பேசுகிறார்கள் என்றால் கண்ணகிக்கும் மாதவிக்கும் புகழ் பரப்பக்கூடிய அளவிலேயே விவாதங்கள் நடைபெறும். அந்த மாதிரியான தலைப்புகள்தான் தேர்ந்தெடுக்கப்படும். தற்போது இலக்கியக் கூட்டங்கள் எதுவும் அங்கு நடப்பதில்லை. 

 

அன்று பெரிய தலைவர்களாக இருந்த ஆட்களின் பெயர்களைக்கூட இன்றைய ஆட்கள் மறந்துவிட்டனர். தாராவி பற்றி தமிழ் சினிமாவில் கூறியதில் எதுவும் உண்மையில்லை. 'நாயகன்', 'காலா' படங்களில் காட்டியதுபோல எந்தச் சம்பவங்களும் அங்கு நடைபெறவில்லை. தற்போது வசிக்கும் இடத்தை விற்றுவிட்டு 30 லட்சம், 40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு புறநகர் பகுதியில் சென்று வசதியாக வாழலாம் என்று நினைத்துதான் தாராவியில் இருந்து தமிழர்கள் வெளியேறத்தொடங்கினார்கள். மராட்டிய அரசோ, மாநகராட்சியோ நம் மக்களைத் துரத்தவில்லை. சினிமாவிற்காகத் தமிழர்கள் அவர்களுக்கு கீழே அடிமையாக இருந்ததுபோல காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

 

தமிழர்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்றானது இந்த சம்பவத்திற்குப் பிறகுதான்! தாராவி கதைகள் #6