Skip to main content

மகுடம் யாருக்கு? க்ளைமேக்ஸில் சென்னை - குஜராத்

Published on 28/05/2023 | Edited on 28/05/2023

 

Who has the crown? Climax Chennai - Gujarat

 

16 ஆவது ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடந்த லீக் ஆட்டங்களில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. அதன்படி குஜராத், லக்னோ, மும்பை, சென்னை அணிகள் ப்ளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றது. முதல் குவாலிஃபயர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இதில் சென்னை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி வெற்றி பெற்று இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு தகுதி பெற்றது.

 

இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை குஜராத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி இமாலய வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. 

 

சென்னை அணி தனது 10 ஆவது ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று குஜராத்துடன் மோதுகிறது. 2011 ஆம் ஆண்டு முதல் நடந்த 12 இறுதிப் போட்டிகளில் 9 முறை குவாலிஃபயர் 1ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதலில் தகுதியான அணியே வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் குஜராத் அணி வலுவான அணியாகவே உள்ளது. குஜராத் அணி வெற்றிகரமான அணியாக இருப்பதன் காரணம் அந்த அணியின் பந்துவீச்சு. நடப்பு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஷமி (28), ரஷித் கான் (27), மோஹித் சர்மா (24) மூவரும் குஜராத் அணியில் உள்ளனர். அதேபோல் பேட்டிங்கிலும் சுப்மன் கில் அசத்தி வருகிறார். நடப்பு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் 3 சதம், 4 அரைசதம், 5 முறை 30+ ரன்கள் என மொத்தம் 851 ரன்களை எடுத்து சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 33 சிக்ஸர்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மற்றபடி ஹர்திக், சஹா, விஜய் சங்கர், சாய் சுதர்சன், டேவிட் மில்லர் என அனைவரும் நல்ல ஃபார்மிலேயே உள்ளனர். நினைக்கும் போதெல்லாம் சிக்ஸர் அடிக்கும் ரஷித் கான் இறுதி ஓவர்களில் குஜராத் அணியின் நம்பிக்கையாக இருப்பார்.

 

சென்னை அணியை பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ், கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்து வருகிறார்கள். சென்னையின் கேப்டன் தோனி மிக முக்கியமான போட்டிகளில் ப்ளேயிங் 11ல் மாற்றத்தை கொண்டு வருவார். அல்லது ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் யாரும் எதிர்பாரா வகையில் சில திட்டங்களை செயல்படுத்துவார். அவர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டபோதும் ஐபிஎல் போட்டிகளிலும் இதுபோன்று பலமுறை செயல்படுத்தியுள்ளார். இது சில முறை பயன் தராமல் இருந்தாலும் பலமுறை தோனிக்கு வெற்றிகரமான ஒன்றாகவே அமைந்துள்ளது. அதேபோல் இன்றும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். மற்றபடி பந்துவீச்சில் தேஷ்பாண்டே (21), பதிரானா(17), சாஹர்(12), ஜடேஜா(19), மொயின் அலி (9), தீக்‌ஷனா (11) நல்ல ஃபார்மிலேயே உள்ளனர்.

 

குஜராத் மைதானத்தை பொறுத்தவரை நடப்பு சீசனில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி 193 ரன்களாக உள்ளது. இதில் 5 போட்டிகளில் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக உள்ளதால் இரு அணியும் முதலில் பேட்டிங் செய்வதையே விரும்பும். எனவே இன்றைய போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பாதிப்பு இருக்காது.

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

சோதனை மேல் சோதனை; ஹர்திக் பாண்டியாவுக்கு விபூதி அடித்த சகோதரர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Police action Hardik Pandya's brother for Money laundering case

முன்னணி இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருபவர் ஹர்திக் பாண்டியா. முன்னதாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த ஹர்திக் பாண்டியா அந்த அணியிலும் கேப்டனாகத் தொடர்ந்தார். ஆனால், மும்பை அணியின் நட்சத்திர வீரர், ரோகித் ஷர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு சென்றதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ஆண்டு கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு மோசமான வரவேற்பு கிடைக்கிறது. ஆனாலும், ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா தன் சகோதரர் ஒருவரால் மேலும் ஒரு பிரச்சனைக்கு ஆளாகி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவின் உடன்பிறந்த சகோதரர் க்ருணால் பாண்டியா. இவரும் இந்திய அணியிலும், ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் சகோதரர்கள் இருவரும் பிஸினஸிலும் காலூன்ற நினைத்துள்ளனர். அதற்கு பாண்டியா சகோதரர்களின், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா துணையாக வந்துள்ளார். மூவரும் சேர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ‘பாலிமர்’ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் என்றும், ஒன்றுவிட்ட சகோதரர் வைபவ் பாண்டியா 20 சதவீதம் என்றும் முதலீடு செய்தனர். ஒப்பந்தத்தில் லாபத்தையும் இதே விகிதத்தில் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்து கொண்டனர். இதில், ஹர்திக் மற்றும் க்ருணால் இருவருமே முழு நேர கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சகோதரர் வைபவ் பாண்டியா எடுத்துக்கொண்டுள்ளார்.

Police action Hardik Pandya's brother for Money laundering case

இதனையடுத்து வைபவ், தனது இரு சகோதரர்களுக்கும் தெரியாமல் அதே தொழிலில் ஈடுபடும் மற்றொரு நிறுவனத்தை ரகசியமாக துவக்கியுள்ளார். இது ஹர்திக், க்ருணால் பாண்டியாக்களுடன் செய்து கொண்ட ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர் செய்ததாக கூறப்படுகிறது. மறுபுறம், சகோதரர்கள் மூவரும் இணைந்து கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனத்தின் லாபம் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. இதைக் கவனித்த ஹர்திக் பாண்டியா என்ன பிரச்சனை என நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்துள்ளார். அதில், ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் வைபவ் சொந்தமாக தனி நிறுவனத்தை தொடங்கி இருப்பது தெரிய வந்ததுள்ளது. தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி, பாண்டியா சகோதரர்கள் புது நிறுவனத்தைத் தொடங்கிய நிலையில், அவரே இப்படி செய்தது பாண்டியா சகோதரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைபவ் பாண்டியா ரகசியமாக புதிய கம்பெனி தொடங்கியதால் பழைய கம்பெனிக்கு 3 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஹர்திக் பாண்டியாவிடம் சொல்லாமல் பழைய கம்பெனியில் தனக்கான லாபத்தின் சதவீதத்தை 20 சதவீதத்தில் இருந்து 33.3 சதவீதமாக வைபவ் அதிகரித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அத்துடன் முதலில் மூன்று பேர் சேர்ந்து தொடங்கிய கூட்டு நிறுவனத்தில் கிடைத்த பணத்தை அடிக்கடி தனது சொந்த நிறுவனத்திற்கு வைபவ் மாற்றிக் கொண்டுள்ளார். பாண்டியா சகோதரர்களுக்கு தெரியாமல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை வைபவ் மாற்றியதாக தகவல் சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வந்த அதிர்ச்சி பின்னணி முழுமையாக தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தன்னை ஏமாற்றிய வைபவிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும், உடனே உனது பெயரை களங்கப்படுத்திவிடுவேன் என்று ஹர்திக் பாண்டியாவை வைபவ் மிரட்டியதாக தகவல் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ஒன்று விட்ட சகோதரரால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா, வைபவிற்கு எதிராக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வைபவை கைது செய்து 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரித்து வருகின்றனர். வைபவ் மொத்தம் 4.3 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக ஹர்திக் பாண்டியா தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகே, மோசடி சம்பவம் குறித்து தகவல்கள் முழுமையாக தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரருக்கு சகோதரரால் நடந்த  மோசடி, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.