Skip to main content

டி20 உலகக்கோப்பைக்கு யார் கேப்டன்? ரசிகர்களைக் குழப்பிய இந்திய அணித்தேர்வு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
 Who is the captain of T20 World Cup? Indian team selection that confused the fans

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை ஒரு வெற்றியுடன் சமன் செய்துள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் அனுபவ வீரர்களான ரோகித் மற்றும் கோலி மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஒரு வருட காலமாக டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ரோகித் மற்றும் கோலி அணியில் இடம் பெற்றிருப்பது அவர்கள் உலகக் கோப்பை டி20 அணியிலும் இடம் பெறுவார்கள் என்ற சமிக்ஞையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

இனி டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகள் அவ்வாறாக இருந்தது. தொடர்ந்து ரோகித் மற்றும் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பாண்டியாவும் அதன் பிறகு சூரியகுமார் யாதவும் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.

உலகக்கோப்பை போட்டிகள் உடன் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் ஒரு நாள் அணியிலிருந்து ஓரம் கட்டப்படுவார்கள் என்ற பேச்சும் எழுந்தது. இனி டி20 அணிக்கு இளம் வீரர்கள் கொண்ட அணியே தேர்ந்தெடுக்கப்படும் என்கிற வகையில் தான் கடந்த ஒரு வருட காலமாக இந்திய அணியின் தேர்வுக்குழு செயல்பட்டது. இந்நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு: ரோஹித் (கே), கில்,  ஜெய்ஸ்வால், விராட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா , சஞ்சு சாம்சன்,  ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல்,  ரவி பிஷ்னாய், குல்தீப், அர்ஸ்திப் சிங், ஆவேஸ் கான்,  முகேஷ் குமார்.

அதில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டதும் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா தான் உலகக் கோப்பை டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என்று பரவலாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், தற்போது இந்திய டி20 அணிக்கு மீண்டும் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஹர்திக் காயத்தில் இருப்பதால் ரோகித் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் எனவும், ரோகித் மற்றும் கோலி இல்லாத ஒரு அணியை இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்கிற பயமும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதனால் அவர்கள் இருவரும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோகித் சர்மா ரசிகர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- வெ.அருண்குமார் 

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

“விளையாட்டுத்துறையில் தலைசிறந்த  மாநிலமாக தமிழகம் உள்ளது”-  அமைச்சர் ஐ.பெரியசாமி 

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் பள்ளியில்  கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு  மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, திருக்குறள், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில்  வெற்றி பெற்ற 30 மாணவ-மாணவிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை  அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

இந்த விழாவில் உணவு மற்றும் வழங்கல்துறை  அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின்  சென்னையில் 180 உலக நாடுகள் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திக் காட்டினார். அதே போல இளைஞர்  நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தேசிய,  மாநில ஆசிய விளயாட்டு போட்டி மற்றும் பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி  பெற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கி  சிறப்பித்து வருகிறார். இன்று சென்னையில் தொடங்கும் கேலோ  இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்  கொள்கிறேன்” என்றார்.

 Tamil Nadu is the best state in the field of sports says Minister I.Periyasamy

இறுதியாக பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்  ஐ.பெரியசாமி பேசும்போது, “சென்னை, மதுரை, திருச்சி, கோவை  ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற  உள்ளது. தமிழகத்தில் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டுத்துறைக்கும்,  முதலமைச்சர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். விளையாட்டுத்துறையில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கால்பந்து, கபடி போட்டிகளில் மிக சிறந்த மாணவர்கள் உள்ளனர். விளையாட்டுத்துறையில் ஆர்வம் உள்ள  மாணவர்கள் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்று நமது  மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்” என கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை  வகித்தார். மாவட்ட எஸ்பி. பிரதீப், பழனி சட்டமன்ற உறுப்பினரும்,  கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி, துணை மேயர் ராஜப்பா, மாநில வர்த்தகர் அணி இணைச்  செயலாளர் ஜெயன், திண்டுக்கல் வடக்கு ஒன்றிய செயலாளர்   நெடுஞ்செழியன், திண்டுக்கல் மாநகர பகுதி செயலாளர்களான  ராஜேந்திரகுமார், ஜானகிராமன்,  சந்திரசேகர் உள்பட கட்சிப்பொறுப்பாளர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.